Wednesday, January 13, 2010

புத்தகக் கண்காட்சியும் நானும்....

புத்தகக் கண்காட்சி. சென்னைவாசிகளுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு
மிகப்பெரிய வரப்பிரசாதம். திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் தான் எனக்கு புத்தக்க் கண்காட்சி என்ற விஷயமே அறிமுகம் ஆச்சு.
அப்போது புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாது, நூலகப்
புத்தகங்கள் தான். என் கல்லூரி நூலகத்தில், இலக்கியம், அறிவியல் என
எல்லாத்துறைகளிலும் உள்ள புதுப் படைப்புகளை அவ்வப்போது சேர்த்துக் கொண்டே
இருப்பார்கள். அதனால் புத்தகங்கள் எனக்கு தடையில்லாமல் கிடைத்துக் கொண்டு
இருந்தது. வாரத்திற்கு எனக்கு இரண்டு புத்தகங்கள். அதை இரண்டே நாட்களில்
படித்து விடுவதால் என் நண்பர்களில் நூலக அட்டைகளைப் பயன்படுத்தி புத்தகங்கள்
எடுத்து வந்து படிப்பேன். எல்லாம் தமிழ் இலக்கியம் தான். கல்லூரி மூன்றாம்
ஆண்டு தான் அந்த பெரிய புத்தகக் கண்காட்சி திருச்சியில் நடந்த்து, என் விடுதிக்
காப்பாளர் அருட்திரு. ஜெயசீலன் அவர்கள் எங்களை கண்காட்சிக்கு செல்லச் சொல்லி
அறிவுறுத்தினார். அப்போது தான் நான் முதன் முதலாக அவ்வளவு பெரிய கண்காட்சியைப்
பார்த்தேன். எத்தனை கடைகள், எத்தனை புத்தகங்கள்!!!

படிப்பு முடித்து தஞ்சை வந்தபின் சில காலம் தஞ்சையில் தங்க வேண்டி இருந்த்து
அப்போதெல்லாம் தங்கவேல் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அந்த புத்தக்
கண்காட்சிக்கு செல்வேன். திருமண மண்டபம் என்றதும் ரொம்ப பெருசா நினைச்சுட
வேண்டாம். ரொம்ப ரொம்ப சின்ன இடம், சின்ன கண்காட்சி, நமக்கு தேடல் அதிகமானதால்
அப்போது அந்தப் புத்தகங்களால் தீனி போட இயலவில்லை. மேலும் எது மாதிரியான
புத்தங்கள் படிப்பது, என்னென்ன புத்தகங்கள் படிப்பது போன்ற அறிவும் இல்லை.
புத்தகங்கள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த காலம் அது. அப்போது அறிமுகமானது
தான் ரத்னா புத்தக நிலையம். சிறுபத்திரிக்கை முதல் பல நல்ல புத்தங்களை எனக்கு
அறிமுகம் செய்த இடம். நல்ல புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்ததால் என்னவோ அந்தக்
கடை காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டது.

பிறகு சென்னைப் பயணம். வேலைத் தேடி. சென்ற ஒரு வாரத்தில் விளம்பரம்
பார்க்கிறேன் சென்னை புத்தக்க் கண்காட்சி என்று. இவ்வளவு நாளும், விகடனில்
சுஜாதாவின் வார்த்தைகளிலும், பொதிகை தொலைக்காட்சி செய்திகளிலுமே பார்த்த
கண்காட்சி இப்போது நேரில். ஹைய்யா கண்டிப்பாக பார்த்துவிடலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அப்போது அது நடந்து கொண்டிருந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.
புதிதாக சேர்ந்த வேலை. இரவுப்பணி, வாரம் ஒருநாள் விடுப்பு போன்றவை அந்த வருட
புத்தகக் கண்காட்சியை பார்க்கவிடாமல் செய்து விட்டது. அடுத்த வருடம் கண்டிப்பாக
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருந்த்து. எனக்கு கிடைத்த
அதிகமான மாதவருவாய், என்னை புத்தகங்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்த்து.
அப்போது நான் தேடிய முதல் புத்தகம் ”சே வாழ்வும் மரணமும்”. அந்தப் புத்தகத்தை
என் மாணவப்பருவத்து வழிகாட்டிகளில் ஒருவரான அருட்திரு ஹென்றியின் மேசை மேல்
பார்த்திருந்தேன் மூன்று வருடங்களுக்கு முன். அதைத் தேடித் தேடி அலைந்து
கொண்டிருந்தேன். எங்கே என்ன வாங்குவது என்று தெரியாது அப்போது. அந்தப்
புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தேன். நல்ல தமிழ்ப்புத்தகம்,
கம்யூனிசம் சார்ந்தவை, தீவிர தமிழ் இலக்கியம் போன்ற விஷயங்களைத் தேடனும்னா
லேண்ட்மார்க் வாசலை எட்டிக் கூட பார்க்க்க் கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.
பாடலாசியர் பா.விஜய் கவிதைகளுக்கு(???) கொடுக்கும் முக்கியத்துவம் சுந்தர
ராமசாமி போன்றவர்களுக்கு இல்லை என்று எனக்கு புரிந்து போனது. ஹிக்கின்பாதம்ஸில்
விசாரித்த போது தான் அந்த சே குவேரா புத்தக பதிப்பகத்தின் முகவரி
கொடுத்தார்கள், கோடப்பாக்கத்தில் அந்த பதிப்பகம் தேடிச் சென்று அந்த புத்தக்ம்
வாங்கினேன். அந்த நாட்கள் என்னால் மறக்கவே முடியாத்து. என் வருவாயில்
பெரும்பகுதியை புத்தகங்களுக்கு செலவழித்த நாட்கள் அவை.

