Tuesday, December 29, 2009

பயணங்கள்

நகரும் மரங்களின்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது

வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது

மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது

என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...

Wednesday, December 23, 2009

நிகழ்வுகளோடு

வாழ்க்கை எனக்கு எப்போதுமே பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு... நான் அதுல கத்துக்குறது தான் குறைவு. என்னோட வாழ்க்கை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்ன வரைக்கும் நான் தீர்மானிச்சதா தான் இருந்துச்சு. படிப்பு, வேலை, குறிக்கோள், அப்புறம் அதை கைவிட்டது, குறிக்கோள் மாறியது எல்லாமே. ஆனா கடந்த ஒன்னரை ஆண்டுகளாக அதுவும் தொழில் ஆரம்பிச்ச பிறகு எல்லாமே என் கையை மீறிப் போகிற விஷயங்களாகத்தான் இருக்கு. அது என் தொழிலாகட்டும், பண விஷயமாகட்டும், உறவுகளோடு இருக்கும் நெருக்கமாகட்டும், தோழிகளில், நண்பர்கள் என எல்லாமே, எல்லோருமே கொஞ்சம் தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு.

2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.


வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...

Thursday, December 10, 2009

தோழி நினைவுகள் - 1

நேசக்கரங்கள் நீட்டினாய்

இருளின் பிடியிலிருந்து

விடுவித்துக்கொள்ள



ஆதரவுக் கரம்பற்றி

வெளிச்சத்தின் திசைகளை

எட்டிப்பிடித்தாய்


புள்ளியாய்த் தொடங்கிய

வெளிச்சம்

பேரண்டமாய் ஆட்கொண்டது



அங்குல அங்குலமாய்

திசைகளை அளந்தாய்

வெளிச்சத்தின் நீட்சியை

எங்கும் பரவச் செய்தாய்



அளவற்ற அன்பு

உள்ளங்களில் பரவச் செய்தாய்

கண்களிலே கருணை

பொங்கச் செய்தாய்



உன்னைச் சந்திக்கும்

தேதிகளில் எல்லாம்

என் நாட்குறிப்பில்

பூக்கள் பூக்கச் செய்தாய்



வண்ணங்கள் தீட்டப்பட்ட்

ஓவியமாய்

உன்னைச் சந்தித்தவர்கள்

வாழ்க்கை மாறியது



சட்டென்று ஒரு நாள்

தோள்சாய கிடைத்திருக்கிறான்

தோழன் ஒருவன்

ஒன்பதாம் திசையில் இருந்து

என்றாய்

எங்கள் கைகளை

உதறிவிட்டு தனித்துச் சென்றாய்



கணக்கில் வராத அந்தத் திசை

இருளின் அரசாங்கமென

எச்சரிக்க வாயெடுத்தேன்

காதுகளைப் பொத்திக் கொண்டாய்

இப்போது கவிதை எடுத்திருக்கிறேன்

கண்களை மூடிவிடாதே.

Monday, November 23, 2009

தீர்க்கப்படாத கணக்கு

மணிக்கணக்காய்
பேசிவிட்டு
கிளம்பும் போதும்
ஏதோ மிச்சம் வைத்திருப்பதாகவே
தோன்றுகிறது.
கொஞ்சம் சேமித்து வைத்திருக்கும்
முத்தங்களைக் கொடுத்து
கணக்கை தீர்த்துவிட்டு போ


******


இன்னும் கொஞ்சம்
என்று நான் கேட்க
முடியாது போடா
என்று நீ தள்ள
ஹீம்ம்ம்ம்ம்
கோபித்துக் கொண்டு
தள்ளிப் போய்
நாற்காலியில் அமர்ந்தேன்
சிரித்துக் கொண்டே
பின்னால் வந்து
கட்டிக்கொண்டு
இந்தா என்று அள்ளிக் கொடுத்தாய்
முத்தங்களை

