Monday, August 10, 2009

மழையாய்....

உன் கவிதைகளுக்கு
நான் பதிலிடுவதில்லை
என்று கோபப்படுகிறாய்


உன் கவிதைகளின்
ரசிகன் நான்
மௌன ரசிகன்


அமைதியாய் ரசித்து
உள்ளுக்குள் சிரித்து
சிலிர்த்து பத்திரப்படுத்துகிறேன்
உன் கவிதைகளை


சில சமயம் ஆச்சர்யத்தில்
உறைந்து போவதுண்டு
உன் சொல்லாடல்கள் கண்டு


அள்ள அள்ள குறையாத
காதல் உன்னிடமிருந்து
வார்த்தைகளாய்ப் பெருக்கெடுத்து
மழையாய் நனைக்கிறது


நனைகிறவர்கள் அறிவார்களா
அந்த மழை நான் தான் என்பதை

Sunday, August 09, 2009

எதிர்கால இந்தியா

தம்பி வந்து கேட்டான்
எதிர்கால இந்தியா
இது தான் தலைப்பு
ஒரு கவிதை வேணும் எனக்கு

குழம்பித்தான் போனேன்
எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்த போது

குழப்பத்திலேயே தூங்கிப் போனேன்
கனவாக விரிந்தது எதிர்கால இந்தியா

பளபளக்கும் சாலைகள்
விண்ணை முட்டும் கட்டிடங்கள்
சாலைகளிலே தரைக்கு மேலே என
எங்கும் வாகனங்கள்
அளவான இறுக்கமான உடையோடு பெண்கள்
அதே போன்ற உடையில் ஆண்கள்
பரபரப்பான வாழ்க்கை எங்கும் எதிலும்

தொலைப்பேசி அலைப்பேசி இல்லாமல்
காதோடு பொருத்திய குட்டிக் கருவி
தகவல் சுமந்து சென்றது

காற்றில் கணினி விரிந்து
முன்னேற்றம் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்

என்ன சாப்பிடுகிறார்கள் இவர்கள்
சற்றே இக்கேள்வி வந்து
மூளையைக் குடைந்தது

அருகில் இருக்கும் உணவகம் சென்றேன்
வகை புரியா உணவுகள்
விதவிதமான நிறங்களில்

தேடிப் பார்த்தேன்
தூரத்தில் ஒருவர்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்
எனக்குப் பிடித்த சோறு

ஊரைச்சுற்றலாம் என்று நினைத்து
திரும்பிய போது வாகனம் ஒன்று
நெருங்கி நின்றது

அடுத்த ஊருக்குச் செல்லுமாம்
இலவச பயணமாம்
வழியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாமாம்
ஏறி அமர்ந்தேன்

நகரத்தின் பளபளப்பு கொஞ்சமாய் மறைந்து
இயல்பாய் விரிந்தது கிராமத்துச் சூழல்
இறங்கிக் கொள்கிறேன் இங்கே என்றேன்
ஏளனப்பார்வைகள் முகத்தைக் கூறுபோட
கேள்விக்குறியோடு இறங்கிப்போனேன்

என்னென்ன மாற்றங்கள் இங்கே
இருக்கின்றன என்று தேடிய போது

அங்கே உணவுக்காக எலி தேடியபடி விவசாயி......