Sunday, August 09, 2009
எதிர்கால இந்தியா
எதிர்கால இந்தியா
இது தான் தலைப்பு
ஒரு கவிதை வேணும் எனக்கு
குழம்பித்தான் போனேன்
எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்த போது
குழப்பத்திலேயே தூங்கிப் போனேன்
கனவாக விரிந்தது எதிர்கால இந்தியா
பளபளக்கும் சாலைகள்
விண்ணை முட்டும் கட்டிடங்கள்
சாலைகளிலே தரைக்கு மேலே என
எங்கும் வாகனங்கள்
அளவான இறுக்கமான உடையோடு பெண்கள்
அதே போன்ற உடையில் ஆண்கள்
பரபரப்பான வாழ்க்கை எங்கும் எதிலும்
தொலைப்பேசி அலைப்பேசி இல்லாமல்
காதோடு பொருத்திய குட்டிக் கருவி
தகவல் சுமந்து சென்றது
காற்றில் கணினி விரிந்து
முன்னேற்றம் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்
என்ன சாப்பிடுகிறார்கள் இவர்கள்
சற்றே இக்கேள்வி வந்து
மூளையைக் குடைந்தது
அருகில் இருக்கும் உணவகம் சென்றேன்
வகை புரியா உணவுகள்
விதவிதமான நிறங்களில்
தேடிப் பார்த்தேன்
தூரத்தில் ஒருவர்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்
எனக்குப் பிடித்த சோறு
ஊரைச்சுற்றலாம் என்று நினைத்து
திரும்பிய போது வாகனம் ஒன்று
நெருங்கி நின்றது
அடுத்த ஊருக்குச் செல்லுமாம்
இலவச பயணமாம்
வழியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாமாம்
ஏறி அமர்ந்தேன்
நகரத்தின் பளபளப்பு கொஞ்சமாய் மறைந்து
இயல்பாய் விரிந்தது கிராமத்துச் சூழல்
இறங்கிக் கொள்கிறேன் இங்கே என்றேன்
ஏளனப்பார்வைகள் முகத்தைக் கூறுபோட
கேள்விக்குறியோடு இறங்கிப்போனேன்
என்னென்ன மாற்றங்கள் இங்கே
இருக்கின்றன என்று தேடிய போது
அங்கே உணவுக்காக எலி தேடியபடி விவசாயி......
Tuesday, July 28, 2009
கவிதைகள்
தலைப்பிருந்தாலே
கொஞ்சம் தள்ளி
நின்று கொள்கிறேன் நான்
முதல் சந்திப்பு
என்னவள், காதல் தோல்வி
ஏய் இளைஞனே
என்ற வார்த்தைகள்
ஒவ்வாது போகின்றன.
சபித்துக் கொண்டே
அழிக்கிறேன்
நீண்ட கவிதைகள்
தாங்கிய மின்னஞ்ல்களை
என் கவிதையும்
இன்னொருவருக்கு
இப்படித்தான்
என்று நினைக்கையில்
எழுத எடுத்த பேனாவை
மூடி வைத்துவிட்டேன்
Wednesday, July 22, 2009
புதைந்து போன கனவுகள்
மரப்பாச்சிக்கு அழும்
தங்கைக்குத் தெரியவில்லை
அதைத் திருப்பி எடுக்கப் போன
அண்ணன் பிணமாய்க் கிடப்பது
*******
தொலைந்து போனவர்களின்
பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
விடுபட்டவர்களின் பெயர்களைச்
சொல்லி அழுது கொண்டிருந்தனர்
பக்கத்தில் நின்றவர்கள்
நாளை என் பெயர்
பட்டியலில் இருக்குமா?
விடுபட்டு போயிருக்குமா?
தெரியவில்லை எனக்கு
பட்டியலில் இருந்தால் பார்ப்பதற்கும்
விடுபட்டால் அழுவதற்கும்
யார் இருக்கிறார்கள்?
நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன்
தூக்கம் கலைத்தது
நெருங்கி வரும் பூட்ஸ் காலடி ஓசை....