அப்போது வந்தது அடுத்த புத்தகக் கண்காட்சி, எனக்கு வரப்பிரசாதமாய். ஒரு வாய்
சோறுக்கு வீடு வீடாய் சென்று பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு எல்லா வீட்டுல
இருந்தும் வந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனியா ஃப்ப்பே முறையில் உணவு கொடுத்தா
எப்படி இருக்கும் அது மாதிரி இருந்துச்சு. நல்ல புத்தகங்கள் தேடி கடைக் கடையா
அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, எல்லோரும் ஒன்னா சேர்ந்து கண்காட்சி நடத்தினா,
நான் திக்குமுக்காடி போயிட்டேன். அவ்ளோ பெரிய கண்காட்சியை என் வாழ்க்கையில
முதல் முறையா அப்போ தான் பார்த்தேன். அவ்ளோ பெரிய இடம் அவ்ளோ கடைகள். ஒவ்வொரு
கடைக்கும் போய் ஒவ்வொரு புத்தகங்களா நின்னு படிச்சு, பிடிச்சதை எடுத்து, ஒரு
நாள் முழுக்க அங்க புத்தகங்களோடு இருந்த நாள் மறக்கவே முடியாது, மறுநாளும்
வந்து மறுபடியும் ஒரு நாள் முழுக்க புத்தகங்களோடு இருக்கும் சுகமே தனி. என்
நண்பன் விழியன் சொல்வது போல் புத்தகங்கள் போதைப் பொருள். மயக்கம் கொடுக்கும்.

இந்த வருடமும் வந்த்து புத்தகத் திருவிழா வழக்கத்துக்கு மாறாக 15 நாட்கள்
முன்னதாகவே. நான் அப்போ காசியில் இருந்தேன். சென்னை வந்ததும் முதல் வேலையா
புத்தகக் கண்காட்சிக்கு தான் சென்றேன். வழக்கம் போல் நேர்த்தியான அமைப்பு, இந்த
முறை நான் ரொம்ப எதிர்பார்த்து போனது அன்னம் பதிப்பகத்துக்கு தஞ்சைப் பெரிய
கோயிலின் ஆயிரமாவது வருஷத்தைக் கொண்டாட ”தஞ்சாவூர்” என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டு இருந்தனர். அப்புறம் நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு
வருஷமும் அற்புதமான நண்பர்களின் வழிகாட்டுதல் படி நல்ல இலக்கியங்கள்
பரிட்சயமாச்சு, ஆனா இந்த வருஷம் நான் போகும் நேரம் பார்த்து ஒருத்தர் கூட ஊரில்
இல்லை. எல்லோரும் புத்தாண்டை ஒட்டி ஊருக்குச் சென்றிருந்தனர். சரி தனியாவே
போகலாம்னு முடிவு பண்ணி நானே களத்தில் இறங்கினேன். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி,
புத்தங்களை சுவாசித்து, வரும்போது நண்பனின் அழைப்பு வந்த்து, தானும் வருகிறேன்
என்றான். வாடான்னு சொல்லிட்டு தேடிக்கிட்டு இருந்தேன். இந்த வருஷம் உருப்படியா
ஒரு காரியம் செஞ்சேன், முதலில் ஒரு சுற்று புத்தங்களின் பெயர்களைக் குறித்துக்
கொண்டு, அப்படியே கடை எண், புத்த்க விலை என எல்லாவற்றையும் குறிச்சுக்கிட்டு
அப்புறம் அதை அலசி ஆராய்ஞ்சு இன்னொரு நாள் போய் புத்தகங்கள் வாங்கியது. பார்த்த
மாத்திரத்தில் வாங்கினால் ஒரு பிரச்சனை, எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்பதும்
தெரியவில்லை, மேலும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு செல்லும் போது சீக்கிரமே
சோர்வடைந்து விடுகிறேன், அதனால் முழுமையாக எல்லாக் கடைகளையும் பார்க்க
முடியவில்லை.