Friday, October 30, 2009

நான் - எனது நீட்சி

முட்கம்பிகளுக்குள்
வாழ்க்கையைத் தொலைத்து
தேசம் இழந்து
அகதியாய்
நிர்கதியாய்
நிர்வாணமாய் நிற்கிறது
சொந்தங்கள்
தினம் தினம்
செய்திகள்
இவ்வளவு
படித்த பிறகும்
உன் முத்தத்தின்
தித்திப்பு என்று
கூசாமல் அடுத்த
கவிதை பற்றி சிந்திக்கிறது
சுரணையற்ற மனது


******

நாண்டுக்கிட்டு செத்து போகலாம்டே
என்று மனசாட்சி சொல்கிறது
ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
மாட்டிக்கொண்டு
கூனிக் குறுகி
கையூட்டுக் கொடுத்த
நிமிடங்களை
நினைக்கும் போது

Wednesday, October 14, 2009

வலைப்பக்கத்தில் மூன்று ஆண்டுகள்

நேத்தோட இந்த வலைப்பக்கம் ஆரம்பிச்சு மூனு வருஷம் முடிஞ்சு போச்சு... சம்பிரதாயத்துக்கு ஒரு கவிதையோ இல்லை இது மாதிரி ஒரு அறிவிப்போ போடலாம்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன். நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வண்டியில போகும் போது தான் ஞாபகம் வந்துச்சு. சரி நாளைக்கு போட்டுக்கலாம்னு நினைச்சு விட்டுட்டேன். இன்னிக்கும் மறந்துட்டேன். இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. வலைப்பக்கம் ஆரம்பிச்சு பெருசா ஏதும் சாதிக்கல. நானும் ஒன்னு வச்சிருக்கேன் பாருன்னு மத்தவுங்களுக்கு காட்டத்தான் வலைப்பக்கம் ஆரம்பிச்சேன். என் கல்லூரி கால கவிதைகளில் சிலவற்றை எடுத்து தூசி தட்டி அன்புத்தோழி என்ற பெயரில் கவிதை போட்டேன். கல்லூரி காலத்துல எழுதின பலவற்றை வலைப்பக்கம் ஆரம்பிக்கும் போது பாத்தா பல கவிதைகள் எனக்கு பிடிக்கல. கல்லூரி படிக்கும் போது நான் கவிதை எழுதுவேன்னு மமதையோட திரிஞ்ச காலம் அது. வைரமுத்துவின் சாயல் இருக்கும் கவிதைகளில். நெடிய கவிதைகள் அவை. சென்னை வந்து பெரிய பெரிய ஆட்களின் கவிதைகளைப் பார்த்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். என்னடா இது என்று. நாமெல்லாம் இன்னும் வளரனும் போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டேன்.

கூகுள் குழுமங்களின் அறிமுகம் எனக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுத்த்து. வலைப்பதிவாளர்களைச் சந்தித்த போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் நீ இன்னும் கிழிக்க வேண்டியது நிறைய இருக்குடா என்று... சமீபத்தில் எழுதிய கவிதையை என் குழுமத்து அண்ணன் ஒருவர் பார்த்துவிட்டு சொன்னார். தேறிட்டடா என்று. கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

இப்போ நினைச்சுக்குறேன் டேய் மவனே இன்னும் ஒழுங்கா எழுது.. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு சமூக அக்கறையோட எழுதுன்னு. கல்லூரி காலம் தான் அதிக சமூக அக்கறையுள்ள கவிதைகளைக் கொடுத்தன. அதன் பிறகு வழக்கமான வாழ்க்கையில் சுற்றுத்திரிந்து அதைப் பற்றி மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். சமீபத்தில் எழுதிய கவிதையில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த கவிதை ஈழம் சார்ந்த ”புதைந்து போன கனவுகள்” என்ற கவிதையும், ”கதறல்” கவிதையும் தான். கதறல் கவிதை என்னோட அனுபவம். ஈழம் சார்ந்த அந்தக் கவிதைகளை முடித்த போது ரொம்ப நாளா மனசில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த மாதிரி ஒரு அனுபவம்.

