Monday, April 20, 2009

வாழ்த்துகள்



உன் கைப்பிடித்து
நான் முறுக்குகையில்
என் மீசையைப்
பிடித்து இழுத்தாய்
வலி தாங்காமல்
உன் கை விட்ட என்னை
பார்த்து உதடு சுழித்து
பழித்துக் காட்டினாய்...

உறவினர் சிரிக்க,
இரு உன்னை
என்று விரட்டினேன்
ஒளிந்து சுற்றி
ஓடி கொல்லப்புரத்து
மாமரத்தில் ஒளிந்தாய்
சுற்றி வந்து மடக்கினேன்

என் கிடுக்கிப் பிடிக்குள்
வீழ்ந்த நீ
வெளியேற மறுத்து
நெருங்கினாய்...
இதழ்பதிக்க அணைத்தேன்

சட்டென ஒலித்தது கெட்டிமேளச்சத்தம்
நினைவுக்கு திரும்பினேன்
எங்கே இருக்கிறாய் என்று நீ
கண்ணால் கேட்டாய்
சிரிப்புடன் இங்கே தான் என்று
உனக்கு தாலி கட்டினேன்
நம் குடும்பம் வாழ்த்த.....

Friday, April 17, 2009

மழையும் நீயும் -1

இம்முறையும்
பதிலில்லை
நான் ஹாய் சொன்ன
சாட்டிற்கு



இப்போதெல்லாம்

உன் அருகாமை அதிகம்
தேவைப்படுகிறது எனக்கு

நாட்கள் மெல்ல
பின்னோக்கி நகர்கின்றன

நட்பைப் பரிமாறிக்கொண்ட
அந்த முதல் பார்வை

உன் அம்மா போட்டுக்
கொடுத்த அந்த
தேநீர்

உன்னைத் தேடித் தேடி
அலைந்த அந்த
ஐந்தாம் மாடி கூடுகள்

முதல் சண்டையின்
முடிவில் நாம்
கைகோர்த்து நடந்தது

எனக்காக நீயும்
உனக்காக நானும் காத்திருந்து
உணவருந்தியது

எல்லாம் நிழலாய் வந்துபோனது

உன்னைப் பார்க்காமலேயே
இருந்திருக்கலாம்
இத்தனை வலி இருந்திருக்காது

உனக்கான மடலை
எழுதிமுடித்திருந்தேன்
இம்முறையும் பதில்
எதிர்பார்க்கவில்லை

முடித்துவிட்டு
சன்னலோரம் வந்தமர்ந்தேன்
வெளியே ச்சோவென்று
மழை பெய்து கொண்டிருந்தது
என் கண்ணீருக்குத்
துணையாய்

மழையும் நீயும்

மழை எப்போதுமே
தன் சுவடுகளை
விட்டுச்செல்லும் பெய்தபின்பு
அந்தச் சுவடுகள் என் நட்பின்
பக்கங்களை நினைவுபடுத்துகின்றன
எப்போதும்...


*********


அந்த அடைமழையின் முடிவில்
மரங்கள் சேமித்து வைத்த
மழை நீர் மெதுவாய்ச் சொட்டியதைப்
பார்த்த போது
நாம் சேமித்து வைத்திருக்கும்
நம் நட்பின் நாட்கள்
நினைவாய் வந்து போனது எனக்கு...


நிலாச்சோறு



என் பால்யகாலம் பற்றி
உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்
வீட்டில் பால்சோறு செய்து
எடுத்துக்கொண்டு
ஆற்றங்கரை சென்றமர்ந்து
அம்மாவின் கையாலே
நிலாச்சோறு சாப்பிட்டேன்
பொற்காலம் அதுவென்றேன்

இரு இதோ வரேன் என்றாய்
தட்டில் சோறோடு
வந்தென்னை அழைத்துச் சென்று
மொட்டைமாடி இரவில்
உன் நெஞ்சில் சாய்ந்து
நிலா பார்த்த எனக்கு
நிலாச்சோறு ஊட்டினாய்
இன்னொரு தாயானாய் எனக்கு




Monday, February 02, 2009

ஹைய்யா எனக்கு blog விருது கிடைக்கிருக்கு...

