Thursday, December 13, 2007

அன்புத்தோழி 7ம் வரிசை

நட்பில் மட்டும்
நியாயம் அநியாயம்
பார்க்க முடியாது தான்
உன்னால் உன்னிடம்
கோப‌ப்பட்டு
இப்போது த‌னியே
புலம்பிக் கொண்டிருப்பது
நான்......

********

ஒவ்வொரு காலை
விடியலின் போதும்
அழகாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்...

*******

தினமும் எழுந்தவுடன்
பல் தேய்க்கிறேனோ
இல்லையோ
என்னுடைய
மடிக்கணினியில்
உன் மடல் தேடுகிறேன்...

****

உனக்கு ஆயிரம்
நண்பர்கள் வந்தாலும்
எனக்கான உன்னுடைய
நேசமும் நட்பும்
எப்போதும் அப்படியே....

*****

நம் நட்பை
பரிகசிக்கும் இவர்களை
நினைத்து நான்
வருத்தப்படும் போதெல்லாம்
எனக்கு ஆறுதல் தருவது
உன் புன்னகை மட்டுமே

Monday, November 19, 2007

அன்புத் தோழி 6

வெள்ளிக்கிழமை மாலை
அலுவலகம் முடியும் போது
எல்லாவற்றையும் தாண்டி
மனதில் வந்து
உட்கார்ந்து கொள்கிறது
நாளை உன்னைச்
சந்திக்கப் போகும்
நினைவு......

*******

நீ நீயாகவும்
நான் நானாகவும்
சுயம் இழக்காமல்
இருக்கமுடிவது
நட்பில் மட்டும் தான்

*******

அந்த மாலைவேளை
சாலையோரமாய்
நடந்து கொண்டிருந்தபோது
என் கையைப்
பிடித்துக் கொண்டு
என் தோளில்
நீ சாய்ந்த‌
ஒவ்வொருமுறையும்
புதிதாய் பூக்கள்
பூத்துக்கொண்டே இருந்தன‌
நம் நட்பில்

*******

உனக்கான என்னுடைய
கவிதைகள்
என்னுடைய ஏட்டில்
பத்திரமாக உள்ளன‌
ஒரு முறையாவது
உன்னிடம் படிக்கக்
கொடுக்க வேண்டும்
உன் முகத்தில் மலரும்
சிறு புன்னகையைச்
சேமித்து வைக்க....

*******

Saturday, November 17, 2007

நீ

சிரிப்பிலும்
திமிரிலும்
துள்ள‌லிலும்
ந‌டையிலும்
எல்லாப் பெண்க‌ளும்
உன்னை ம‌ட்டுமே
நினைவு ப‌டுத்துகிறார்க‌ள்

----

உன்
அழகான‌
திமிரெல்லாம்
எங்கே போய்
ஒளிந்து கொள்கின்றன‌
என்னிடம் நீ
குழந்தையாக‌
மாறும் போது

Saturday, October 13, 2007

பிரிவு

கைகள் படபடக்க, கண்களில் நீர்த்துளி சுமந்து, கழுத்தில் புதிதாய் தொங்கும் மஞ்சள் கயிறோடு, மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்க்கிறாய். ஒரேயொரு கேள்வியை மட்டும் சுமந்து கொண்டிருந்தது அந்தப்பார்வை, அது "உன்னால் மட்டும் எப்படி இப்போது சிரிக்க முடிகிறது?"

நேற்று இரவு நடந்தது உனக்குத் தெரிந்தால் நீயும் சிரிப்பாய், உன்னைப்பற்றி எழுதப்பட்ட என்னுடையக் கவிதைகளை தற்செயலாய் என்னுடைய அறையில் பார்த்துவிட்டான் உன்னுடையக் கணவன், சிரித்துக்கொண்டே பார்த்த அவனிடம் நீ எனக்குத் தீட்டிய கடிதங்களையும் கொடுத்தேன். பொறுமையாக படித்து முடித்து விட்டு அர்த்தம் பொதிந்த புன்னகையோடு உடைந்து போயிருந்த என்னைப் பார்த்த அவன் " எத்தனை உயர்வானது உங்களுடைய நட்பு, எனக்கு இதுபோல் தோழி அமையவில்லையே... கவலைப்படாதீர்கள் உங்களுடைய நட்பிற்கு என்னால் எந்த பாதிப்பும் வராது" என்று சொன்னான்.