இந்த மூன்றாவது வருடம் எனக்கு நல்ல நண்பர்களையும், என் கவிதைகளையும் படித்து கருத்து சொல்லி நல்லா இருக்குன்னு உற்சாகப்படுத்தின நண்பர்களையும் பெற்றுத் தந்தது. எனக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்கள் எனக்கு மிகப்பெரிய பலம்.

சரி... மீண்டும் அடுத்த வருஷம் நான் என்னத்தை கிழிச்சேன்னு மறுபடி கொஞ்சம் பார்க்கலாம். பை.....

உடைதல்

அந்த சின்னஞ்சிறு
பொம்மை உடைந்து
போனதற்கு
இவ்வளவு வருத்தப்படும்
நீ
கொஞ்சம்
என் மனதையும்
கணக்கில் எடுத்திருக்கலாம்....

Monday, October 12, 2009

நீ - 5

அடித்து
திருத்தி
கிழித்து
எறியப்பட்ட
வார்த்தைகள்
மீண்டும் சேர்க்கச் சொல்லி
கெஞ்சுகின்றன
உன்னைப் பற்றிய
கவிதையில்.


****


இந்த உலகத்திலேயே
நான் அதிகம் நேசிப்பது
உன்னைத் தான் என்கிறாய்
இதைப் பொய்யெனச்
சொல்லிவிட்டு போகிறது
பதிலளிக்காது போகும்
உனக்கான என்
அலைப்பேசி அழைப்புகள்

Thursday, October 08, 2009

நீளும் நாட்கள்

திரும்பிய பக்கமெல்லாம்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....

Thursday, October 01, 2009

அழியாத நினைவுகள்

எத்தனை முறை
அழிக்க முற்பட்டாலும்
மீண்டும் கண் முன்
வந்து நிற்கிறது
வண்டி ஏற்றி
காலை உடைத்த
நாய்க்குட்டியின்
கதறல்

Monday, August 10, 2009

மழையாய்....

உன் கவிதைகளுக்கு
நான் பதிலிடுவதில்லை
என்று கோபப்படுகிறாய்


உன் கவிதைகளின்
ரசிகன் நான்
மௌன ரசிகன்


அமைதியாய் ரசித்து
உள்ளுக்குள் சிரித்து
சிலிர்த்து பத்திரப்படுத்துகிறேன்
உன் கவிதைகளை


சில சமயம் ஆச்சர்யத்தில்
உறைந்து போவதுண்டு
உன் சொல்லாடல்கள் கண்டு


அள்ள அள்ள குறையாத
காதல் உன்னிடமிருந்து
வார்த்தைகளாய்ப் பெருக்கெடுத்து
மழையாய் நனைக்கிறது


நனைகிறவர்கள் அறிவார்களா
அந்த மழை நான் தான் என்பதை

Sunday, August 09, 2009

எதிர்கால இந்தியா

தம்பி வந்து கேட்டான்
எதிர்கால இந்தியா
இது தான் தலைப்பு
ஒரு கவிதை வேணும் எனக்கு

குழம்பித்தான் போனேன்
எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்த போது

குழப்பத்திலேயே தூங்கிப் போனேன்
கனவாக விரிந்தது எதிர்கால இந்தியா

பளபளக்கும் சாலைகள்
விண்ணை முட்டும் கட்டிடங்கள்
சாலைகளிலே தரைக்கு மேலே என
எங்கும் வாகனங்கள்
அளவான இறுக்கமான உடையோடு பெண்கள்
அதே போன்ற உடையில் ஆண்கள்
பரபரப்பான வாழ்க்கை எங்கும் எதிலும்

தொலைப்பேசி அலைப்பேசி இல்லாமல்
காதோடு பொருத்திய குட்டிக் கருவி
தகவல் சுமந்து சென்றது

காற்றில் கணினி விரிந்து
முன்னேற்றம் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்

என்ன சாப்பிடுகிறார்கள் இவர்கள்
சற்றே இக்கேள்வி வந்து
மூளையைக் குடைந்தது

அருகில் இருக்கும் உணவகம் சென்றேன்
வகை புரியா உணவுகள்
விதவிதமான நிறங்களில்

தேடிப் பார்த்தேன்
தூரத்தில் ஒருவர்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்
எனக்குப் பிடித்த சோறு