ஹைய்யா எனக்கு blog விருது கிடைக்கிருக்கு...


http://soulsez.wordpress.com/2009/01/28/on-a-lighter-note/

Sunday, February 01, 2009

முத்துக்குமார் இறுதி அறிக்கை....

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசையும் அதற்கு துணை பொகம் இந்திய அரசையும் கண்டித்து தீக்குளித்து வீரமரணம் எய்திய சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

Sunday, December 07, 2008

மழை

ஒவ்வொரு வருடமும்
முந்தைய வருடங்களை
நினைத்துப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சோடு
நிறுத்திக்கொண்டோம்...

முந்தைய வருடங்களுக்கும்
சேர்த்து மொத்தமாய்
இந்த வருடம்
கொட்டித் தீர்த்தது
மழை

**********

சுவற்றில் வரைந்து வைத்த ஸ்டம்பு
ரன் அவுட்டுக்கு வைத்திருந்த கற்கள்
எங்களின் விளையாட்டு கால் தடங்கள்
என அனைத்தையும்
மொத்தமாக அள்ளிக்கொண்டு
போனது இன்று அடித்த
புயல்....

**********

பலவருட கணக்குகளை
முடித்துப் போட்டது போல்
பெய்த மழையில்
சேர்ந்து போனது
எங்கள் வீட்டு வெள்ளாடும், கோழியும்....

Monday, November 17, 2008

வண்ணங்களாய்

என் நாட்குறிப்பின்
வண்ணங்கள் சிறகு முளைத்து
சன்னலின் வழியே
காற்றில் கலந்து
வானவில்லாய் விரிந்தது

என் தூரிகையில்
அதை எடுத்து
மீண்டும் என் படபடக்கும்
நாட்குறிப்பில்
கரைத்துவிட முயற்சிக்கிறேன்

கைகளுக்குள் சிக்காமல்
உயரே சென்று
நட்சத்திரங்களாய்
ஒளிர்கிறது
என் எண்ணங்களும், வண்ணங்களும்.....

Wednesday, October 29, 2008

மழை

நீ இல்லாத
வெறுமையின் சூழலை
சூசகமாய் உணர்த்திச் சென்றது
அன்றைய மாலை நேரத்து
மழை...

**********

நாம் கைகோர்த்து
நடந்து சென்ற
மழைக்கால மாலைப் பொழுதை
நினைவு படுத்திச் செல்கிறது
இந்த மாலை நேரத்து
மழை...

**********

மாலை நேரம்
மழைச் சாரல்
சன்னலோரம்
தேநீர் கோப்பை
துணைக்கு.....
உன் நினைவுகள்

***********

என் மழைக்கால
மாலை நேரத்து
மிதிவண்டிப் பயணங்கள்
எல்லாம் முற்றுப் பெறுவது
உன் வீட்டு எதிரில் தான்


************

நீ இல்லாத
தனிமைத் துயரை
மேலும் அதிகரித்தது
இந்தப் பாழாய்ப் போன
மழை வந்து கொட்டிய
உன் வாசம்.....

Tuesday, October 21, 2008

மீண்டும் சந்திப்போம்....

மீண்டும் சந்திப்போம்....

நம் நட்பு
காத்துக்கொண்டிருக்கிறது
நமக்காக
உன்னுடைய இந்த
வார்த்தைகளை
நினைத்து...

Wednesday, October 15, 2008

ரஜினி?????

ரஜினிகாந்த் நேற்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “தனது பெயரில் கட்சி துவக்கினாலோ தனது படத்தை பயன்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் “ என்று தெரிவித்துள்ளார். இதுதான் ஊடகத்தின் சமீபத்திய முக்கிய செய்தி, எந்த செய்தி தொ.காட்சியை திருப்பினாலும் இதுதான் செய்தி, எந்த ஒரு செய்தி இணையத்தை புரட்டினாலும் இதுதான் முக்கிய செய்தி