நம்ம புத்திக்கு உலக அரசியல், விடுதலை வரலாறுகள், கம்யூனிசம் சார்ந்த விஷயங்கள்
தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. கூட வந்தவன், இவரோட சிறுகதை நல்லா இருக்கும்,
அவரோட நாவல் நல்லா இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இப்பொ இருக்குற
சேர்மானமும் அப்படித்தான் சொல்லுது. அதான் என்ன வாங்குறதுன்னு குழம்பிப் போய்,
இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம்னு வாங்கிட்டு வந்தேன்.

என்னமோ சொல்ல வந்து என்னமோ எழுதிக்கிட்டு இருக்கேன்... இவ்ளோ பெருசா
எழுதிட்டேன், ஆனா எப்படி முடிக்கிறதுன்னு தெரியல. ம்ம்ம் இதனால் எல்லோரும்
சொல்வது என்னன்னா புத்தகக் கண்காட்சி மிகவும் பயனுள்ளது. எல்லோரும் நல்ல
புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்.

Saturday, January 09, 2010

பயணங்கள் - 2

வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்

Tuesday, December 29, 2009

பயணங்கள்

நகரும் மரங்களின்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது

வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது

மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது

என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...

Wednesday, December 23, 2009

நிகழ்வுகளோடு

வாழ்க்கை எனக்கு எப்போதுமே பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு... நான் அதுல கத்துக்குறது தான் குறைவு. என்னோட வாழ்க்கை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்ன வரைக்கும் நான் தீர்மானிச்சதா தான் இருந்துச்சு. படிப்பு, வேலை, குறிக்கோள், அப்புறம் அதை கைவிட்டது, குறிக்கோள் மாறியது எல்லாமே. ஆனா கடந்த ஒன்னரை ஆண்டுகளாக அதுவும் தொழில் ஆரம்பிச்ச பிறகு எல்லாமே என் கையை மீறிப் போகிற விஷயங்களாகத்தான் இருக்கு. அது என் தொழிலாகட்டும், பண விஷயமாகட்டும், உறவுகளோடு இருக்கும் நெருக்கமாகட்டும், தோழிகளில், நண்பர்கள் என எல்லாமே, எல்லோருமே கொஞ்சம் தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு.

2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.


வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...

Thursday, December 10, 2009

தோழி நினைவுகள் - 1

நேசக்கரங்கள் நீட்டினாய்

இருளின் பிடியிலிருந்து

விடுவித்துக்கொள்ள



ஆதரவுக் கரம்பற்றி

வெளிச்சத்தின் திசைகளை

எட்டிப்பிடித்தாய்


புள்ளியாய்த் தொடங்கிய

வெளிச்சம்

பேரண்டமாய் ஆட்கொண்டது



அங்குல அங்குலமாய்

திசைகளை அளந்தாய்

வெளிச்சத்தின் நீட்சியை

எங்கும் பரவச் செய்தாய்



அளவற்ற அன்பு

உள்ளங்களில் பரவச் செய்தாய்

கண்களிலே கருணை

பொங்கச் செய்தாய்



உன்னைச் சந்திக்கும்

தேதிகளில் எல்லாம்

என் நாட்குறிப்பில்

பூக்கள் பூக்கச் செய்தாய்



வண்ணங்கள் தீட்டப்பட்ட்

ஓவியமாய்

உன்னைச் சந்தித்தவர்கள்

வாழ்க்கை மாறியது



சட்டென்று ஒரு நாள்

தோள்சாய கிடைத்திருக்கிறான்

தோழன் ஒருவன்

ஒன்பதாம் திசையில் இருந்து

என்றாய்

எங்கள் கைகளை

உதறிவிட்டு தனித்துச் சென்றாய்



கணக்கில் வராத அந்தத் திசை

இருளின் அரசாங்கமென

எச்சரிக்க வாயெடுத்தேன்

காதுகளைப் பொத்திக் கொண்டாய்

இப்போது கவிதை எடுத்திருக்கிறேன்

கண்களை மூடிவிடாதே.

Monday, November 23, 2009

தீர்க்கப்படாத கணக்கு

மணிக்கணக்காய்
பேசிவிட்டு
கிளம்பும் போதும்
ஏதோ மிச்சம் வைத்திருப்பதாகவே
தோன்றுகிறது.
கொஞ்சம் சேமித்து வைத்திருக்கும்
முத்தங்களைக் கொடுத்து
கணக்கை தீர்த்துவிட்டு போ


******


இன்னும் கொஞ்சம்
என்று நான் கேட்க
முடியாது போடா
என்று நீ தள்ள
ஹீம்ம்ம்ம்ம்
கோபித்துக் கொண்டு
தள்ளிப் போய்
நாற்காலியில் அமர்ந்தேன்
சிரித்துக் கொண்டே
பின்னால் வந்து
கட்டிக்கொண்டு
இந்தா என்று அள்ளிக் கொடுத்தாய்
முத்தங்களை