ஊரைச்சுற்றலாம் என்று நினைத்து
திரும்பிய போது வாகனம் ஒன்று
நெருங்கி நின்றது

அடுத்த ஊருக்குச் செல்லுமாம்
இலவச பயணமாம்
வழியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாமாம்
ஏறி அமர்ந்தேன்

நகரத்தின் பளபளப்பு கொஞ்சமாய் மறைந்து
இயல்பாய் விரிந்தது கிராமத்துச் சூழல்
இறங்கிக் கொள்கிறேன் இங்கே என்றேன்
ஏளனப்பார்வைகள் முகத்தைக் கூறுபோட
கேள்விக்குறியோடு இறங்கிப்போனேன்

என்னென்ன மாற்றங்கள் இங்கே
இருக்கின்றன என்று தேடிய போது

அங்கே உணவுக்காக எலி தேடியபடி விவசாயி......

Tuesday, July 28, 2009

கவிதைகள்

கவிதைகள் என்று
தலைப்பிருந்தாலே
கொஞ்சம் தள்ளி
நின்று கொள்கிறேன் நான்


முதல் சந்திப்பு
என்னவள், காதல் தோல்வி
ஏய் இளைஞனே
என்ற வார்த்தைகள்
ஒவ்வாது போகின்றன.


சபித்துக் கொண்டே
அழிக்கிறேன்
நீண்ட கவிதைகள்
தாங்கிய மின்னஞ்ல்களை


என் கவிதையும்
இன்னொருவருக்கு
இப்படித்தான்
என்று நினைக்கையில்
எழுத எடுத்த பேனாவை
மூடி வைத்துவிட்டேன்

Wednesday, July 22, 2009

புதைந்து போன கனவுகள்

அவசரத்தில் விட்டு வந்த
மரப்பாச்சிக்கு அழும்
தங்கைக்குத் தெரியவில்லை
அதைத் திருப்பி எடுக்கப் போன
அண்ணன் பிணமாய்க் கிடப்பது


*******


தொலைந்து போனவர்களின்
பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
விடுபட்டவர்களின் பெயர்களைச்
சொல்லி அழுது கொண்டிருந்தனர்
பக்கத்தில் நின்றவர்கள்
நாளை என் பெயர்
பட்டியலில் இருக்குமா?
விடுபட்டு போயிருக்குமா?
தெரியவில்லை எனக்கு
பட்டியலில் இருந்தால் பார்ப்பதற்கும்
விடுபட்டால் அழுவதற்கும்
யார் இருக்கிறார்கள்?
நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன்
தூக்கம் கலைத்தது
நெருங்கி வரும் பூட்ஸ் காலடி ஓசை....


*****


எங்கள் வாழ்க்கையை
புதைத்துக் கனவுகளைக்
கட்டியெழுப்பிக் கொண்டிருந்தோம்
இப்போது சரிந்து கிடப்பவை
இன்றைய கோபுரங்களா
நாளைய கனவுகளா???

Thursday, July 16, 2009

மழைக்காலம்

எப்போதாவது
உயிருக்குள் ஊடுருவி
நனைத்துச் செல்லும்
மழையை ஒத்ததாய் இருந்தது
நீ எனக்கு அனுப்பிய
குறுஞ்செய்தி

*****

நீ இல்லாத மாலைப் பொழுதில்
உன் நினைவுகளை
அசைபோடச் சொல்லி
என்னைத் தூண்டியபடி
இப்போதும் பெய்கிறது மழை

*****

என் நாட்குறிப்பின்
பக்கங்களுக்கு வண்ணம்
தீட்டியபடி செல்கின்றன
உன்னைச் சந்தித்த
பொழுதுகள்

*****

ஏதுமல்லாத
வெறுமையின் தருணங்களில்
இயல்பாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்

