Wednesday, October 27, 2010

காலமும் நீயும்

உன்னைப்பற்றி எழும் உணர்வுகளை
காலம் தன்வசம்
உள்ளிழுத்துக் கொள்கிறது
காலத்திடம் சண்டையிடும்
திறமில்லை எனக்கு...
கடந்து செல்லும் நாட்களை
இழுத்து பிடித்து நிறுத்தும்
வலிமையில்லை எனக்கு...
மௌனித்திருக்கிறேன்
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி

Friday, March 26, 2010

வார்த்தைகள்

கவிதைக்கென சேர்க்கப்படும்
வார்த்தைகள் அறுந்து
தொங்குகின்றன அந்தரத்தில்.

பிடிக்கமுடியாத வேகத்தில்
சுற்றிச் சுற்றி வருகின்றன
தனிமையில் இருக்கும் போது.

வாயிலிருந்து ஓயாமல்
வந்துவிழும் வார்த்தைகளை
மண்ணுக்குள் புதைத்து விடுகிறேன்.

அவை விருட்சங்களாக
எழுந்து நின்று
கிளைகள் எங்கும்
வார்த்தைகள்

அவையே மீண்டும்
விதைகளாய் விருட்சங்களாய்
அங்கும் இங்கும் எங்கும்
வார்த்தைகள்.

Sunday, March 21, 2010

ஐபிஎல் - ராயல் சேலஞ்சர்ஸ்

இந்த ஐபிஎல் போட்டிகளின் ஆரம்பத்தில் வழக்கம் போல் அணிகளைப் பற்றிய கருத்துக் கணிப்புகள், தொலைக்காட்சி விவாதங்கள் என பெரிதாக பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு உள்ள அணிகள் சொதப்பிக்கொண்டு தான் இருக்கின்ற. நான் வழக்கம் போல் எனக்குப் பிடித்த அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருதேன். எனக்கு டிராவிட், கும்ளே ரொம்ப பிடிக்கும் அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிடிக்கும். முதல் ஐபில் தொடரில், அந்த அணியில் டிராவிட் மட்டுமே சிறப்பாக ஆடினார். அது ஒரு டெஸ்ட் தொடருக்கான அணி போலவே இருந்தது. காலிஸ், சந்தர்பால் என ஒரு டெஸ்ட் அணி என்றே வர்ணிக்கப்பட்டது. தொடரிலும் சோபிக்க வில்லை.

இரண்டாவது தொடரில் முதல் போட்டியிலேயே முதல் தொடரின் வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோற்று என் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொண்டது. அப்போது அணியின் தலைவராக இருந்தார் கெவின் பீட்டர்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அவர் மீது. மல்லையா அந்தக் குதிரையின் மீது அதிகப் பணமும் கட்டியிருந்தார். ஆனால் தொடர் தோல்விகள் கண்டு துவண்டிருந்த நிலையில் தனது இங்கிலாந்து அணிக்காக விளையாடச் சென்றார் பீட்டர்சன். அப்போது அணித்தலைவர் பதவி தேடி வந்து கிடைத்தது கும்ளேவுக்கு. யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஒரு U turn அடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சிறப்பான பேட்டிங் மற்றும் அற்புதமான பந்துவீச்சு என மொத்தமான மாறியது அணி. டிமெர்வ், பிரவீன் மற்றும் அணித்தலைவர் கும்ளேவின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது. டிராவிட், ரோஸ், ரைடர், காலீஸ், உத்தப்பா, கோலி ஆகியோரின் ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்து. கடைசி வரைப் போராடினர் எல்லா ஆட்டங்களிலும். இறுதிப்போட்டி வரை சென்றது அந்த அணி. எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் கண்டெடுத்த ஒரு முக்கிய அதிரடி ஆட்டக்காரர் பாண்டே. அப்புறம் டிமெர்வ். அருமையான சுழற்பந்து வீச்சாளார் மற்றும் அடித்து ஆடக்கூடிய நபர். வெற்றி பெற்றிருக்க வேண்டிய அணி. கோப்பையை பறிகொடுத்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம். அந்தத் தோல்விக்கு கடைசி ஓவரில் ஒற்றை ரன்கள் எடுக்காமல் நின்றிருந்த உத்தப்பாவும் ஒரு காரணம். ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணியின் கலவை எனலாம். காலிஸ், டிமெர்வ், பவுச்சர், ஸ்டெய்ன் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிகம்.