இந்த முக்கியத்துவத்துக்கு ரஜினி தகுதியானவர்தானா என்ற கேள்வியை நாம் ஒருமுறை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அண்ணாமலை படத்திலிருந்து இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்தின் வெளியீடின் போது இப்படி ரசிகர்களை உசுப்பும்படி ஏதாவது சொல்வது, பிறகு அதை அப்படியே மறந்துவிடுவது. மீண்டும் அடுத்த படத்தின் போது அறிக்கைகள். இதுதான் அவரின் வழக்கமே. தன்னுடைய படத்தின் வியாபார பயன்பாட்டிற்காகவே ரஜினிகாந்த் இதுபோன்ற அறிக்கைகளை விடுகிறார் என்று பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்த வண்ணம் தான் உள்ளது. இதற்கு பதில் சொல்ல அவர் தயாராக இல்லை. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் குசேலன் படத்தின் ஒரு காட்சியில், நீங்கள் திரைப்படத்தில் இப்படி அரசியல் சாயம் பூசப்பட்ட, அல்லது பூடகமாக சில வசனங்களைப் பேசுகிறீர்களே என்று கேட்கப்படும் கேள்விக்கு, படத்தின் வசனகர்த்தா எழுதிக் கொடுப்பதை நான் பேசுகிறேன், இதை என்னுடைய வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வரும். இதை ரஜினி சொல்வதாக ஏற்றுக்கொள்ளலாமா?


1996ல் நடந்த தேர்தலில் ரஜினி நடந்துகொண்ட விதம் அவர் பேசிய பேச்சு, ஜெயலலிதாவிற்கு பாதகமாக அமைந்தது. அவருக்கு அப்போதிருந்த செல்வாக்கு வேறு. ஆனால் 2002-03ம் ஆண்டுகளில் நடந்த காவிரிப்பிரச்சனையில் அவரின் நிலைப்பாடு, நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தது, விமான நிலையத்தில் இருந்து அவர் கொடுத்த பேட்டி, அவரின் மீது பாசம் வைத்திருந்த பல ரசிகர்களை அவருக்கு எதிராக செயல்பட வைத்தது, அப்போது என் விடுதி தோழர்கள் பலர் தன்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்த ரஜினி படத்தை கிழித்தெரிந்த நிகழ்ச்சிகளும் நடந்தன. தன்னுடைய சுயலாபத்திற்காக, வீண் வசனங்கள் பேசி, ரசிகர்களையும், மக்களையும் குழப்புவதே அவரின் வேலை.

ஒரு மனநோயாளியின் பேச்சுக்கு நாம் எந்த அளவிற்கு மதிப்பு கொடுப்போமா அந்த அளவிற்கு தான் நான் ரஜினி பேசும் பேச்சுக்கு மரியாதை கொடுப்பேன். இந்த முறை விடுத்துள்ள அறிக்கையில் கூட தெளிவாக எந்த முடிவும் எடுக்காமல். நான் வருவேன் ஆனா வரமாட்டேன் என்று குழப்பவாதியாகவே தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய திரைப்படங்களிலும், அவர் அவ்வப்போது கொடுக்கும் பேட்டிகளிலும் அவரின் இந்தக் குழப்பத்தை தெளிவாகக் காணலாம்.

அவரின் அரசியல் பார்வையும், நோக்கும் குறுகிய எண்ணம் கொண்டது, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே அரசியலை அவர் பயன்படுத்துகிறார். விஜயகாந்த் கட்சிக்காரர்களால் வடிவேலுவின் வீடு தாக்கப்பட்ட போது எப்படி வடிவேலு தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்றாரோ, அதைப் போன்றது தான் ரஜினியின் நிலைப்பாடும், முன்பு அதிமுக ஆட்சியில்(91-96) இவர் தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் பெருகிவிட்டது என்று பேச, இதனால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட, உடனே அந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக குரல் கொடுத்தார், அடுத்து திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி வந்ததும் தைரியலட்சுமி என்று பாராட்டி, ஜெயலலிதாவை அவர் வீடு வரை சென்று பாராட்டினார். சுயலாப அரசியலின் உச்சகட்டமாக இவரின் பாபா பட ரிலீசின் போது பாமகவினரால் ஏற்பட்ட தொல்லைகளுக்காக அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து தன்னுடைய ரசிகர்கள் வேலை பார்ப்பார்கள் என்று அறிவித்தார். கடைசியில் இவரின் மூக்கு உடைபட்டது தான் மிச்சம், அந்த ஆறு தொகுதிகளிலும் பாமக அமோக வெற்றி பெற்றது. தன்னுடைய அரசியல் செல்வாக்கை அத்தோடு அவர் உணர்ந்து அமைதி காத்திருக்கலாம். இதுதான் இவரின் செல்வக்கு என்று இவரது ரசிகர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு தலைவா வா, தலைமையேற்க வா என்று சுவரொட்டி ஒட்டியே காலம் தள்ளுகின்றனர்.