நாட்குறிப்பில்
சொல்லப்படாத மௌனங்களின்
நேரங்களில் இட்டு
நிரப்பப்படுகிறது உன்
ஸ்பரிசத்தின் கணங்கள்

******

முன்னறிவிப்பு இல்லாத
திடீர் சந்திப்புகளின்
ஆச்சர்யங்களுக்குள்
அடங்கி இருக்கிறது
அழகான நம் நட்பு

******

Thursday, June 18, 2009

மாசிலாமணி – இம்சை அரசன்

இன்னிக்கு என்னோட பிறந்தநாள். என் பிறந்தநாளை எப்போதும் நான் கொண்டாடியது இல்லை, என் அம்மாவும், என் நண்பர்களும் தான் கொண்டாடுவார்கள். தஞ்சையில் எனக்கு இருந்த நண்பர்கள் அனைவரும் சென்னையில் இருக்கின்றன்ர், இருவரைத் தவிர என் தோழியும் என் தோழன் கிஷோரும். இந்தமுறை என்னோட பிறந்தநாளைச் சிறப்பா கொண்டாடனும்னு முடிவெடுத்து இருந்தா என் தோழி. காலையில் என் அலுவலகம் வந்தார்கள் இருவரும். ஏன் என்னன்னு கேக்க கூடாது உடனே கிளம்பு என்றனர். சரியென்று கிளம்பினேன். இரண்டு பேக்கரி சென்று அலைந்து ஒரு வழியாக எனக்கு கேக் வாங்கிக்கிட்டு கிளம்பினாங்க. என்கிட்ட கேக் வாங்கனும்னு சொல்லி இருந்தா அலையாம நம்ம அலுவலகம் பக்கத்துலேயே வாங்கி இருக்கலாமே என்றேன். அதற்கு ஒரு முறைப்பு தான் பதிலாக வந்தது.

எங்கடா போறோம்னு கேட்டா முறைச்சு பாத்து அமைதியா வான்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாங்க. மேம்பாலத்தை விட்டு இறங்கும் போது கொஞ்சம் கூட யோசிக்காம சரட்டுன்னு வலப்பக்கம் திரும்பினா என் தோழி, என்னடா இது பிறந்தநாள் அன்னிக்கு பிரச்ச்னையில மாட்டி விட்டுடுவாளோன்னு நினைச்சு கொஞ்சம் பொறுமையா வண்டிய திருப்பினேன். அவ வண்டிய நிறுத்தின இடம் அட்லாப்ஸ் தியேட்டர். இப்போ தான் படம் ஆரம்பிச்சுச்சு என்றார்கள். உள்ளே கேக், தீப்பெட்டி அனுமதி இல்லை என்றனர். இன்னிக்கு இவரோட பிறந்தநாள் தியேட்டர்ல கேக்வெட்டி கொண்டாடனும்னு சொன்னதும் தியேட்டர்காரன் சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டான். ஆஹா இன்னிக்கு நாம அவ்ளோ தான், ஊர்காரங்க கிட்ட உதை வாங்கனும் போலன்னு நினைச்சுகிட்டு உள்ளே போனேன். இப்போ வெட்டக் கூடாது கொஞ்ச நேரம் படம் ஓடினதும் வெட்டுங்கன்னு சொன்னான் தியேட்டர்க்காரன். இப்போ உதை வாங்குனா என்ன கொஞ்ச நேரம் கழிச்சு உதை வாங்குனா என்ன, எப்படியும் உதை உறுதின்னு நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனா என்னை காப்பாத்திடுச்சு இந்தப் படம். உள்ளே நுழையும் போது கதாநாயகன் அறிமுகப் பாடல் ஓடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் மொக்கையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது, தொடர்ச்சியா கதாநாயகி அறிமுகம். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு அந்தப் பொண்ணை கொஞ்சம் சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பத்தி நிமிஷத்துல என் தோழி நண்பா மன்னிச்சிடு உன் பிறந்தநாள் அதுவுமா இப்படி ஒரு பெரிய மொக்கை படத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வந்திருக்க கூடாதுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா. வந்ததும் போகக் கூடாதேன்னு நினைச்சுக்கிட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கலாம், இயக்குனர் ஏதாச்சும் செஞ்சிருப்பார்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது வரிசையா ரெண்டு காட்சிகள் ஒன்னு வடிவேலுவைக் காலிங்பெல் அழுத்தச்சொல்லி ஒரு குழந்தை மாட்டி விடுமே அந்தக் காட்சி இதில் வந்தது வடிவேலுவுக்கு பதில் சந்தானம் அண்ட் கோ. அடுத்து தம்பி படத்துல ஹீரோயின் நடனம் ஆட முடியாம ஹீரோ ஒருத்தனை அடிச்சு அந்த நடன நிகழ்ச்சி நின்னு போயிடுமே அதை நினைவு படுத்தும் காட்சி, ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் தான் மாற்றம். கொஞ்சம் கூட சொந்தமா யோசிக்க மாட்டாய்ங்களான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது இவுங்க இரண்டு பேரையும் பார்த்தேன். ஒரு அரை மணி முடிஞ்சிடுச்சு இன்னும் ஒரு அரைமணி நேரம் இருக்கலாம்னு சொன்னாய்ங்க. சரி இருக்கலாம்னு நினைச்சேன். பத்து நிமிஷத்துல நண்பா கிளம்பலாம்னு சொன்னா என் தோழி. சரி இதுக்கு மேல வேணாம்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம். கேக் என்னோட அலுவலகத்தில் பிறகு வெட்டப்பட்டது.