*****
எங்கள் வாழ்க்கையை
புதைத்துக் கனவுகளைக்
கட்டியெழுப்பிக் கொண்டிருந்தோம்
இப்போது சரிந்து கிடப்பவை
இன்றைய கோபுரங்களா
நாளைய கனவுகளா???
Thursday, July 16, 2009
மழைக்காலம்
உயிருக்குள் ஊடுருவி
நனைத்துச் செல்லும்
மழையை ஒத்ததாய் இருந்தது
நீ எனக்கு அனுப்பிய
குறுஞ்செய்தி
*****
நீ இல்லாத மாலைப் பொழுதில்
உன் நினைவுகளை
அசைபோடச் சொல்லி
என்னைத் தூண்டியபடி
இப்போதும் பெய்கிறது மழை
*****
என் நாட்குறிப்பின்
பக்கங்களுக்கு வண்ணம்
தீட்டியபடி செல்கின்றன
உன்னைச் சந்தித்த
பொழுதுகள்
*****
ஏதுமல்லாத
வெறுமையின் தருணங்களில்
இயல்பாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்
நாட்குறிப்பில்
சொல்லப்படாத மௌனங்களின்
நேரங்களில் இட்டு
நிரப்பப்படுகிறது உன்
ஸ்பரிசத்தின் கணங்கள்
******
முன்னறிவிப்பு இல்லாத
திடீர் சந்திப்புகளின்
ஆச்சர்யங்களுக்குள்
அடங்கி இருக்கிறது
அழகான நம் நட்பு
******
Thursday, June 18, 2009
மாசிலாமணி – இம்சை அரசன்
எங்கடா போறோம்னு கேட்டா முறைச்சு பாத்து அமைதியா வான்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாங்க. மேம்பாலத்தை விட்டு இறங்கும் போது கொஞ்சம் கூட யோசிக்காம சரட்டுன்னு வலப்பக்கம் திரும்பினா என் தோழி, என்னடா இது பிறந்தநாள் அன்னிக்கு பிரச்ச்னையில மாட்டி விட்டுடுவாளோன்னு நினைச்சு கொஞ்சம் பொறுமையா வண்டிய திருப்பினேன். அவ வண்டிய நிறுத்தின இடம் அட்லாப்ஸ் தியேட்டர். இப்போ தான் படம் ஆரம்பிச்சுச்சு என்றார்கள். உள்ளே கேக், தீப்பெட்டி அனுமதி இல்லை என்றனர். இன்னிக்கு இவரோட பிறந்தநாள் தியேட்டர்ல கேக்வெட்டி கொண்டாடனும்னு சொன்னதும் தியேட்டர்காரன் சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டான். ஆஹா இன்னிக்கு நாம அவ்ளோ தான், ஊர்காரங்க கிட்ட உதை வாங்கனும் போலன்னு நினைச்சுகிட்டு உள்ளே போனேன். இப்போ வெட்டக் கூடாது கொஞ்ச நேரம் படம் ஓடினதும் வெட்டுங்கன்னு சொன்னான் தியேட்டர்க்காரன். இப்போ உதை வாங்குனா என்ன கொஞ்ச நேரம் கழிச்சு உதை வாங்குனா என்ன, எப்படியும் உதை உறுதின்னு நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனா என்னை காப்பாத்திடுச்சு இந்தப் படம். உள்ளே நுழையும் போது கதாநாயகன் அறிமுகப் பாடல் ஓடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் மொக்கையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது, தொடர்ச்சியா கதாநாயகி அறிமுகம். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு அந்தப் பொண்ணை கொஞ்சம் சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பத்தி நிமிஷத்துல என் தோழி நண்பா மன்னிச்சிடு உன் பிறந்தநாள் அதுவுமா இப்படி ஒரு பெரிய மொக்கை படத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வந்திருக்க கூடாதுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா. வந்ததும் போகக் கூடாதேன்னு நினைச்சுக்கிட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கலாம், இயக்குனர் ஏதாச்சும் செஞ்சிருப்பார்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது வரிசையா ரெண்டு காட்சிகள் ஒன்னு வடிவேலுவைக் காலிங்பெல் அழுத்தச்சொல்லி ஒரு குழந்தை மாட்டி விடுமே அந்தக் காட்சி இதில் வந்தது வடிவேலுவுக்கு பதில் சந்தானம் அண்ட் கோ. அடுத்து தம்பி படத்துல ஹீரோயின் நடனம் ஆட முடியாம ஹீரோ ஒருத்தனை அடிச்சு அந்த நடன நிகழ்ச்சி நின்னு போயிடுமே அதை நினைவு படுத்தும் காட்சி, ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் தான் மாற்றம். கொஞ்சம் கூட சொந்தமா யோசிக்க மாட்டாய்ங்களான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது இவுங்க இரண்டு பேரையும் பார்த்தேன். ஒரு அரை மணி முடிஞ்சிடுச்சு இன்னும் ஒரு அரைமணி நேரம் இருக்கலாம்னு சொன்னாய்ங்க. சரி இருக்கலாம்னு நினைச்சேன். பத்து நிமிஷத்துல நண்பா கிளம்பலாம்னு சொன்னா என் தோழி. சரி இதுக்கு மேல வேணாம்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம். கேக் என்னோட அலுவலகத்தில் பிறகு வெட்டப்பட்டது.
படம் ஆரம்பிச்சு சரியா 40 நிமிஷத்துல வெளியேறிட்டோம்.. என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெளியேறியது... என்ன நினைச்சுக்கிட்டு இயக்குனர்கள் இந்தமாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியல. இவனுங்க யார்க்கிட்டயாவது உதவி இயக்குனரா பணியாற்றினா நல்லா இருக்கும். இல்லைன்னா திரைக்கதை எழுதுவது எப்படின்னு தெரிஞ்சுகிட்டு வரட்டும். நடிக்கும் அனைவருமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்லாம செயற்கையாகவே பேசுகின்றனர் ஆரம்பத்தில் இருந்து. காமெடி என்ற பெயரில், சந்தானம், கருணாஸ், பாஸ்கர் என எல்லோருடைய மொக்கையும் சராசரிக்கு மிகக் கீழே. இதையெல்லாம் ஒரு படம்னு ரிலீஸ் பண்ணி, வெற்றிப்படம், வெற்றி நடைன்னு போட்டு நம்மையெல்லாம் ஏமாற்றும் சன்பிக்சர்ஸ் வாழ்க...
Sunday, May 31, 2009
மீண்டும்
நடந்து இந்தச் சாலையின்
நீள அகலம் அளந்த
காலமெல்லாம் சட்டென்று
தோன்றி மறைந்தது கண்முன்
எதிரெதிரே நீயும் நானும்
குறுக்கே சாலை
உன் பார்வையின்
வீச்சு தாங்க முடியாமல்
கண்களை மூடிக்கொண்டேன்
பிரிவுகள் ரணமானவை என்று
நம் பிரிவு தான் எனக்கு
உணர்த்தியது...
தவறான புரிதல்கள்
உன்னை என்னிடமிருந்து
அன்னியப்படுத்திடும் என்று
எதிர்பார்த்திருக்கவில்லை
உன் நிராகரிப்புகளால்
நொறுங்கிப்போனது என் மனம்
மட்டுமல்ல அலைப்பேசிகளும் தான்
தோளோடு அணைத்துக்கொண்டு
காதோடு ரகசியம் பேசி
விழிகளில் கவிதைகள் சுமந்து
அங்குலம் அங்குலமாக அளந்த
சாலையல்லவா இது.....
வாகனத்தின் பேரிரைச்சல்
என்னை நினைவுக்கு அழைத்து வருகிறது
அதே இடத்தில் மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்
என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்
கண்களில் ஆச்சர்யம் சுமந்து
பேசலாமா யோசனையோடு
பார்க்கிறேன் நான்
பேச மாட்டாயா என்கிறது
உன் பார்வை
உனை நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்
”ஹாய்...” என்றேன்
”ஹாய்” என்றாய்
”எப்படி இருக்க??? ”
”நல்லா இருக்கேன்... நீ?”