Friday, October 30, 2009

நான் - எனது நீட்சி

முட்கம்பிகளுக்குள்
வாழ்க்கையைத் தொலைத்து
தேசம் இழந்து
அகதியாய்
நிர்கதியாய்
நிர்வாணமாய் நிற்கிறது
சொந்தங்கள்
தினம் தினம்
செய்திகள்
இவ்வளவு
படித்த பிறகும்
உன் முத்தத்தின்
தித்திப்பு என்று
கூசாமல் அடுத்த
கவிதை பற்றி சிந்திக்கிறது
சுரணையற்ற மனது


******

நாண்டுக்கிட்டு செத்து போகலாம்டே
என்று மனசாட்சி சொல்கிறது
ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
மாட்டிக்கொண்டு
கூனிக் குறுகி
கையூட்டுக் கொடுத்த
நிமிடங்களை
நினைக்கும் போது

Wednesday, October 14, 2009

வலைப்பக்கத்தில் மூன்று ஆண்டுகள்

நேத்தோட இந்த வலைப்பக்கம் ஆரம்பிச்சு மூனு வருஷம் முடிஞ்சு போச்சு... சம்பிரதாயத்துக்கு ஒரு கவிதையோ இல்லை இது மாதிரி ஒரு அறிவிப்போ போடலாம்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன். நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வண்டியில போகும் போது தான் ஞாபகம் வந்துச்சு. சரி நாளைக்கு போட்டுக்கலாம்னு நினைச்சு விட்டுட்டேன். இன்னிக்கும் மறந்துட்டேன். இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. வலைப்பக்கம் ஆரம்பிச்சு பெருசா ஏதும் சாதிக்கல. நானும் ஒன்னு வச்சிருக்கேன் பாருன்னு மத்தவுங்களுக்கு காட்டத்தான் வலைப்பக்கம் ஆரம்பிச்சேன். என் கல்லூரி கால கவிதைகளில் சிலவற்றை எடுத்து தூசி தட்டி அன்புத்தோழி என்ற பெயரில் கவிதை போட்டேன். கல்லூரி காலத்துல எழுதின பலவற்றை வலைப்பக்கம் ஆரம்பிக்கும் போது பாத்தா பல கவிதைகள் எனக்கு பிடிக்கல. கல்லூரி படிக்கும் போது நான் கவிதை எழுதுவேன்னு மமதையோட திரிஞ்ச காலம் அது. வைரமுத்துவின் சாயல் இருக்கும் கவிதைகளில். நெடிய கவிதைகள் அவை. சென்னை வந்து பெரிய பெரிய ஆட்களின் கவிதைகளைப் பார்த்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். என்னடா இது என்று. நாமெல்லாம் இன்னும் வளரனும் போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டேன்.

கூகுள் குழுமங்களின் அறிமுகம் எனக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுத்த்து. வலைப்பதிவாளர்களைச் சந்தித்த போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் நீ இன்னும் கிழிக்க வேண்டியது நிறைய இருக்குடா என்று... சமீபத்தில் எழுதிய கவிதையை என் குழுமத்து அண்ணன் ஒருவர் பார்த்துவிட்டு சொன்னார். தேறிட்டடா என்று. கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

இப்போ நினைச்சுக்குறேன் டேய் மவனே இன்னும் ஒழுங்கா எழுது.. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு சமூக அக்கறையோட எழுதுன்னு. கல்லூரி காலம் தான் அதிக சமூக அக்கறையுள்ள கவிதைகளைக் கொடுத்தன. அதன் பிறகு வழக்கமான வாழ்க்கையில் சுற்றுத்திரிந்து அதைப் பற்றி மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். சமீபத்தில் எழுதிய கவிதையில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த கவிதை ஈழம் சார்ந்த ”புதைந்து போன கனவுகள்” என்ற கவிதையும், ”கதறல்” கவிதையும் தான். கதறல் கவிதை என்னோட அனுபவம். ஈழம் சார்ந்த அந்தக் கவிதைகளை முடித்த போது ரொம்ப நாளா மனசில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த மாதிரி ஒரு அனுபவம்.

இந்த மூன்றாவது வருடம் எனக்கு நல்ல நண்பர்களையும், என் கவிதைகளையும் படித்து கருத்து சொல்லி நல்லா இருக்குன்னு உற்சாகப்படுத்தின நண்பர்களையும் பெற்றுத் தந்தது. எனக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்கள் எனக்கு மிகப்பெரிய பலம்.

சரி... மீண்டும் அடுத்த வருஷம் நான் என்னத்தை கிழிச்சேன்னு மறுபடி கொஞ்சம் பார்க்கலாம். பை.....

உடைதல்

அந்த சின்னஞ்சிறு
பொம்மை உடைந்து
போனதற்கு
இவ்வளவு வருத்தப்படும்
நீ
கொஞ்சம்
என் மனதையும்
கணக்கில் எடுத்திருக்கலாம்....

Monday, October 12, 2009

நீ - 5

அடித்து
திருத்தி
கிழித்து
எறியப்பட்ட
வார்த்தைகள்
மீண்டும் சேர்க்கச் சொல்லி
கெஞ்சுகின்றன
உன்னைப் பற்றிய
கவிதையில்.