தலைமைக்கு சரியான ஆள் அவரல்ல என்று அவர் உணர்ந்து கொண்டார் போலும் அதனால் தான் அமைதியாக இருக்கிறார். ரசிகர்கள் எப்போது உணர்ந்து கொள்ளப் போகின்றனரோ???

Monday, October 13, 2008

இன்றோடு இரண்டு வருடம் ஆகிறது...

விளையாட்டாக வலைப்பக்கம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்பிக்கின்றது. ஒரு வலைப்பக்கத்தை இரண்டு வருடம் தொடர்வதே பெருய விஷயமாக கருதுகின்றேன். ஏனெனில் நான் கொஞ்சம் சோம்பேறி, என்ன செய்ய???? மற்ற வலைப்பதிவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். எப்படி இவர்களால் இவ்வளவு எழுத முடிகிறது என்று. என்னை பிரமிக்கச் செய்த சில வலைப்பதிவர்கள், பொன்ஸ், நந்தா, போன்றவர்கள். என்னுடைய கருத்துகள் பல அப்படியே நந்தாவின் கருத்துக்களோடு ஒத்துப்போகும். என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய நண்பர்கள், குறிப்பாக ஜெயக்குமார், நிலாரசிகன், விழியன், அண்ணன் N. சுரேஷ் போன்றோருக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய எண்ணங்களை கட்டுரையாக எழுத பலமுறை நினைப்பதுண்டு, நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் பிறகு பார்க்கலாம், நாளை எழுதலாம் என்று நினைத்தே தள்ளிப்போட்டு பிறகு, நான் எழுத நினைத்த தலைப்போ அல்லது கருத்தோ பழையதாகி விடும்போது, என் எண்ணங்களும் அதோடு சேர்ந்து மடிந்து போகின்றன. இனிமேல் நிறைய பயனுள்ள விஷயங்கள் எழுதவேண்டும். இது தான் நான் எடுத்திருக்கும் இப்போதைய முடிவு. பார்க்கலாம் இதை எப்படி செயல்படுத்துகிறேன் என்று.

Wednesday, October 08, 2008

நீ - 4

நீ பூ கட்ட
போகிறேன் என்றாய்
நான் அடுக்கிக் கொடுக்கிறேன்
என்றமர்ந்தேன்
காதல் மாலை கட்டி
நமக்குச் சூடியது

பைக் பயணங்கள்

நீ இல்லாத

என் பைக் பயணங்களில்

வண்டியின்

பின் இருக்கையில்

அழகாய் வந்து

அமர்ந்து கொள்கிறது

நம் காதல்

Monday, August 25, 2008

ஒலிம்பிக்ஸ் – இந்தியாவின் நிலை

முன் குறிப்பு - இந்த பதிவி எழுதியது ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி... ஆனா இப்போ தான் போட நேரம் கிடச்சுது....


ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ் போட்டின் போதும் இந்தியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் பற்றி ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர், முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் யூகங்களை வெளியிடுவதும், வழக்கம் போல இந்திய வீரர்கள் அங்கே சொத்தப்புவதும், ஒரு வீரர் மட்டும் பதக்கம் வெல்வதும், பின்னர் அடுத்த 4 வருடங்களுக்கு அதை மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஒலிம்பிக்ஸ் பற்றியும், இந்திய குறைந்த பட்சம் 2 அல்லது மூன்று தங்கமாவது வெல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.