”ம்ம்ம் இருக்கேன்.. ”
”ஒரு கப் காபி?” என்றேன்
”கண்டிப்பா.... ரொம்ப நாள் ஆச்சு...” என்றாள்
வழக்கமாய் செல்லும் கடைக்குச் சென்று வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்தோம்
”என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ” என்றாய்
”அதே கம்பெனி தான்...... நீ?”
”போன வாரம் தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்... ” என்றாய்
“இந்தப் பக்கம் ?”
“கொஞ்சம் பொழுது போகல, கொஞ்சம் மனசும் சரியில்ல... இந்த சாலை ரொம்ப பிடிச்ச சாலை.. அதான் ஒரு சின்ன வாக் போகலாம்னு... நீ எங்க இந்தப் பக்கம்??” கேட்டாய்....
”நான் எப்போ ப்ரீயா இருந்தாலும் இந்த சாலையில ஒரு வாக் போவேன்... நாம கைகோர்த்துக்கிட்டு நடந்தது நினைவுக்கு வரும், கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்... ”
”ம்ம்ம்ம்” ஆமோதித்தாய் அழகாக
அமைதியார் காபி அருந்தினோம்.. அளவாய் பேசினோம்... நலம் விசாரிப்புகள் முடிந்தன...
“சரி கிளம்பலாமா?” என்றேன்....
“ ம்ம்ம் போகலாம்... என்றாய்... சற்று நடந்தவள் திரும்பி கேட்டாய்..... உன் அலைப்பேசி எண் அதே தானா இல்லை மாத்திட்டியா?”
“இல்ல மாத்தல... அதே எண் தான் நீ எப்போவாச்சும் கூப்பிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு மாத்தாம வச்சிருக்கேன்... உன்னோட எண்?”
“ ம்ம்ம்ம் நானும் அதுக்காக தான் மாத்தாம வச்சிருக்கேன்” என்றாய்.....
“எப்படி வந்த? வண்டியிலா??? எப்படி இருக்கிறது அந்த ஆக்டிவா?
“இல்ல ஆட்டோல? நீ?
“என்னோட வண்டியில்... ஆட்டோ பிடிக்கவா உனக்கு? எந்த ஏரியா?”
“பெசண்ட் நகர்? நீ?”
“அதே அடையார் வீட்டுல தான் இருக்கேன்”
“ இரு ஆட்டோ பிடிக்கிறேன்...” என்றேன்....
“இல்ல... உனக்கெதும் வேலை இருக்கா? இல்லை வீட்டுக்கு தான் போறியா?
“வீட்டுக்கு தான் போறேன்.....”
“என்னை உன் பைக்கில் கூட்டிக்கிட்டு போய் விட்டுடேன்”
“ம்ம்ம்ம்” தலையாட்டினேன்....
நிசப்தம் எங்களோடு சேர்ந்து வந்து கொண்டிருந்தது... சிறிது நேரத்தில் என் தோளில் சாய்ந்து கொண்டு விசும்பத் தொடங்கினாய்.. நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆதரவாய் உன் கரம் பற்றிக் கொண்டேன்...
Monday, April 20, 2009
வாழ்த்துகள்
உன் கைப்பிடித்து
நான் முறுக்குகையில்
என் மீசையைப்
பிடித்து இழுத்தாய்
வலி தாங்காமல்
உன் கை விட்ட என்னை
பார்த்து உதடு சுழித்து
பழித்துக் காட்டினாய்...
உறவினர் சிரிக்க,
இரு உன்னை
என்று விரட்டினேன்
ஒளிந்து சுற்றி
ஓடி கொல்லப்புரத்து
மாமரத்தில் ஒளிந்தாய்
சுற்றி வந்து மடக்கினேன்
என் கிடுக்கிப் பிடிக்குள்
வீழ்ந்த நீ
வெளியேற மறுத்து
நெருங்கினாய்...