மூன்றாவது தொடர் ஆரம்பத்தில் முதல் போட்டியில் கொல்கத்தை நைட் ரைடர்ஸிடம் மோசமாக தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அடுத்தது மோதியது பஞ்சாப் அணியுடன் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 204 ரன்கள் எடுத்தபோது முடிஞ்சு போச்சு ஆட்டம் என்று தான் நினைத்தேன். ஆனால் பாண்டே, காலிஸ் உத்தப்பா என மூன்றே பேர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். காலிஸ் அடித்த 93, உத்தப்பாவின் அதிரடியான 51 ஆட்டத்தின் சிறப்பம்சங்கள். அடுத்து வந்த இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் இருக்கிறது இப்போதைய தரவரிசையில். காலிஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிரடியான மற்றும் நிதானமான ஆட்டம் ஆடுகிறது அணி. இந்த முறை கோப்பை வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டி இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஐபிஎல்லில்

Wednesday, January 20, 2010

பயணங்கள் - 4

நீண்டு
வளைந்து
நெளிந்து
தன் போக்கை
தானே தீர்மானிக்கும்
நதியின்
கரையிலே
ஒதுங்கிக் கிடக்கிறது
ஒருவனின்
சடலம்

Wednesday, January 13, 2010

பயணங்கள் - 3

பள்ளத்தாக்குகளின்
காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே பயணிக்கும்
ஆசை வந்து விடுகிறது
எனக்கு

கைகளைத் தேய்த்துக் கொண்டு
கன்னத்தில் வைத்து
சூடு பரப்பவும்

அண்ணாந்து பார்த்துக் கொண்டே
மரங்களைக் கிழித்து
கீழே இறங்கும்
வெளிச்சம் தரிசிக்கவும்

கைகளை விரித்து
தழுவிச் செல்லும்
காற்றை வரவேற்கவும்

பச்சை மரங்களின்
வாசனை
நுகரவும்

இன்னும் இன்னும்
நிறையவே
ஆசை

எல்லாம் அமுங்கிப் போய்
தொலைந்துவிடுகிறது
கான்கிரீட் காடுகளில்
சிக்கிக் கொள்ளும் போது....

புத்தகக் கண்காட்சியும் நானும்....

புத்தகக் கண்காட்சி. சென்னைவாசிகளுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு
மிகப்பெரிய வரப்பிரசாதம். திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் தான் எனக்கு புத்தக்க் கண்காட்சி என்ற விஷயமே அறிமுகம் ஆச்சு.
அப்போது புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாது, நூலகப்
புத்தகங்கள் தான். என் கல்லூரி நூலகத்தில், இலக்கியம், அறிவியல் என
எல்லாத்துறைகளிலும் உள்ள புதுப் படைப்புகளை அவ்வப்போது சேர்த்துக் கொண்டே
இருப்பார்கள். அதனால் புத்தகங்கள் எனக்கு தடையில்லாமல் கிடைத்துக் கொண்டு
இருந்தது. வாரத்திற்கு எனக்கு இரண்டு புத்தகங்கள். அதை இரண்டே நாட்களில்
படித்து விடுவதால் என் நண்பர்களில் நூலக அட்டைகளைப் பயன்படுத்தி புத்தகங்கள்
எடுத்து வந்து படிப்பேன். எல்லாம் தமிழ் இலக்கியம் தான். கல்லூரி மூன்றாம்
ஆண்டு தான் அந்த பெரிய புத்தகக் கண்காட்சி திருச்சியில் நடந்த்து, என் விடுதிக்
காப்பாளர் அருட்திரு. ஜெயசீலன் அவர்கள் எங்களை கண்காட்சிக்கு செல்லச் சொல்லி
அறிவுறுத்தினார். அப்போது தான் நான் முதன் முதலாக அவ்வளவு பெரிய கண்காட்சியைப்
பார்த்தேன். எத்தனை கடைகள், எத்தனை புத்தகங்கள்!!!