படம் ஆரம்பிச்சு சரியா 40 நிமிஷத்துல வெளியேறிட்டோம்.. என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெளியேறியது... என்ன நினைச்சுக்கிட்டு இயக்குனர்கள் இந்தமாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியல. இவனுங்க யார்க்கிட்டயாவது உதவி இயக்குனரா பணியாற்றினா நல்லா இருக்கும். இல்லைன்னா திரைக்கதை எழுதுவது எப்படின்னு தெரிஞ்சுகிட்டு வரட்டும். நடிக்கும் அனைவருமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்லாம செயற்கையாகவே பேசுகின்றனர் ஆரம்பத்தில் இருந்து. காமெடி என்ற பெயரில், சந்தானம், கருணாஸ், பாஸ்கர் என எல்லோருடைய மொக்கையும் சராசரிக்கு மிகக் கீழே. இதையெல்லாம் ஒரு படம்னு ரிலீஸ் பண்ணி, வெற்றிப்படம், வெற்றி நடைன்னு போட்டு நம்மையெல்லாம் ஏமாற்றும் சன்பிக்சர்ஸ் வாழ்க...

Sunday, May 31, 2009

மீண்டும்

கைகோர்த்துக்கொண்டு
நடந்து இந்தச் சாலையின்
நீள அகலம் அளந்த
காலமெல்லாம் சட்டென்று
தோன்றி மறைந்தது கண்முன்

எதிரெதிரே நீயும் நானும்
குறுக்கே சாலை
உன் பார்வையின்
வீச்சு தாங்க முடியாமல்
கண்களை மூடிக்கொண்டேன்

பிரிவுகள் ரணமானவை என்று
நம் பிரிவு தான் எனக்கு
உணர்த்தியது...

தவறான புரிதல்கள்
உன்னை என்னிடமிருந்து
அன்னியப்படுத்திடும் என்று
எதிர்பார்த்திருக்கவில்லை

உன் நிராகரிப்புகளால்
நொறுங்கிப்போனது என் மனம்
மட்டுமல்ல அலைப்பேசிகளும் தான்


தோளோடு அணைத்துக்கொண்டு
காதோடு ரகசியம் பேசி
விழிகளில் கவிதைகள் சுமந்து
அங்குலம் அங்குலமாக அளந்த
சாலையல்லவா இது.....