இதழ்பதிக்க அணைத்தேன்
சட்டென ஒலித்தது கெட்டிமேளச்சத்தம்
நினைவுக்கு திரும்பினேன்
எங்கே இருக்கிறாய் என்று நீ
கண்ணால் கேட்டாய்
சிரிப்புடன் இங்கே தான் என்று
உனக்கு தாலி கட்டினேன்
நம் குடும்பம் வாழ்த்த.....
Friday, April 17, 2009
மழையும் நீயும் -1
இம்முறையும்
பதிலில்லை
நான் ஹாய் சொன்ன
சாட்டிற்கு
இப்போதெல்லாம்
உன் அருகாமை அதிகம்
தேவைப்படுகிறது எனக்கு
நாட்கள் மெல்ல
பின்னோக்கி நகர்கின்றன
நட்பைப் பரிமாறிக்கொண்ட
அந்த முதல் பார்வை
உன் அம்மா போட்டுக்
கொடுத்த அந்த
தேநீர்
உன்னைத் தேடித் தேடி
அலைந்த அந்த
ஐந்தாம் மாடி கூடுகள்
முதல் சண்டையின்
முடிவில் நாம்
கைகோர்த்து நடந்தது
எனக்காக நீயும்
உனக்காக நானும் காத்திருந்து
உணவருந்தியது
எல்லாம் நிழலாய் வந்துபோனது
உன்னைப் பார்க்காமலேயே
இருந்திருக்கலாம்
இத்தனை வலி இருந்திருக்காது
உனக்கான மடலை
எழுதிமுடித்திருந்தேன்
இம்முறையும் பதில்
எதிர்பார்க்கவில்லை
முடித்துவிட்டு
சன்னலோரம் வந்தமர்ந்தேன்
வெளியே ச்சோவென்று
மழை பெய்து கொண்டிருந்தது
என் கண்ணீருக்குத்
துணையாய்
மழையும் நீயும்
மழை எப்போதுமே
தன் சுவடுகளை
விட்டுச்செல்லும் பெய்தபின்பு
அந்தச் சுவடுகள் என் நட்பின்
பக்கங்களை நினைவுபடுத்துகின்றன
எப்போதும்...
*********
அந்த அடைமழையின் முடிவில்
மரங்கள் சேமித்து வைத்த
மழை நீர் மெதுவாய்ச் சொட்டியதைப்
பார்த்த போது
நாம் சேமித்து வைத்திருக்கும்
நம் நட்பின் நாட்கள்
நினைவாய் வந்து போனது எனக்கு...
நிலாச்சோறு
என் பால்யகாலம் பற்றி
உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்
வீட்டில் பால்சோறு செய்து
எடுத்துக்கொண்டு
ஆற்றங்கரை சென்றமர்ந்து
அம்மாவின் கையாலே
நிலாச்சோறு சாப்பிட்டேன்
பொற்காலம் அதுவென்றேன்
இரு இதோ வரேன் என்றாய்
தட்டில் சோறோடு
வந்தென்னை அழைத்துச் சென்று
மொட்டைமாடி இரவில்
உன் நெஞ்சில் சாய்ந்து
நிலா பார்த்த எனக்கு
நிலாச்சோறு ஊட்டினாய்
இன்னொரு தாயானாய் எனக்கு
Monday, February 02, 2009
ஹைய்யா எனக்கு blog விருது கிடைக்கிருக்கு...
http://soulsez.wordpress.com/2009/01/28/on-a-lighter-note/
Sunday, February 01, 2009
முத்துக்குமார் இறுதி அறிக்கை....
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.
இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...
Sunday, December 07, 2008
மழை
முந்தைய வருடங்களை
நினைத்துப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சோடு
நிறுத்திக்கொண்டோம்...
முந்தைய வருடங்களுக்கும்
சேர்த்து மொத்தமாய்
இந்த வருடம்
கொட்டித் தீர்த்தது
மழை
**********
சுவற்றில் வரைந்து வைத்த ஸ்டம்பு
ரன் அவுட்டுக்கு வைத்திருந்த கற்கள்
எங்களின் விளையாட்டு கால் தடங்கள்
என அனைத்தையும்
மொத்தமாக அள்ளிக்கொண்டு
போனது இன்று அடித்த
புயல்....