படிப்பு முடித்து தஞ்சை வந்தபின் சில காலம் தஞ்சையில் தங்க வேண்டி இருந்த்து
அப்போதெல்லாம் தங்கவேல் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அந்த புத்தக்
கண்காட்சிக்கு செல்வேன். திருமண மண்டபம் என்றதும் ரொம்ப பெருசா நினைச்சுட
வேண்டாம். ரொம்ப ரொம்ப சின்ன இடம், சின்ன கண்காட்சி, நமக்கு தேடல் அதிகமானதால்
அப்போது அந்தப் புத்தகங்களால் தீனி போட இயலவில்லை. மேலும் எது மாதிரியான
புத்தங்கள் படிப்பது, என்னென்ன புத்தகங்கள் படிப்பது போன்ற அறிவும் இல்லை.
புத்தகங்கள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த காலம் அது. அப்போது அறிமுகமானது
தான் ரத்னா புத்தக நிலையம். சிறுபத்திரிக்கை முதல் பல நல்ல புத்தங்களை எனக்கு
அறிமுகம் செய்த இடம். நல்ல புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்ததால் என்னவோ அந்தக்
கடை காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டது.

பிறகு சென்னைப் பயணம். வேலைத் தேடி. சென்ற ஒரு வாரத்தில் விளம்பரம்
பார்க்கிறேன் சென்னை புத்தக்க் கண்காட்சி என்று. இவ்வளவு நாளும், விகடனில்
சுஜாதாவின் வார்த்தைகளிலும், பொதிகை தொலைக்காட்சி செய்திகளிலுமே பார்த்த
கண்காட்சி இப்போது நேரில். ஹைய்யா கண்டிப்பாக பார்த்துவிடலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அப்போது அது நடந்து கொண்டிருந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.
புதிதாக சேர்ந்த வேலை. இரவுப்பணி, வாரம் ஒருநாள் விடுப்பு போன்றவை அந்த வருட
புத்தகக் கண்காட்சியை பார்க்கவிடாமல் செய்து விட்டது. அடுத்த வருடம் கண்டிப்பாக
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருந்த்து. எனக்கு கிடைத்த
அதிகமான மாதவருவாய், என்னை புத்தகங்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்த்து.
அப்போது நான் தேடிய முதல் புத்தகம் ”சே வாழ்வும் மரணமும்”. அந்தப் புத்தகத்தை
என் மாணவப்பருவத்து வழிகாட்டிகளில் ஒருவரான அருட்திரு ஹென்றியின் மேசை மேல்
பார்த்திருந்தேன் மூன்று வருடங்களுக்கு முன். அதைத் தேடித் தேடி அலைந்து
கொண்டிருந்தேன். எங்கே என்ன வாங்குவது என்று தெரியாது அப்போது. அந்தப்
புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தேன். நல்ல தமிழ்ப்புத்தகம்,
கம்யூனிசம் சார்ந்தவை, தீவிர தமிழ் இலக்கியம் போன்ற விஷயங்களைத் தேடனும்னா
லேண்ட்மார்க் வாசலை எட்டிக் கூட பார்க்க்க் கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.
பாடலாசியர் பா.விஜய் கவிதைகளுக்கு(???) கொடுக்கும் முக்கியத்துவம் சுந்தர
ராமசாமி போன்றவர்களுக்கு இல்லை என்று எனக்கு புரிந்து போனது. ஹிக்கின்பாதம்ஸில்
விசாரித்த போது தான் அந்த சே குவேரா புத்தக பதிப்பகத்தின் முகவரி
கொடுத்தார்கள், கோடப்பாக்கத்தில் அந்த பதிப்பகம் தேடிச் சென்று அந்த புத்தக்ம்
வாங்கினேன். அந்த நாட்கள் என்னால் மறக்கவே முடியாத்து. என் வருவாயில்
பெரும்பகுதியை புத்தகங்களுக்கு செலவழித்த நாட்கள் அவை.

