Tuesday, December 29, 2009

பயணங்கள்

நகரும் மரங்களின்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது

வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது

மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது

என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...

Wednesday, December 23, 2009

நிகழ்வுகளோடு

வாழ்க்கை எனக்கு எப்போதுமே பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு... நான் அதுல கத்துக்குறது தான் குறைவு. என்னோட வாழ்க்கை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்ன வரைக்கும் நான் தீர்மானிச்சதா தான் இருந்துச்சு. படிப்பு, வேலை, குறிக்கோள், அப்புறம் அதை கைவிட்டது, குறிக்கோள் மாறியது எல்லாமே. ஆனா கடந்த ஒன்னரை ஆண்டுகளாக அதுவும் தொழில் ஆரம்பிச்ச பிறகு எல்லாமே என் கையை மீறிப் போகிற விஷயங்களாகத்தான் இருக்கு. அது என் தொழிலாகட்டும், பண விஷயமாகட்டும், உறவுகளோடு இருக்கும் நெருக்கமாகட்டும், தோழிகளில், நண்பர்கள் என எல்லாமே, எல்லோருமே கொஞ்சம் தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு.

2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.


வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...

Thursday, December 10, 2009

தோழி நினைவுகள் - 1

நேசக்கரங்கள் நீட்டினாய்

இருளின் பிடியிலிருந்து

விடுவித்துக்கொள்ள



ஆதரவுக் கரம்பற்றி

வெளிச்சத்தின் திசைகளை

எட்டிப்பிடித்தாய்


புள்ளியாய்த் தொடங்கிய

வெளிச்சம்

பேரண்டமாய் ஆட்கொண்டது



அங்குல அங்குலமாய்

திசைகளை அளந்தாய்

வெளிச்சத்தின் நீட்சியை

எங்கும் பரவச் செய்தாய்



அளவற்ற அன்பு

உள்ளங்களில் பரவச் செய்தாய்

கண்களிலே கருணை

பொங்கச் செய்தாய்



உன்னைச் சந்திக்கும்

தேதிகளில் எல்லாம்

என் நாட்குறிப்பில்

பூக்கள் பூக்கச் செய்தாய்



வண்ணங்கள் தீட்டப்பட்ட்

ஓவியமாய்

உன்னைச் சந்தித்தவர்கள்

வாழ்க்கை மாறியது



சட்டென்று ஒரு நாள்

தோள்சாய கிடைத்திருக்கிறான்

தோழன் ஒருவன்

ஒன்பதாம் திசையில் இருந்து

என்றாய்

எங்கள் கைகளை

உதறிவிட்டு தனித்துச் சென்றாய்



கணக்கில் வராத அந்தத் திசை

இருளின் அரசாங்கமென

எச்சரிக்க வாயெடுத்தேன்

காதுகளைப் பொத்திக் கொண்டாய்

இப்போது கவிதை எடுத்திருக்கிறேன்

கண்களை மூடிவிடாதே.