வாகனத்தின் பேரிரைச்சல்
என்னை நினைவுக்கு அழைத்து வருகிறது

அதே இடத்தில் மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்
என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்
கண்களில் ஆச்சர்யம் சுமந்து

பேசலாமா யோசனையோடு
பார்க்கிறேன் நான்
பேச மாட்டாயா என்கிறது
உன் பார்வை
உனை நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்

”ஹாய்...” என்றேன்

”ஹாய்” என்றாய்

”எப்படி இருக்க??? ”

”நல்லா இருக்கேன்... நீ?”

”ம்ம்ம் இருக்கேன்.. ”

”ஒரு கப் காபி?” என்றேன்

”கண்டிப்பா.... ரொம்ப நாள் ஆச்சு...” என்றாள்

வழக்கமாய் செல்லும் கடைக்குச் சென்று வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்தோம்

”என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ” என்றாய்

”அதே கம்பெனி தான்...... நீ?”

”போன வாரம் தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்... ” என்றாய்

“இந்தப் பக்கம் ?”

“கொஞ்சம் பொழுது போகல, கொஞ்சம் மனசும் சரியில்ல... இந்த சாலை ரொம்ப பிடிச்ச சாலை.. அதான் ஒரு சின்ன வாக் போகலாம்னு... நீ எங்க இந்தப் பக்கம்??” கேட்டாய்....

”நான் எப்போ ப்ரீயா இருந்தாலும் இந்த சாலையில ஒரு வாக் போவேன்... நாம கைகோர்த்துக்கிட்டு நடந்தது நினைவுக்கு வரும், கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்... ”

”ம்ம்ம்ம்” ஆமோதித்தாய் அழகாக

அமைதியார் காபி அருந்தினோம்.. அளவாய் பேசினோம்... நலம் விசாரிப்புகள் முடிந்தன...

“சரி கிளம்பலாமா?” என்றேன்....

“ ம்ம்ம் போகலாம்... என்றாய்... சற்று நடந்தவள் திரும்பி கேட்டாய்..... உன் அலைப்பேசி எண் அதே தானா இல்லை மாத்திட்டியா?”

“இல்ல மாத்தல... அதே எண் தான் நீ எப்போவாச்சும் கூப்பிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு மாத்தாம வச்சிருக்கேன்... உன்னோட எண்?”

“ ம்ம்ம்ம் நானும் அதுக்காக தான் மாத்தாம வச்சிருக்கேன்” என்றாய்.....

“எப்படி வந்த? வண்டியிலா??? எப்படி இருக்கிறது அந்த ஆக்டிவா?

“இல்ல ஆட்டோல? நீ?

“என்னோட வண்டியில்... ஆட்டோ பிடிக்கவா உனக்கு? எந்த ஏரியா?”

“பெசண்ட் நகர்? நீ?”

“அதே அடையார் வீட்டுல தான் இருக்கேன்”

“ இரு ஆட்டோ பிடிக்கிறேன்...” என்றேன்....

“இல்ல... உனக்கெதும் வேலை இருக்கா? இல்லை வீட்டுக்கு தான் போறியா?

“வீட்டுக்கு தான் போறேன்.....”

“என்னை உன் பைக்கில் கூட்டிக்கிட்டு போய் விட்டுடேன்”

“ம்ம்ம்ம்” தலையாட்டினேன்....


நிசப்தம் எங்களோடு சேர்ந்து வந்து கொண்டிருந்தது... சிறிது நேரத்தில் என் தோளில் சாய்ந்து கொண்டு விசும்பத் தொடங்கினாய்.. நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆதரவாய் உன் கரம் பற்றிக் கொண்டேன்...

Monday, April 20, 2009

வாழ்த்துகள்



உன் கைப்பிடித்து
நான் முறுக்குகையில்
என் மீசையைப்
பிடித்து இழுத்தாய்
வலி தாங்காமல்
உன் கை விட்ட என்னை
பார்த்து உதடு சுழித்து
பழித்துக் காட்டினாய்...