அப்போது வந்தது அடுத்த புத்தகக் கண்காட்சி, எனக்கு வரப்பிரசாதமாய். ஒரு வாய்
சோறுக்கு வீடு வீடாய் சென்று பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு எல்லா வீட்டுல
இருந்தும் வந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனியா ஃப்ப்பே முறையில் உணவு கொடுத்தா
எப்படி இருக்கும் அது மாதிரி இருந்துச்சு. நல்ல புத்தகங்கள் தேடி கடைக் கடையா
அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, எல்லோரும் ஒன்னா சேர்ந்து கண்காட்சி நடத்தினா,
நான் திக்குமுக்காடி போயிட்டேன். அவ்ளோ பெரிய கண்காட்சியை என் வாழ்க்கையில
முதல் முறையா அப்போ தான் பார்த்தேன். அவ்ளோ பெரிய இடம் அவ்ளோ கடைகள். ஒவ்வொரு
கடைக்கும் போய் ஒவ்வொரு புத்தகங்களா நின்னு படிச்சு, பிடிச்சதை எடுத்து, ஒரு
நாள் முழுக்க அங்க புத்தகங்களோடு இருந்த நாள் மறக்கவே முடியாது, மறுநாளும்
வந்து மறுபடியும் ஒரு நாள் முழுக்க புத்தகங்களோடு இருக்கும் சுகமே தனி. என்
நண்பன் விழியன் சொல்வது போல் புத்தகங்கள் போதைப் பொருள். மயக்கம் கொடுக்கும்.

இந்த வருடமும் வந்த்து புத்தகத் திருவிழா வழக்கத்துக்கு மாறாக 15 நாட்கள்
முன்னதாகவே. நான் அப்போ காசியில் இருந்தேன். சென்னை வந்ததும் முதல் வேலையா
புத்தகக் கண்காட்சிக்கு தான் சென்றேன். வழக்கம் போல் நேர்த்தியான அமைப்பு, இந்த
முறை நான் ரொம்ப எதிர்பார்த்து போனது அன்னம் பதிப்பகத்துக்கு தஞ்சைப் பெரிய
கோயிலின் ஆயிரமாவது வருஷத்தைக் கொண்டாட ”தஞ்சாவூர்” என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டு இருந்தனர். அப்புறம் நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு
வருஷமும் அற்புதமான நண்பர்களின் வழிகாட்டுதல் படி நல்ல இலக்கியங்கள்
பரிட்சயமாச்சு, ஆனா இந்த வருஷம் நான் போகும் நேரம் பார்த்து ஒருத்தர் கூட ஊரில்
இல்லை. எல்லோரும் புத்தாண்டை ஒட்டி ஊருக்குச் சென்றிருந்தனர். சரி தனியாவே
போகலாம்னு முடிவு பண்ணி நானே களத்தில் இறங்கினேன். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி,
புத்தங்களை சுவாசித்து, வரும்போது நண்பனின் அழைப்பு வந்த்து, தானும் வருகிறேன்
என்றான். வாடான்னு சொல்லிட்டு தேடிக்கிட்டு இருந்தேன். இந்த வருஷம் உருப்படியா
ஒரு காரியம் செஞ்சேன், முதலில் ஒரு சுற்று புத்தங்களின் பெயர்களைக் குறித்துக்
கொண்டு, அப்படியே கடை எண், புத்த்க விலை என எல்லாவற்றையும் குறிச்சுக்கிட்டு
அப்புறம் அதை அலசி ஆராய்ஞ்சு இன்னொரு நாள் போய் புத்தகங்கள் வாங்கியது. பார்த்த
மாத்திரத்தில் வாங்கினால் ஒரு பிரச்சனை, எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்பதும்
தெரியவில்லை, மேலும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு செல்லும் போது சீக்கிரமே
சோர்வடைந்து விடுகிறேன், அதனால் முழுமையாக எல்லாக் கடைகளையும் பார்க்க
முடியவில்லை.