****


இந்த உலகத்திலேயே
நான் அதிகம் நேசிப்பது
உன்னைத் தான் என்கிறாய்
இதைப் பொய்யெனச்
சொல்லிவிட்டு போகிறது
பதிலளிக்காது போகும்
உனக்கான என்
அலைப்பேசி அழைப்புகள்

Thursday, October 08, 2009

நீளும் நாட்கள்

திரும்பிய பக்கமெல்லாம்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....

Thursday, October 01, 2009

அழியாத நினைவுகள்

எத்தனை முறை
அழிக்க முற்பட்டாலும்
மீண்டும் கண் முன்
வந்து நிற்கிறது
வண்டி ஏற்றி
காலை உடைத்த
நாய்க்குட்டியின்
கதறல்

Monday, August 10, 2009

மழையாய்....

உன் கவிதைகளுக்கு
நான் பதிலிடுவதில்லை
என்று கோபப்படுகிறாய்


உன் கவிதைகளின்
ரசிகன் நான்
மௌன ரசிகன்


அமைதியாய் ரசித்து
உள்ளுக்குள் சிரித்து
சிலிர்த்து பத்திரப்படுத்துகிறேன்
உன் கவிதைகளை


சில சமயம் ஆச்சர்யத்தில்
உறைந்து போவதுண்டு
உன் சொல்லாடல்கள் கண்டு


அள்ள அள்ள குறையாத
காதல் உன்னிடமிருந்து
வார்த்தைகளாய்ப் பெருக்கெடுத்து
மழையாய் நனைக்கிறது


நனைகிறவர்கள் அறிவார்களா
அந்த மழை நான் தான் என்பதை

Sunday, August 09, 2009

எதிர்கால இந்தியா

தம்பி வந்து கேட்டான்
எதிர்கால இந்தியா
இது தான் தலைப்பு
ஒரு கவிதை வேணும் எனக்கு

குழம்பித்தான் போனேன்
எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்த போது

குழப்பத்திலேயே தூங்கிப் போனேன்
கனவாக விரிந்தது எதிர்கால இந்தியா

பளபளக்கும் சாலைகள்
விண்ணை முட்டும் கட்டிடங்கள்
சாலைகளிலே தரைக்கு மேலே என
எங்கும் வாகனங்கள்
அளவான இறுக்கமான உடையோடு பெண்கள்
அதே போன்ற உடையில் ஆண்கள்
பரபரப்பான வாழ்க்கை எங்கும் எதிலும்

தொலைப்பேசி அலைப்பேசி இல்லாமல்
காதோடு பொருத்திய குட்டிக் கருவி
தகவல் சுமந்து சென்றது

காற்றில் கணினி விரிந்து
முன்னேற்றம் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்

என்ன சாப்பிடுகிறார்கள் இவர்கள்
சற்றே இக்கேள்வி வந்து
மூளையைக் குடைந்தது

அருகில் இருக்கும் உணவகம் சென்றேன்
வகை புரியா உணவுகள்
விதவிதமான நிறங்களில்

தேடிப் பார்த்தேன்
தூரத்தில் ஒருவர்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்
எனக்குப் பிடித்த சோறு

ஊரைச்சுற்றலாம் என்று நினைத்து
திரும்பிய போது வாகனம் ஒன்று
நெருங்கி நின்றது

அடுத்த ஊருக்குச் செல்லுமாம்
இலவச பயணமாம்
வழியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாமாம்
ஏறி அமர்ந்தேன்

நகரத்தின் பளபளப்பு கொஞ்சமாய் மறைந்து
இயல்பாய் விரிந்தது கிராமத்துச் சூழல்
இறங்கிக் கொள்கிறேன் இங்கே என்றேன்
ஏளனப்பார்வைகள் முகத்தைக் கூறுபோட
கேள்விக்குறியோடு இறங்கிப்போனேன்

என்னென்ன மாற்றங்கள் இங்கே
இருக்கின்றன என்று தேடிய போது

அங்கே உணவுக்காக எலி தேடியபடி விவசாயி......

Tuesday, July 28, 2009

கவிதைகள்

கவிதைகள் என்று
தலைப்பிருந்தாலே
கொஞ்சம் தள்ளி
நின்று கொள்கிறேன் நான்


முதல் சந்திப்பு
என்னவள், காதல் தோல்வி
ஏய் இளைஞனே
என்ற வார்த்தைகள்
ஒவ்வாது போகின்றன.