கழுத்தில் மஞ்சள் கயிறு, கையில் மாலை, கலங்கிய கண்களுடன் நீ என்னைப் பார்க்கிறாய், சிரிப்போடு நான். உன் கணவனே உன்னிடம் இன்று சொல்லிவிடுவான், குழந்தையின் குதூகலத்தோடு நீ நாளை என்னனப்பார்க்க அவனோடு வரப்போவதை நினைத்து இன்னும் அதிகமாக சிரிக்கிறேன் நான், இன்னும் அதிகமாக அழுகிறாய் நீ.....

Tuesday, October 09, 2007

சேகுவேரா நினைவுநாள்


இன்று தோழர் சேகுவேராவின் நினைவுநாள், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுதும் போராடிய மாபெரும் புரட்சியாளர். அவரை இன்று நினைவு கூர்வோம். வாழ்ந்தால் இவரைப் போல வாழவேண்டும்.

Monday, September 17, 2007

விடியல்

தலைமுறைகளைத் தாண்டியும்
வேர்களைத் தேடி
அலைகிறது மனம்

ஆண்டுகள் பல கடந்த பின்னும்
கண்திரைகளுக்குப் பின்னால்
இன்னும் இடிபாடுகளின் மிச்சங்கள்

நீண்ட இரவுகளில்
தூக்கம் கலைக்கிறது
நினைவுகளாய் எழும்
குண்டுகளின் சத்தம்

தொலைந்து போன உறவுகளின்
முகவரிகளைத் தேடி
தொடர்கிறது பயணம்

என்றாவது ஒருநாள்
சொந்த பூமியில்
என்னுடைய விடியல்
துவங்குமென்ற நம்பிக்கையில்
தொடர்கிறது பயணம்...

Tuesday, September 11, 2007

இணைய‌த‌ள‌ம்

பரபரப்பான வாழ்க்கையின்
நடுவே மறந்து போன‌
உன் முகத்தை
மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து
அரிதாய் வ‌ந்த
உன்னுடைய‌ மின்னஞ்ச‌ல்


தொலைந்து போன‌
ப‌ழைய‌ முக‌ங்க‌ளை
அரிதாய் க‌ண்டெடுக்கிறோம்
எப்போதாவ‌து ந‌ட‌க்கும்
சாட் அர‌ட்டைக‌ளிலும்
மின்ன‌ஞ்ச‌ல் உரையாட‌ல்க‌ளிலும்


அம்மா‌வின் க‌ண்ணீரையும்
த‌ங்கையின் குழ‌ந்தையையும்
ம‌னைவியின் காத‌லையும்
அப்பாவின் சிரிப்பையும்
த‌ம்பியின் அர‌ட்டையையும்
மின்ன‌ஞ்ச‌ல்க‌ளில் ம‌ட்டுமே
ர‌சிக்க‌ முடிகிற‌து
பிழைப்புக்காக‌ வ‌ந்த‌ தூர‌தேச‌த்தில்....

Saturday, September 01, 2007

அன்புத்தோழி 5

நெரிசலான கடைத்தெருவில்
யாருடைய கண்ணிலாவது
பட்டுவிடுவோமோ என்று
பயந்து கொண்டே
ஐந்தங்குல இடைவெளியில்
நடந்து செல்வார்கள் காதலர்கள்
நெருக்கமாக கைகளைக் கோர்த்தபடி
நடந்து செல்வார்கள் நண்பர்கள்...