நம்ம புத்திக்கு உலக அரசியல், விடுதலை வரலாறுகள், கம்யூனிசம் சார்ந்த விஷயங்கள்
தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. கூட வந்தவன், இவரோட சிறுகதை நல்லா இருக்கும்,
அவரோட நாவல் நல்லா இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இப்பொ இருக்குற
சேர்மானமும் அப்படித்தான் சொல்லுது. அதான் என்ன வாங்குறதுன்னு குழம்பிப் போய்,
இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம்னு வாங்கிட்டு வந்தேன்.

என்னமோ சொல்ல வந்து என்னமோ எழுதிக்கிட்டு இருக்கேன்... இவ்ளோ பெருசா
எழுதிட்டேன், ஆனா எப்படி முடிக்கிறதுன்னு தெரியல. ம்ம்ம் இதனால் எல்லோரும்
சொல்வது என்னன்னா புத்தகக் கண்காட்சி மிகவும் பயனுள்ளது. எல்லோரும் நல்ல
புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்.

Saturday, January 09, 2010

பயணங்கள் - 2

வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்

Tuesday, December 29, 2009

பயணங்கள்

நகரும் மரங்களின்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது

வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது

மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது

என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...

Wednesday, December 23, 2009

நிகழ்வுகளோடு

வாழ்க்கை எனக்கு எப்போதுமே பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு... நான் அதுல கத்துக்குறது தான் குறைவு. என்னோட வாழ்க்கை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்ன வரைக்கும் நான் தீர்மானிச்சதா தான் இருந்துச்சு. படிப்பு, வேலை, குறிக்கோள், அப்புறம் அதை கைவிட்டது, குறிக்கோள் மாறியது எல்லாமே. ஆனா கடந்த ஒன்னரை ஆண்டுகளாக அதுவும் தொழில் ஆரம்பிச்ச பிறகு எல்லாமே என் கையை மீறிப் போகிற விஷயங்களாகத்தான் இருக்கு. அது என் தொழிலாகட்டும், பண விஷயமாகட்டும், உறவுகளோடு இருக்கும் நெருக்கமாகட்டும், தோழிகளில், நண்பர்கள் என எல்லாமே, எல்லோருமே கொஞ்சம் தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு.

2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.


வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...