சபித்துக் கொண்டே
அழிக்கிறேன்
நீண்ட கவிதைகள்
தாங்கிய மின்னஞ்ல்களை


என் கவிதையும்
இன்னொருவருக்கு
இப்படித்தான்
என்று நினைக்கையில்
எழுத எடுத்த பேனாவை
மூடி வைத்துவிட்டேன்

Wednesday, July 22, 2009

புதைந்து போன கனவுகள்

அவசரத்தில் விட்டு வந்த
மரப்பாச்சிக்கு அழும்
தங்கைக்குத் தெரியவில்லை
அதைத் திருப்பி எடுக்கப் போன
அண்ணன் பிணமாய்க் கிடப்பது


*******


தொலைந்து போனவர்களின்
பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
விடுபட்டவர்களின் பெயர்களைச்
சொல்லி அழுது கொண்டிருந்தனர்
பக்கத்தில் நின்றவர்கள்
நாளை என் பெயர்
பட்டியலில் இருக்குமா?
விடுபட்டு போயிருக்குமா?
தெரியவில்லை எனக்கு
பட்டியலில் இருந்தால் பார்ப்பதற்கும்
விடுபட்டால் அழுவதற்கும்
யார் இருக்கிறார்கள்?
நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன்
தூக்கம் கலைத்தது
நெருங்கி வரும் பூட்ஸ் காலடி ஓசை....


*****


எங்கள் வாழ்க்கையை
புதைத்துக் கனவுகளைக்
கட்டியெழுப்பிக் கொண்டிருந்தோம்
இப்போது சரிந்து கிடப்பவை
இன்றைய கோபுரங்களா
நாளைய கனவுகளா???

Thursday, July 16, 2009

மழைக்காலம்

எப்போதாவது
உயிருக்குள் ஊடுருவி
நனைத்துச் செல்லும்
மழையை ஒத்ததாய் இருந்தது
நீ எனக்கு அனுப்பிய
குறுஞ்செய்தி

*****

நீ இல்லாத மாலைப் பொழுதில்
உன் நினைவுகளை
அசைபோடச் சொல்லி
என்னைத் தூண்டியபடி
இப்போதும் பெய்கிறது மழை

*****

என் நாட்குறிப்பின்
பக்கங்களுக்கு வண்ணம்
தீட்டியபடி செல்கின்றன
உன்னைச் சந்தித்த
பொழுதுகள்

*****

ஏதுமல்லாத
வெறுமையின் தருணங்களில்
இயல்பாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்

நாட்குறிப்பில்
சொல்லப்படாத மௌனங்களின்
நேரங்களில் இட்டு
நிரப்பப்படுகிறது உன்
ஸ்பரிசத்தின் கணங்கள்

******

முன்னறிவிப்பு இல்லாத
திடீர் சந்திப்புகளின்
ஆச்சர்யங்களுக்குள்
அடங்கி இருக்கிறது
அழகான நம் நட்பு

******

Thursday, June 18, 2009

மாசிலாமணி – இம்சை அரசன்

இன்னிக்கு என்னோட பிறந்தநாள். என் பிறந்தநாளை எப்போதும் நான் கொண்டாடியது இல்லை, என் அம்மாவும், என் நண்பர்களும் தான் கொண்டாடுவார்கள். தஞ்சையில் எனக்கு இருந்த நண்பர்கள் அனைவரும் சென்னையில் இருக்கின்றன்ர், இருவரைத் தவிர என் தோழியும் என் தோழன் கிஷோரும். இந்தமுறை என்னோட பிறந்தநாளைச் சிறப்பா கொண்டாடனும்னு முடிவெடுத்து இருந்தா என் தோழி. காலையில் என் அலுவலகம் வந்தார்கள் இருவரும். ஏன் என்னன்னு கேக்க கூடாது உடனே கிளம்பு என்றனர். சரியென்று கிளம்பினேன். இரண்டு பேக்கரி சென்று அலைந்து ஒரு வழியாக எனக்கு கேக் வாங்கிக்கிட்டு கிளம்பினாங்க. என்கிட்ட கேக் வாங்கனும்னு சொல்லி இருந்தா அலையாம நம்ம அலுவலகம் பக்கத்துலேயே வாங்கி இருக்கலாமே என்றேன். அதற்கு ஒரு முறைப்பு தான் பதிலாக வந்தது.