-------


ஒவ்வொரு முறை

நாம் சந்திக்கும் போதும்
பேசிக்கொள்ள எவ்வளவு விஷயங்களைப்
பொத்திப் பொத்தி
சேகரித்து வைத்திருக்கிறோம் நாம்!

-------


நாம் பார்த்துப் பேசி

ப‌ல‌ நாள் ஆனாலும்
உன்னைச் ச‌ந்திக்க‌
இன்னொரு ம‌ழைக்கால‌
மாலை வேளைக்காக‌
காத்திருக்கிறேன்....

பால்யகாலம்

கைகளுக்குள் சிக்காத
காற்றை என் சட்டைப்பையில்
பிடித்து வைத்து

வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்களைக் கொண்டு
படங்கள் வரைந்து

குளத்துக்கரையில் தூண்டில்
போட்டு மீன் பிடித்து

மொட்டை வெயிலில்
சைக்கிள் டையரை வைத்து
ஊர் சுற்றி

கருவேலங்காட்டுக்குள்
ஓணான் பிடித்து

ஊரின் புழுதியெல்லாம்
நம் சட்டையில் இருக்க

இருட்டிய பிறகு
வீட்டிற்கு வந்து
அப்பாவிடம் அடி வாங்கி

கவலை மறந்து
உறங்கிய பொழுதுகள்

இன்றும் பசுமையாய்
நெஞ்சின் மூலையில்...

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தின‌
வாழ்த்து அனுப்ப
கைப்பேசியில்
வேகமாய்ச் சுழன்றது கை,
ம‌ணி ப‌ன்னிரெண்டைத் தொட்ட‌தும்
கைக‌ளில் த‌ய‌க்க‌ம்
ம‌ன‌தில் உறுத்த‌லாய்
குறுஞ்செய்திக் க‌ட்ட‌ண‌ம்
25 பைசா...

Wednesday, June 13, 2007

ஹெல்மெட் தலைகள்

நம்ம ஊருல எதையுமே சட்டமா கொண்டு வந்தாதான் செய்வேன்னு அடம்புடிக்கிறாய்ங்க... இன்னிக்கி(ஜீன்‍ 1) சென்னையில எங்க பாத்தாலும் வெறும் ஹெல்மெட் தல தான். இன்னிக்கு பல வேலை இருந்ததனால் அதிகாலையில 11 மணிக்கு எழுந்திருச்சி(என்ன மாதிரி பிபிஓ வில வேலை பாக்குறவங்களுக்கு அதுதான் அதிகாலை) செல்போன் பில் கட்ட கிளம்பி வெளியில போனா எல்லா பயலுவ தலையிலும் கறுப்பு கலர்ல என்னமோ இருக்குது, என்னடா இது அதிசயம்னு யோசிக்கிறப்ப கூட வந்த பயபுள்ள சொன்னான் மாப்பு இன்னிக்கி ஜூன் 1 அதுதான் எல்லாப் பயலுகளும் இப்படி திரியுறாங்கன்னு. சரிதான்னு பஸ்ஸ புடிச்சி அண்ணா சாலை வந்தா, எனக்கே ஆச்சர்யம் எல்லாரும் ஹெல்மெட்டும் தலையுமா வண்டியில போறாங்க... பலபேரு வண்டியில பின்னாடி இருக்குறவனும் தலையில கவசத்தோட போனாங்க... "என்னக் கொடுமை சரவணன் இது"ன்னு நானும் நம்ம நட்பும் உணர்ச்சிவசப்பட்டுட்டோம். நம்ம ஊருல சட்டத்த இப்படி மதிக்கிறாங்களே. இப்படி எல்லா விதிமுறைகளையும் கடைபிடிச்சா நம்ம எங்கேயோ போயிடுவோமேன்னு அப்படியே கனவுல மூழ்கிட்டேன்.