Thursday, December 10, 2009

தோழி நினைவுகள் - 1

நேசக்கரங்கள் நீட்டினாய்

இருளின் பிடியிலிருந்து

விடுவித்துக்கொள்ள



ஆதரவுக் கரம்பற்றி

வெளிச்சத்தின் திசைகளை

எட்டிப்பிடித்தாய்


புள்ளியாய்த் தொடங்கிய

வெளிச்சம்

பேரண்டமாய் ஆட்கொண்டது



அங்குல அங்குலமாய்

திசைகளை அளந்தாய்

வெளிச்சத்தின் நீட்சியை

எங்கும் பரவச் செய்தாய்



அளவற்ற அன்பு

உள்ளங்களில் பரவச் செய்தாய்

கண்களிலே கருணை

பொங்கச் செய்தாய்



உன்னைச் சந்திக்கும்

தேதிகளில் எல்லாம்

என் நாட்குறிப்பில்

பூக்கள் பூக்கச் செய்தாய்



வண்ணங்கள் தீட்டப்பட்ட்

ஓவியமாய்

உன்னைச் சந்தித்தவர்கள்

வாழ்க்கை மாறியது



சட்டென்று ஒரு நாள்

தோள்சாய கிடைத்திருக்கிறான்

தோழன் ஒருவன்

ஒன்பதாம் திசையில் இருந்து

என்றாய்

எங்கள் கைகளை

உதறிவிட்டு தனித்துச் சென்றாய்



கணக்கில் வராத அந்தத் திசை

இருளின் அரசாங்கமென

எச்சரிக்க வாயெடுத்தேன்

காதுகளைப் பொத்திக் கொண்டாய்

இப்போது கவிதை எடுத்திருக்கிறேன்

கண்களை மூடிவிடாதே.

Monday, November 23, 2009

தீர்க்கப்படாத கணக்கு

மணிக்கணக்காய்
பேசிவிட்டு
கிளம்பும் போதும்
ஏதோ மிச்சம் வைத்திருப்பதாகவே
தோன்றுகிறது.
கொஞ்சம் சேமித்து வைத்திருக்கும்
முத்தங்களைக் கொடுத்து
கணக்கை தீர்த்துவிட்டு போ


******


இன்னும் கொஞ்சம்
என்று நான் கேட்க
முடியாது போடா
என்று நீ தள்ள
ஹீம்ம்ம்ம்ம்
கோபித்துக் கொண்டு
தள்ளிப் போய்
நாற்காலியில் அமர்ந்தேன்
சிரித்துக் கொண்டே
பின்னால் வந்து
கட்டிக்கொண்டு
இந்தா என்று அள்ளிக் கொடுத்தாய்
முத்தங்களை

Friday, October 30, 2009

நான் - எனது நீட்சி

முட்கம்பிகளுக்குள்
வாழ்க்கையைத் தொலைத்து
தேசம் இழந்து
அகதியாய்
நிர்கதியாய்
நிர்வாணமாய் நிற்கிறது
சொந்தங்கள்
தினம் தினம்
செய்திகள்
இவ்வளவு
படித்த பிறகும்
உன் முத்தத்தின்
தித்திப்பு என்று
கூசாமல் அடுத்த
கவிதை பற்றி சிந்திக்கிறது
சுரணையற்ற மனது


******

நாண்டுக்கிட்டு செத்து போகலாம்டே
என்று மனசாட்சி சொல்கிறது
ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
மாட்டிக்கொண்டு
கூனிக் குறுகி
கையூட்டுக் கொடுத்த
நிமிடங்களை
நினைக்கும் போது

Wednesday, October 14, 2009

வலைப்பக்கத்தில் மூன்று ஆண்டுகள்

நேத்தோட இந்த வலைப்பக்கம் ஆரம்பிச்சு மூனு வருஷம் முடிஞ்சு போச்சு... சம்பிரதாயத்துக்கு ஒரு கவிதையோ இல்லை இது மாதிரி ஒரு அறிவிப்போ போடலாம்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன். நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வண்டியில போகும் போது தான் ஞாபகம் வந்துச்சு. சரி நாளைக்கு போட்டுக்கலாம்னு நினைச்சு விட்டுட்டேன். இன்னிக்கும் மறந்துட்டேன். இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. வலைப்பக்கம் ஆரம்பிச்சு பெருசா ஏதும் சாதிக்கல. நானும் ஒன்னு வச்சிருக்கேன் பாருன்னு மத்தவுங்களுக்கு காட்டத்தான் வலைப்பக்கம் ஆரம்பிச்சேன். என் கல்லூரி கால கவிதைகளில் சிலவற்றை எடுத்து தூசி தட்டி அன்புத்தோழி என்ற பெயரில் கவிதை போட்டேன். கல்லூரி காலத்துல எழுதின பலவற்றை வலைப்பக்கம் ஆரம்பிக்கும் போது பாத்தா பல கவிதைகள் எனக்கு பிடிக்கல. கல்லூரி படிக்கும் போது நான் கவிதை எழுதுவேன்னு மமதையோட திரிஞ்ச காலம் அது. வைரமுத்துவின் சாயல் இருக்கும் கவிதைகளில். நெடிய கவிதைகள் அவை. சென்னை வந்து பெரிய பெரிய ஆட்களின் கவிதைகளைப் பார்த்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். என்னடா இது என்று. நாமெல்லாம் இன்னும் வளரனும் போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டேன்.