**********
பலவருட கணக்குகளை
முடித்துப் போட்டது போல்
பெய்த மழையில்
சேர்ந்து போனது
எங்கள் வீட்டு வெள்ளாடும், கோழியும்....
Monday, November 17, 2008
வண்ணங்களாய்
வண்ணங்கள் சிறகு முளைத்து
சன்னலின் வழியே
காற்றில் கலந்து
வானவில்லாய் விரிந்தது
என் தூரிகையில்
அதை எடுத்து
மீண்டும் என் படபடக்கும்
நாட்குறிப்பில்
கரைத்துவிட முயற்சிக்கிறேன்
கைகளுக்குள் சிக்காமல்
உயரே சென்று
நட்சத்திரங்களாய்
ஒளிர்கிறது
என் எண்ணங்களும், வண்ணங்களும்.....
Wednesday, October 29, 2008
மழை
வெறுமையின் சூழலை
சூசகமாய் உணர்த்திச் சென்றது
அன்றைய மாலை நேரத்து
மழை...
**********
நாம் கைகோர்த்து
நடந்து சென்ற
மழைக்கால மாலைப் பொழுதை
நினைவு படுத்திச் செல்கிறது
இந்த மாலை நேரத்து
மழை...
**********
மாலை நேரம்
மழைச் சாரல்
சன்னலோரம்
தேநீர் கோப்பை
துணைக்கு.....
உன் நினைவுகள்
***********
என் மழைக்கால
மாலை நேரத்து
மிதிவண்டிப் பயணங்கள்
எல்லாம் முற்றுப் பெறுவது
உன் வீட்டு எதிரில் தான்
************
நீ இல்லாத
தனிமைத் துயரை
மேலும் அதிகரித்தது
இந்தப் பாழாய்ப் போன
மழை வந்து கொட்டிய
உன் வாசம்.....
Tuesday, October 21, 2008
மீண்டும் சந்திப்போம்....
நம் நட்பு
காத்துக்கொண்டிருக்கிறது
நமக்காக
உன்னுடைய இந்த
வார்த்தைகளை
நினைத்து...
Wednesday, October 15, 2008
ரஜினி?????
இந்த முக்கியத்துவத்துக்கு ரஜினி தகுதியானவர்தானா என்ற கேள்வியை நாம் ஒருமுறை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அண்ணாமலை படத்திலிருந்து இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்தின் வெளியீடின் போது இப்படி ரசிகர்களை உசுப்பும்படி ஏதாவது சொல்வது, பிறகு அதை அப்படியே மறந்துவிடுவது. மீண்டும் அடுத்த படத்தின் போது அறிக்கைகள். இதுதான் அவரின் வழக்கமே. தன்னுடைய படத்தின் வியாபார பயன்பாட்டிற்காகவே ரஜினிகாந்த் இதுபோன்ற அறிக்கைகளை விடுகிறார் என்று பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்த வண்ணம் தான் உள்ளது. இதற்கு பதில் சொல்ல அவர் தயாராக இல்லை. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் குசேலன் படத்தின் ஒரு காட்சியில், நீங்கள் திரைப்படத்தில் இப்படி அரசியல் சாயம் பூசப்பட்ட, அல்லது பூடகமாக சில வசனங்களைப் பேசுகிறீர்களே என்று கேட்கப்படும் கேள்விக்கு, படத்தின் வசனகர்த்தா எழுதிக் கொடுப்பதை நான் பேசுகிறேன், இதை என்னுடைய வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வரும். இதை ரஜினி சொல்வதாக ஏற்றுக்கொள்ளலாமா?