பஸ் ஸ்டாப்புல‌ இற‌ங்கி அப்ப‌டியே கொஞ்ச‌ம் ந‌ட‌க்கும் போது ஹெல்மெட் விக்குற‌ க‌டைய‌ பாத்தா, தீபாவ‌ளி நேர‌த்து ச‌ர‌வ‌ணா ஸ்டோர்ஸ் க‌ண‌க்கா கூட்ட‌ம் அள்ளுது, ச‌ரி ந‌ம்ம‌ ப‌ய‌லுவ‌ எப்ப‌வுமே க‌டைசி நேர‌த்துல‌தான் வேலை செய்வானுங்கனு விட்டுட்டோம். ச‌ரி இப்ப‌வாவ‌து திருந்துனாங்க‌ளேன்னு, இத‌ கொஞ்சா நாளைக்கி செஞ்சிப்புட்டு அப்புற‌ம் ம‌றந்துறாம‌ இருந்தா ச‌ரிதான்.

Wednesday, May 23, 2007

அன்புத்தோழி 4

நாம் சண்டைப்போட்டு
பேசாமலிருக்கும்
ஒவ்வொரு முறையும்
அர்த்தமற்று போய் விடுகிறது
நம் இத்தனை வருட‌
புரிதலும் நட்பும்

------

நான் தேடித் தேடி
பதில் தெரியாமல்
தொலைந்து போவது
உன்னுடைய அர்த்தம் பொதிந்த
அந்த "ஒண்ணுமில்லை"
என்ற வார்த்தையில் தான்

Wednesday, May 02, 2007

அன்புத்தோழி 3


ஒன்றாகச் சேர்ந்து
ஊர் சுற்றுவதும்
மடல் முடிக்கும்போது
"With Lots of Love" என்று முடிப்பதும்
சந்தித்துக் கொள்ளும் போது
கட்டிப்பிடிப்பதும்
நட்பிலும் நடக்கும் என்றால்
நம்ப மறுக்கிறார்களே ஏன்

நாங்கள் நம்புகிறோம்

விடியலின் வேர்கள்
முளைவிட்ட சமயத்தில்
இருட்டின் இரும்புக்கரங்கள்
நம்மைச் சிறைப்பிடித்தன‌


பழமைவாதிகளின்
புளித்துப்போன சித்தாந்தங்கள்
நம் இளமைவேகத்திற்கு
அணை போட்டுவிட்டன‌


அவர்களின் பழைய பல்லவிகள்
நம் தோழிகளின்
சிற‌குகளை ஒடித்துப்போட்டன‌


ஊழ‌லின் விழுதுக‌ள்
ந‌ம் எதிர்கால‌த்தின்
க‌ழுத்தை நெரிக்கின்ற‌ன‌


ல‌ஞ்ச‌த்தின் நாச‌க்க‌ர‌ங்க‌ள்
ந‌ம் க‌ன‌வுக‌ளை
க‌ல்ல‌றைக்கு அனுப்புகின்ற‌ன


இந்த‌ப்பிழைக‌ளுக்கு
நாம் திருத்த‌ங்க‌ளாவோம்


ப‌ழ‌மைவாதிக‌ளே கேளுங்க‌ள்

ஒடிக்க‌ப்ப‌ட்ட‌
எங்க‌ளின் சிற‌குக‌ளை
ஒட்ட‌வைக்கும் க‌லையை
நாங்க‌ள் க‌ற்றுக்கொண்டிருக்கிறோம்

தடுப்பணைகளை
தகர்த்தெரியும் வேக‌த்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்



எங்க‌ளுக்குத் தெரியும்
இந்த‌ப் ப‌ழ‌மைவாதிக‌ள்
த‌ங்க‌ள் அனுப‌வ‌த்தைச் சொல்லி
எங்க‌ளை ந‌சுக்கி விடுவார்க‌ள் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
ம‌ல‌ர்மாலைக‌ள் அல்ல‌
முள்கிரீட‌ம் தான்
எங்க‌ளுக்கு அணிவிக்க‌ப்ப‌டும் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
நாங்க‌ள் சாதியின் பெய‌ராலும்
ம‌த‌த்தின் பெய‌ராலும்
ஒடுக்க‌ப்ப‌டுவோம் என்று