கூகுள் குழுமங்களின் அறிமுகம் எனக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுத்த்து. வலைப்பதிவாளர்களைச் சந்தித்த போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் நீ இன்னும் கிழிக்க வேண்டியது நிறைய இருக்குடா என்று... சமீபத்தில் எழுதிய கவிதையை என் குழுமத்து அண்ணன் ஒருவர் பார்த்துவிட்டு சொன்னார். தேறிட்டடா என்று. கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

இப்போ நினைச்சுக்குறேன் டேய் மவனே இன்னும் ஒழுங்கா எழுது.. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு சமூக அக்கறையோட எழுதுன்னு. கல்லூரி காலம் தான் அதிக சமூக அக்கறையுள்ள கவிதைகளைக் கொடுத்தன. அதன் பிறகு வழக்கமான வாழ்க்கையில் சுற்றுத்திரிந்து அதைப் பற்றி மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். சமீபத்தில் எழுதிய கவிதையில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த கவிதை ஈழம் சார்ந்த ”புதைந்து போன கனவுகள்” என்ற கவிதையும், ”கதறல்” கவிதையும் தான். கதறல் கவிதை என்னோட அனுபவம். ஈழம் சார்ந்த அந்தக் கவிதைகளை முடித்த போது ரொம்ப நாளா மனசில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த மாதிரி ஒரு அனுபவம்.

இந்த மூன்றாவது வருடம் எனக்கு நல்ல நண்பர்களையும், என் கவிதைகளையும் படித்து கருத்து சொல்லி நல்லா இருக்குன்னு உற்சாகப்படுத்தின நண்பர்களையும் பெற்றுத் தந்தது. எனக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்கள் எனக்கு மிகப்பெரிய பலம்.

சரி... மீண்டும் அடுத்த வருஷம் நான் என்னத்தை கிழிச்சேன்னு மறுபடி கொஞ்சம் பார்க்கலாம். பை.....

உடைதல்

அந்த சின்னஞ்சிறு
பொம்மை உடைந்து
போனதற்கு
இவ்வளவு வருத்தப்படும்
நீ
கொஞ்சம்
என் மனதையும்
கணக்கில் எடுத்திருக்கலாம்....

Monday, October 12, 2009

நீ - 5

அடித்து
திருத்தி
கிழித்து
எறியப்பட்ட
வார்த்தைகள்
மீண்டும் சேர்க்கச் சொல்லி
கெஞ்சுகின்றன
உன்னைப் பற்றிய
கவிதையில்.


****


இந்த உலகத்திலேயே
நான் அதிகம் நேசிப்பது
உன்னைத் தான் என்கிறாய்
இதைப் பொய்யெனச்
சொல்லிவிட்டு போகிறது
பதிலளிக்காது போகும்
உனக்கான என்
அலைப்பேசி அழைப்புகள்

Thursday, October 08, 2009

நீளும் நாட்கள்

திரும்பிய பக்கமெல்லாம்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....

Thursday, October 01, 2009

அழியாத நினைவுகள்

எத்தனை முறை
அழிக்க முற்பட்டாலும்
மீண்டும் கண் முன்
வந்து நிற்கிறது
வண்டி ஏற்றி
காலை உடைத்த
நாய்க்குட்டியின்
கதறல்

Monday, August 10, 2009

மழையாய்....