1996ல் நடந்த தேர்தலில் ரஜினி நடந்துகொண்ட விதம் அவர் பேசிய பேச்சு, ஜெயலலிதாவிற்கு பாதகமாக அமைந்தது. அவருக்கு அப்போதிருந்த செல்வாக்கு வேறு. ஆனால் 2002-03ம் ஆண்டுகளில் நடந்த காவிரிப்பிரச்சனையில் அவரின் நிலைப்பாடு, நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தது, விமான நிலையத்தில் இருந்து அவர் கொடுத்த பேட்டி, அவரின் மீது பாசம் வைத்திருந்த பல ரசிகர்களை அவருக்கு எதிராக செயல்பட வைத்தது, அப்போது என் விடுதி தோழர்கள் பலர் தன்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்த ரஜினி படத்தை கிழித்தெரிந்த நிகழ்ச்சிகளும் நடந்தன. தன்னுடைய சுயலாபத்திற்காக, வீண் வசனங்கள் பேசி, ரசிகர்களையும், மக்களையும் குழப்புவதே அவரின் வேலை.
ஒரு மனநோயாளியின் பேச்சுக்கு நாம் எந்த அளவிற்கு மதிப்பு கொடுப்போமா அந்த அளவிற்கு தான் நான் ரஜினி பேசும் பேச்சுக்கு மரியாதை கொடுப்பேன். இந்த முறை விடுத்துள்ள அறிக்கையில் கூட தெளிவாக எந்த முடிவும் எடுக்காமல். நான் வருவேன் ஆனா வரமாட்டேன் என்று குழப்பவாதியாகவே தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய திரைப்படங்களிலும், அவர் அவ்வப்போது கொடுக்கும் பேட்டிகளிலும் அவரின் இந்தக் குழப்பத்தை தெளிவாகக் காணலாம்.
அவரின் அரசியல் பார்வையும், நோக்கும் குறுகிய எண்ணம் கொண்டது, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே அரசியலை அவர் பயன்படுத்துகிறார். விஜயகாந்த் கட்சிக்காரர்களால் வடிவேலுவின் வீடு தாக்கப்பட்ட போது எப்படி வடிவேலு தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்றாரோ, அதைப் போன்றது தான் ரஜினியின் நிலைப்பாடும், முன்பு அதிமுக ஆட்சியில்(91-96) இவர் தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் பெருகிவிட்டது என்று பேச, இதனால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட, உடனே அந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக குரல் கொடுத்தார், அடுத்து திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி வந்ததும் தைரியலட்சுமி என்று பாராட்டி, ஜெயலலிதாவை அவர் வீடு வரை சென்று பாராட்டினார். சுயலாப அரசியலின் உச்சகட்டமாக இவரின் பாபா பட ரிலீசின் போது பாமகவினரால் ஏற்பட்ட தொல்லைகளுக்காக அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து தன்னுடைய ரசிகர்கள் வேலை பார்ப்பார்கள் என்று அறிவித்தார். கடைசியில் இவரின் மூக்கு உடைபட்டது தான் மிச்சம், அந்த ஆறு தொகுதிகளிலும் பாமக அமோக வெற்றி பெற்றது. தன்னுடைய அரசியல் செல்வாக்கை அத்தோடு அவர் உணர்ந்து அமைதி காத்திருக்கலாம். இதுதான் இவரின் செல்வக்கு என்று இவரது ரசிகர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு தலைவா வா, தலைமையேற்க வா என்று சுவரொட்டி ஒட்டியே காலம் தள்ளுகின்றனர்.
தலைமைக்கு சரியான ஆள் அவரல்ல என்று அவர் உணர்ந்து கொண்டார் போலும் அதனால் தான் அமைதியாக இருக்கிறார். ரசிகர்கள் எப்போது உணர்ந்து கொள்ளப் போகின்றனரோ???
Monday, October 13, 2008
இன்றோடு இரண்டு வருடம் ஆகிறது...
Wednesday, October 08, 2008
நீ - 4
போகிறேன் என்றாய்
நான் அடுக்கிக் கொடுக்கிறேன்
என்றமர்ந்தேன்
காதல் மாலை கட்டி
நமக்குச் சூடியது
பைக் பயணங்கள்
நீ இல்லாத
என் பைக் பயணங்களில்
வண்டியின்
பின் இருக்கையில்
அழகாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்