ஆனால்
நாங்க‌ள் உண‌ர்ந்திருக்கிறோம்
இந்த‌ ச‌மூக‌ மாற்ற‌த்திற்கான‌
க‌ருவிக‌ள் நாங்க‌ள் தான் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்
இருட்டின் பிடியிலிருந்து
இந்த‌ச் ச‌முதாய‌த்திற்கு
வெளிச்ச‌த்தின் சிற‌குக‌ளை
கொடுக்க‌ முடியும் என்று

சாதிய‌ வேர்க‌ளை அறுத்தெரிந்து
ச‌ம‌த்துவ‌ம் ப‌டைக்க‌முடியும் என்று
ல‌ஞ்ச‌த்தின் செய‌ற்கை சுவாச‌த்தை
நிறுத்தி புத்துல‌கு காண‌முடியும் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்

Monday, April 23, 2007

அன்புத் தோழி 2

எங்கேயோ தூரமாய்

எங்கேயோ தூரமாய்
இருந்து கொண்டு
மின்னஞ்சல்களில்
ஹாய் சொல்லிப்
பழகி விட்டோம்

"ஹாய்"க்கும் "பை"க்கும்

நடுவில் சிக்கித்
திணருகிறது
நம் வாழ்வு

நாம் பேசிய பேச்சுக்கள்

மட்டுமே நம் நினைவுகளின்
எச்சமாய் என்
செவிப்பறைகளில் மோதுகிறது

அலுவலக சிற்றுண்டிச்சாலையும்,

வரவேற்பறையும், பழச்சாறுக்கடையும்
"காப்" பயணங்களும்,
ஸ்பென்சர் பிளாசாவும்
கவிதைகளும் அடிக்கடி
உன்னை நினைவுபடுத்துகின்றன‌

சீக்கிரம் வா உன்னைச் சந்திக்கவேண்டும்

காதலியின் பிரிவுகூட‌

என்னை இப்படி
வாட்டியதில்லையடி
என் தோழி...

Saturday, March 24, 2007

இந்தியா படுதோல்வி

இந்த உலகக்கோப்பை இந்தியாவுக்குத் தான் அப்படீன்னு எல்லோரும் சொன்னப்ப நானும் ரொம்ப சந்தோசப்பட்டேன்... ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனா இல்லாம கொஞ்சம் நம்ம அணியோட பலத்தையும், பலவீனத்தையும் அலசி பாத்தப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன், நம்ம அணி தேறுமான்னு சந்தேகம் வந்துச்சு... ஆனா குறைந்தபட்சம் அரையிறுத்திக்காவது வருவாங்கன்னு நினைத்தேன். ஆனா நம்ம பசங்க வழக்கம் போல கவுத்துட்டாங்க. முதல்ல பங்களாதேஷ் கிட்ட தோத்தப்ப சரி நம்ம ஆளுங்க கொஞ்சம் அதீத நம்பிக்கையோட ஆடி கவுந்துட்டாங்க பரவயில்லை அடுத்த ஆட்டங்களில் பட்டைய கிளப்புவாங்கண்ணு பாத்தேன் நினைச்ச மாதிரி பிர்முடாவை காலி பண்ணினாங்க ஆனா அந்த ஆட்டத்துலயும் நம்ம பந்துவீச்சு சொதப்பலாவே இருந்துச்சு... சரி அடுத்து இலங்கையையும் காலிப் பண்ணிட்டு அடுத்த சுற்றுக்கு போவாங்கன்னு பாத்தா நேத்து பெருசா நமக்கு நாமம் போட்டுட்டு போய்ட்டாங்க...