உன் கவிதைகளுக்கு
நான் பதிலிடுவதில்லை
என்று கோபப்படுகிறாய்


உன் கவிதைகளின்
ரசிகன் நான்
மௌன ரசிகன்


அமைதியாய் ரசித்து
உள்ளுக்குள் சிரித்து
சிலிர்த்து பத்திரப்படுத்துகிறேன்
உன் கவிதைகளை


சில சமயம் ஆச்சர்யத்தில்
உறைந்து போவதுண்டு
உன் சொல்லாடல்கள் கண்டு


அள்ள அள்ள குறையாத
காதல் உன்னிடமிருந்து
வார்த்தைகளாய்ப் பெருக்கெடுத்து
மழையாய் நனைக்கிறது


நனைகிறவர்கள் அறிவார்களா
அந்த மழை நான் தான் என்பதை

Sunday, August 09, 2009

எதிர்கால இந்தியா

தம்பி வந்து கேட்டான்
எதிர்கால இந்தியா
இது தான் தலைப்பு
ஒரு கவிதை வேணும் எனக்கு

குழம்பித்தான் போனேன்
எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்த போது

குழப்பத்திலேயே தூங்கிப் போனேன்
கனவாக விரிந்தது எதிர்கால இந்தியா

பளபளக்கும் சாலைகள்
விண்ணை முட்டும் கட்டிடங்கள்
சாலைகளிலே தரைக்கு மேலே என
எங்கும் வாகனங்கள்
அளவான இறுக்கமான உடையோடு பெண்கள்
அதே போன்ற உடையில் ஆண்கள்
பரபரப்பான வாழ்க்கை எங்கும் எதிலும்

தொலைப்பேசி அலைப்பேசி இல்லாமல்
காதோடு பொருத்திய குட்டிக் கருவி
தகவல் சுமந்து சென்றது

காற்றில் கணினி விரிந்து
முன்னேற்றம் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்

என்ன சாப்பிடுகிறார்கள் இவர்கள்
சற்றே இக்கேள்வி வந்து
மூளையைக் குடைந்தது

அருகில் இருக்கும் உணவகம் சென்றேன்
வகை புரியா உணவுகள்
விதவிதமான நிறங்களில்

தேடிப் பார்த்தேன்
தூரத்தில் ஒருவர்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்
எனக்குப் பிடித்த சோறு

ஊரைச்சுற்றலாம் என்று நினைத்து
திரும்பிய போது வாகனம் ஒன்று
நெருங்கி நின்றது

அடுத்த ஊருக்குச் செல்லுமாம்
இலவச பயணமாம்
வழியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாமாம்
ஏறி அமர்ந்தேன்

நகரத்தின் பளபளப்பு கொஞ்சமாய் மறைந்து
இயல்பாய் விரிந்தது கிராமத்துச் சூழல்
இறங்கிக் கொள்கிறேன் இங்கே என்றேன்
ஏளனப்பார்வைகள் முகத்தைக் கூறுபோட
கேள்விக்குறியோடு இறங்கிப்போனேன்

என்னென்ன மாற்றங்கள் இங்கே
இருக்கின்றன என்று தேடிய போது

அங்கே உணவுக்காக எலி தேடியபடி விவசாயி......

Tuesday, July 28, 2009

கவிதைகள்

கவிதைகள் என்று
தலைப்பிருந்தாலே
கொஞ்சம் தள்ளி
நின்று கொள்கிறேன் நான்


முதல் சந்திப்பு
என்னவள், காதல் தோல்வி
ஏய் இளைஞனே
என்ற வார்த்தைகள்
ஒவ்வாது போகின்றன.


சபித்துக் கொண்டே
அழிக்கிறேன்
நீண்ட கவிதைகள்
தாங்கிய மின்னஞ்ல்களை


என் கவிதையும்
இன்னொருவருக்கு
இப்படித்தான்
என்று நினைக்கையில்
எழுத எடுத்த பேனாவை
மூடி வைத்துவிட்டேன்