எங்கடா போறோம்னு கேட்டா முறைச்சு பாத்து அமைதியா வான்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாங்க. மேம்பாலத்தை விட்டு இறங்கும் போது கொஞ்சம் கூட யோசிக்காம சரட்டுன்னு வலப்பக்கம் திரும்பினா என் தோழி, என்னடா இது பிறந்தநாள் அன்னிக்கு பிரச்ச்னையில மாட்டி விட்டுடுவாளோன்னு நினைச்சு கொஞ்சம் பொறுமையா வண்டிய திருப்பினேன். அவ வண்டிய நிறுத்தின இடம் அட்லாப்ஸ் தியேட்டர். இப்போ தான் படம் ஆரம்பிச்சுச்சு என்றார்கள். உள்ளே கேக், தீப்பெட்டி அனுமதி இல்லை என்றனர். இன்னிக்கு இவரோட பிறந்தநாள் தியேட்டர்ல கேக்வெட்டி கொண்டாடனும்னு சொன்னதும் தியேட்டர்காரன் சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டான். ஆஹா இன்னிக்கு நாம அவ்ளோ தான், ஊர்காரங்க கிட்ட உதை வாங்கனும் போலன்னு நினைச்சுகிட்டு உள்ளே போனேன். இப்போ வெட்டக் கூடாது கொஞ்ச நேரம் படம் ஓடினதும் வெட்டுங்கன்னு சொன்னான் தியேட்டர்க்காரன். இப்போ உதை வாங்குனா என்ன கொஞ்ச நேரம் கழிச்சு உதை வாங்குனா என்ன, எப்படியும் உதை உறுதின்னு நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனா என்னை காப்பாத்திடுச்சு இந்தப் படம். உள்ளே நுழையும் போது கதாநாயகன் அறிமுகப் பாடல் ஓடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் மொக்கையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது, தொடர்ச்சியா கதாநாயகி அறிமுகம். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு அந்தப் பொண்ணை கொஞ்சம் சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பத்தி நிமிஷத்துல என் தோழி நண்பா மன்னிச்சிடு உன் பிறந்தநாள் அதுவுமா இப்படி ஒரு பெரிய மொக்கை படத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வந்திருக்க கூடாதுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா. வந்ததும் போகக் கூடாதேன்னு நினைச்சுக்கிட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கலாம், இயக்குனர் ஏதாச்சும் செஞ்சிருப்பார்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது வரிசையா ரெண்டு காட்சிகள் ஒன்னு வடிவேலுவைக் காலிங்பெல் அழுத்தச்சொல்லி ஒரு குழந்தை மாட்டி விடுமே அந்தக் காட்சி இதில் வந்தது வடிவேலுவுக்கு பதில் சந்தானம் அண்ட் கோ. அடுத்து தம்பி படத்துல ஹீரோயின் நடனம் ஆட முடியாம ஹீரோ ஒருத்தனை அடிச்சு அந்த நடன நிகழ்ச்சி நின்னு போயிடுமே அதை நினைவு படுத்தும் காட்சி, ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் தான் மாற்றம். கொஞ்சம் கூட சொந்தமா யோசிக்க மாட்டாய்ங்களான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது இவுங்க இரண்டு பேரையும் பார்த்தேன். ஒரு அரை மணி முடிஞ்சிடுச்சு இன்னும் ஒரு அரைமணி நேரம் இருக்கலாம்னு சொன்னாய்ங்க. சரி இருக்கலாம்னு நினைச்சேன். பத்து நிமிஷத்துல நண்பா கிளம்பலாம்னு சொன்னா என் தோழி. சரி இதுக்கு மேல வேணாம்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம். கேக் என்னோட அலுவலகத்தில் பிறகு வெட்டப்பட்டது.

படம் ஆரம்பிச்சு சரியா 40 நிமிஷத்துல வெளியேறிட்டோம்.. என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெளியேறியது... என்ன நினைச்சுக்கிட்டு இயக்குனர்கள் இந்தமாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியல. இவனுங்க யார்க்கிட்டயாவது உதவி இயக்குனரா பணியாற்றினா நல்லா இருக்கும். இல்லைன்னா திரைக்கதை எழுதுவது எப்படின்னு தெரிஞ்சுகிட்டு வரட்டும். நடிக்கும் அனைவருமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்லாம செயற்கையாகவே பேசுகின்றனர் ஆரம்பத்தில் இருந்து. காமெடி என்ற பெயரில், சந்தானம், கருணாஸ், பாஸ்கர் என எல்லோருடைய மொக்கையும் சராசரிக்கு மிகக் கீழே. இதையெல்லாம் ஒரு படம்னு ரிலீஸ் பண்ணி, வெற்றிப்படம், வெற்றி நடைன்னு போட்டு நம்மையெல்லாம் ஏமாற்றும் சன்பிக்சர்ஸ் வாழ்க...

Sunday, May 31, 2009

மீண்டும்

கைகோர்த்துக்கொண்டு
நடந்து இந்தச் சாலையின்
நீள அகலம் அளந்த
காலமெல்லாம் சட்டென்று
தோன்றி மறைந்தது கண்முன்

எதிரெதிரே நீயும் நானும்
குறுக்கே சாலை
உன் பார்வையின்
வீச்சு தாங்க முடியாமல்
கண்களை மூடிக்கொண்டேன்

பிரிவுகள் ரணமானவை என்று
நம் பிரிவு தான் எனக்கு
உணர்த்தியது...

தவறான புரிதல்கள்
உன்னை என்னிடமிருந்து
அன்னியப்படுத்திடும் என்று
எதிர்பார்த்திருக்கவில்லை

உன் நிராகரிப்புகளால்
நொறுங்கிப்போனது என் மனம்
மட்டுமல்ல அலைப்பேசிகளும் தான்


தோளோடு அணைத்துக்கொண்டு
காதோடு ரகசியம் பேசி
விழிகளில் கவிதைகள் சுமந்து
அங்குலம் அங்குலமாக அளந்த
சாலையல்லவா இது.....