யாரிடம் தவறுள்ளது? கிரிக்கெட் வாரியத்தில் ஆரம்பித்து, பயிற்சியாளர், அணித்தலைவர், விளம்பரத்தில் மட்டுமே நன்றாக விளையாடும் வீரர்கள்ன்னு பட்டியுல் நீளுது... ஆனா முக்கியமான காரணம் என்ன? பணம்... அவர்களுக்கு கொட்டிக்கொடுக்கப்படும் பணம்... விளையாடினாலும், இல்லாவிட்டாலும், அவர்களுக்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் பணம்... 10 ஆட்ட‌ங்க‌ளில் ஒழுங்காக‌ விளையாடினால் அவ‌ரை ர‌சிக‌ர்க‌ள் த‌லையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்க‌ள். பிற‌கென்ன ப‌ண‌ம் கொட்டுகிற‌து....

விளையாடும் போது வெற்றி பெற‌வேண்டுமென்ற‌ வெறி இருக்க‌ வேண்டும்... ந‌ம் அணி வீர‌ர்க‌ளுக்கு அது சுத்த‌மாக‌ கிடையாது... ச‌ச்சின் போன்ற‌ வீர‌ர் க‌ள‌மிற‌ங்கின‌ல் எதிர‌ணி வீர‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் ஏற்ப‌ட‌ வேணும் அந்த‌ அள‌வுக்கு அவ‌ர் விளையாட‌ வேண்டும். ஆனால் அவ‌ர் அப்ப‌டி விளையாடி ப‌ல‌ மாத‌ங்க‌ளாகி விட்ட‌ன‌... யாரைக் குறை சொல்ல‌?

ஆனால் இது போன்ற‌ ஒரு தோல்வி தேவைதான்... இனிமேலாவ‌து ந‌ம்முடைய‌ க‌வ‌ன‌ம் ஹாக்கி, கால்ப‌ந்து போன்ற‌ விளையாட்டுக‌ளில் போனால் ப‌ர‌வாயில்லை...

Tuesday, January 16, 2007

புத்தகக் கண்காட்சி

இந்த வருடம் தான் முதல் முறையாக சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். மிக அருமை... எங்க ஊர்ல புத்தக கண்காட்சினு சொல்லிட்டு ஒரு சின்ன இடத்துல வச்சிருப்பாங்க... இங்க வந்து பார்த்தா.. அம்மாடியோவ்... எவ்வளோ பெருசு... எத்தனை புத்தகங்கள்... ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, நல்ல வேளை எப்போதும் காலியாகவே இருக்கும் இன்னுடைய பர்ஸிலும், பாக்கெட்டிலும் பணம் இருந்தது( இந்த புத்தக கண்காட்சிக்காகவே இந்த மாச சம்பளத்த செலவு பண்ணாம வச்சிருந்தோம்ல..), போய் நிறைய புத்தகங்கள் வாங்கினேன், சே குவேரா வரலாரு முதல், தபூ சங்கர் கவிதைகள் வரை நிறைய வாங்கினேன்... மனசுக்கு கொஞ்சம் திருப்தி...

புத்த‌க‌ க‌ண்காட்சி வாச‌லுக்குள் நுழையும் போது விழிய‌னை ச‌ன்திக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தோடு தான் சென்றேன்... ஆனால் அங்கிருந்த‌ புத்த‌க‌ங்க‌ளைப் பார்த்த‌வுட‌ன், என்னையும் ம‌றந்தேன், விழிய‌னையும் ம‌றந்தேன்.. வீட்டுக்கு வந்த‌வுட‌ன் தான் என‌க்கு விழிய‌ன் ஞாப‌க‌மே வ‌ந்த‌து...

அப்புறம் எழுத்தாளர் ஞாநி அவ‌ர்களைச் சந்தித்து உரையாடினேன், தபூ சங்கரை சந்தித்தேன், ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களையும் சந்தித்தேன்... மறக்க முடியாத நாள் அது... மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்...

Friday, January 05, 2007

காகம்


காகம்


மௌனம்
கலைக்கிறது காகம்
அதற்குத் தெரியுமா
நம் மௌன அஞ்சலியின்
அர்த்தம்