உறவினர் சிரிக்க,
இரு உன்னை
என்று விரட்டினேன்
ஒளிந்து சுற்றி
ஓடி கொல்லப்புரத்து
மாமரத்தில் ஒளிந்தாய்
சுற்றி வந்து மடக்கினேன்

என் கிடுக்கிப் பிடிக்குள்
வீழ்ந்த நீ
வெளியேற மறுத்து
நெருங்கினாய்...
இதழ்பதிக்க அணைத்தேன்

சட்டென ஒலித்தது கெட்டிமேளச்சத்தம்
நினைவுக்கு திரும்பினேன்
எங்கே இருக்கிறாய் என்று நீ
கண்ணால் கேட்டாய்
சிரிப்புடன் இங்கே தான் என்று
உனக்கு தாலி கட்டினேன்
நம் குடும்பம் வாழ்த்த.....

Friday, April 17, 2009

மழையும் நீயும் -1

இம்முறையும்
பதிலில்லை
நான் ஹாய் சொன்ன
சாட்டிற்கு



இப்போதெல்லாம்

உன் அருகாமை அதிகம்
தேவைப்படுகிறது எனக்கு

நாட்கள் மெல்ல
பின்னோக்கி நகர்கின்றன

நட்பைப் பரிமாறிக்கொண்ட
அந்த முதல் பார்வை

உன் அம்மா போட்டுக்
கொடுத்த அந்த
தேநீர்

உன்னைத் தேடித் தேடி
அலைந்த அந்த
ஐந்தாம் மாடி கூடுகள்

முதல் சண்டையின்
முடிவில் நாம்
கைகோர்த்து நடந்தது

எனக்காக நீயும்
உனக்காக நானும் காத்திருந்து
உணவருந்தியது

எல்லாம் நிழலாய் வந்துபோனது

உன்னைப் பார்க்காமலேயே
இருந்திருக்கலாம்
இத்தனை வலி இருந்திருக்காது

உனக்கான மடலை
எழுதிமுடித்திருந்தேன்
இம்முறையும் பதில்
எதிர்பார்க்கவில்லை

முடித்துவிட்டு
சன்னலோரம் வந்தமர்ந்தேன்
வெளியே ச்சோவென்று
மழை பெய்து கொண்டிருந்தது
என் கண்ணீருக்குத்
துணையாய்

மழையும் நீயும்

மழை எப்போதுமே
தன் சுவடுகளை
விட்டுச்செல்லும் பெய்தபின்பு
அந்தச் சுவடுகள் என் நட்பின்
பக்கங்களை நினைவுபடுத்துகின்றன
எப்போதும்...


*********


அந்த அடைமழையின் முடிவில்
மரங்கள் சேமித்து வைத்த
மழை நீர் மெதுவாய்ச் சொட்டியதைப்
பார்த்த போது
நாம் சேமித்து வைத்திருக்கும்
நம் நட்பின் நாட்கள்
நினைவாய் வந்து போனது எனக்கு...


நிலாச்சோறு



என் பால்யகாலம் பற்றி
உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்
வீட்டில் பால்சோறு செய்து
எடுத்துக்கொண்டு
ஆற்றங்கரை சென்றமர்ந்து
அம்மாவின் கையாலே
நிலாச்சோறு சாப்பிட்டேன்
பொற்காலம் அதுவென்றேன்

இரு இதோ வரேன் என்றாய்
தட்டில் சோறோடு
வந்தென்னை அழைத்துச் சென்று
மொட்டைமாடி இரவில்
உன் நெஞ்சில் சாய்ந்து
நிலா பார்த்த எனக்கு
நிலாச்சோறு ஊட்டினாய்
இன்னொரு தாயானாய் எனக்கு




Monday, February 02, 2009

ஹைய்யா எனக்கு blog விருது கிடைக்கிருக்கு...

ஹைய்யா எனக்கு blog விருது கிடைக்கிருக்கு...


http://soulsez.wordpress.com/2009/01/28/on-a-lighter-note/

Sunday, February 01, 2009

முத்துக்குமார் இறுதி அறிக்கை....

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசையும் அதற்கு துணை பொகம் இந்திய அரசையும் கண்டித்து தீக்குளித்து வீரமரணம் எய்திய சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...