வாகனத்தின் பேரிரைச்சல்
என்னை நினைவுக்கு அழைத்து வருகிறது

அதே இடத்தில் மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்
என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்
கண்களில் ஆச்சர்யம் சுமந்து

பேசலாமா யோசனையோடு
பார்க்கிறேன் நான்
பேச மாட்டாயா என்கிறது
உன் பார்வை
உனை நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்

”ஹாய்...” என்றேன்

”ஹாய்” என்றாய்

”எப்படி இருக்க??? ”

”நல்லா இருக்கேன்... நீ?”

”ம்ம்ம் இருக்கேன்.. ”

”ஒரு கப் காபி?” என்றேன்

”கண்டிப்பா.... ரொம்ப நாள் ஆச்சு...” என்றாள்

வழக்கமாய் செல்லும் கடைக்குச் சென்று வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்தோம்

”என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ” என்றாய்

”அதே கம்பெனி தான்...... நீ?”

”போன வாரம் தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்... ” என்றாய்

“இந்தப் பக்கம் ?”

“கொஞ்சம் பொழுது போகல, கொஞ்சம் மனசும் சரியில்ல... இந்த சாலை ரொம்ப பிடிச்ச சாலை.. அதான் ஒரு சின்ன வாக் போகலாம்னு... நீ எங்க இந்தப் பக்கம்??” கேட்டாய்....

”நான் எப்போ ப்ரீயா இருந்தாலும் இந்த சாலையில ஒரு வாக் போவேன்... நாம கைகோர்த்துக்கிட்டு நடந்தது நினைவுக்கு வரும், கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்... ”

”ம்ம்ம்ம்” ஆமோதித்தாய் அழகாக

அமைதியார் காபி அருந்தினோம்.. அளவாய் பேசினோம்... நலம் விசாரிப்புகள் முடிந்தன...

“சரி கிளம்பலாமா?” என்றேன்....

“ ம்ம்ம் போகலாம்... என்றாய்... சற்று நடந்தவள் திரும்பி கேட்டாய்..... உன் அலைப்பேசி எண் அதே தானா இல்லை மாத்திட்டியா?”

“இல்ல மாத்தல... அதே எண் தான் நீ எப்போவாச்சும் கூப்பிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு மாத்தாம வச்சிருக்கேன்... உன்னோட எண்?”

“ ம்ம்ம்ம் நானும் அதுக்காக தான் மாத்தாம வச்சிருக்கேன்” என்றாய்.....

“எப்படி வந்த? வண்டியிலா??? எப்படி இருக்கிறது அந்த ஆக்டிவா?

“இல்ல ஆட்டோல? நீ?

“என்னோட வண்டியில்... ஆட்டோ பிடிக்கவா உனக்கு? எந்த ஏரியா?”

“பெசண்ட் நகர்? நீ?”

“அதே அடையார் வீட்டுல தான் இருக்கேன்”

“ இரு ஆட்டோ பிடிக்கிறேன்...” என்றேன்....

“இல்ல... உனக்கெதும் வேலை இருக்கா? இல்லை வீட்டுக்கு தான் போறியா?

“வீட்டுக்கு தான் போறேன்.....”

“என்னை உன் பைக்கில் கூட்டிக்கிட்டு போய் விட்டுடேன்”

“ம்ம்ம்ம்” தலையாட்டினேன்....


நிசப்தம் எங்களோடு சேர்ந்து வந்து கொண்டிருந்தது... சிறிது நேரத்தில் என் தோளில் சாய்ந்து கொண்டு விசும்பத் தொடங்கினாய்.. நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆதரவாய் உன் கரம் பற்றிக் கொண்டேன்...

Monday, April 20, 2009

வாழ்த்துகள்



உன் கைப்பிடித்து
நான் முறுக்குகையில்
என் மீசையைப்
பிடித்து இழுத்தாய்
வலி தாங்காமல்
உன் கை விட்ட என்னை
பார்த்து உதடு சுழித்து
பழித்துக் காட்டினாய்...

உறவினர் சிரிக்க,
இரு உன்னை
என்று விரட்டினேன்
ஒளிந்து சுற்றி
ஓடி கொல்லப்புரத்து
மாமரத்தில் ஒளிந்தாய்
சுற்றி வந்து மடக்கினேன்

என் கிடுக்கிப் பிடிக்குள்
வீழ்ந்த நீ
வெளியேற மறுத்து
நெருங்கினாய்...
இதழ்பதிக்க அணைத்தேன்

சட்டென ஒலித்தது கெட்டிமேளச்சத்தம்
நினைவுக்கு திரும்பினேன்
எங்கே இருக்கிறாய் என்று நீ
கண்ணால் கேட்டாய்
சிரிப்புடன் இங்கே தான் என்று
உனக்கு தாலி கட்டினேன்
நம் குடும்பம் வாழ்த்த.....