பீஜிங் ௨௦௦௮


2008 ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றதிலிருந்து, சீனர்கள் இதை தங்களின் வலிமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக எடுத்துச்செல்ல முடிவெடுத்தனர். ஒவ்வொரு விஷயத்தையும் மிகச்சிரத்தையுடன் செய்து முடித்தனர். எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்தமுறை மிகப்பிரம்மாண்டமாக செய்தனர். இந்த முறை ஆன செலவு 43 பில்லியன் டாலர்கள், இதற்கு முன்பு 2004 ல் நடந்த ஏதென்ஸ் போட்டிக்கு ஆன செலவு 15 பில்லியன் டாலர்கள் மட்டுமே. கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகமான பணத்தைக் கொட்டி மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இந்த ஒலிம்பிக்ஸ், மொத்தம் 32 அரங்குகள், பறவைக் கூடு(Birds Nest) என்று அழைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் தான் துவக்க விழா நடைபெற்றது. இந்த அரங்கம் 36 கிலோமீட்டர் நீளமும், 45000 டன், எடையுள்ள இரும்பைக்கொண்டு செய்யப்பட்டது. உலகமே வியக்கும் வண்ணம் கோலாகலமாக தங்களின் பாரம்பரியத்தைப் உலகிற்கு பறைசாற்றினர். 90,000 பார்வையாளர்கள், 80 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் மூலன் சீன அரசு உலகிற்கு தெரிவிக்க முற்படுவதென்ன?????


நாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல....


சீன அரசு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உரிமைக் கோரியதர்கு முக்கிய காரணம் தாங்கள் சாதாரணமானவர்காள் இல்லை என்று உலகிற்கு பறைசாற்றவே. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத்திருவிழா மூலம் தங்களின் பலத்தை, அரசியல், பொருளாதார பலத்தை மேற்கு நாடுகளுக்கு காண்பிக்கும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தியது. சென்ற முறை ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 32 தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தது சீனா. அமெரிக்கா 36 தங்கங்களை வென்றது. எப்போதும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை இந்தமுறை சீனா கீழே தள்ளிவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 30 வருங்களுக்கு முன்பு இருந்த சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா பல அடி தூரம் முன்னே இருந்தது, ஆனால் இந்த 30 வருடங்களில் சீனாவின் வளர்ச்சி அபாரமானது, இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட சீனா முயன்று வெற்றியும் கண்டிருக்கிறது.


இந்தியாவின் நிலை ஒரு சிறிய ஒப்பீடு


இந்தமுறை வெறும் 56 வீரர்களைக் கொண்ட குழு மட்டுமே இந்தியாவிலிருந்து சென்றிருக்கிறது. சீனக்குழுவின் எண்ணிக்கை 600க்கும் மேல். மொத்தம் 302 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது, இந்தியக்குழு 10 பிரிவுகளில் கூட விளையாடவில்லை. இதில் அரசை தவறு சொல்வதா? இல்லை பொதுமக்களை குறை சொல்வதா? இது வரை 8 ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்த இந்திய ஹாக்கி அணி இந்த முறை ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெறவே இல்லை. கடந்த மூன்று ஒலிம்பிக்ஸ்லில் இந்திய ஹாக்கி அணியின் ஆட்டம் சொதப்பலாகவே அமைந்திருந்தது. வீரர்களையும் குறைசொல்ல முடியாது, சரியான ஆடுகளங்களோ, பயிற்சிக்களங்களோ நம் நாட்டில் கிடையாது, வெளிநாடு சென்று பயிற்சி எடுக்க நம் வீரர்களுக்கு வசதியும் இல்லை, ஸ்பான்சர்சும் கிடைப்பதில்லை. கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை, கால்பந்தை எடுத்துக்கொண்டால் நாம் 130 நாடுகளுக்கு பின்னால் இருக்கிறோம். நாம் இன்னும் நிறைய வளர வேண்டி இருக்கிறது. நாம் விளையாட்டை சிரத்தையுடன் எடுத்துகொள்வதே இல்லை. தமிழகத்தில் குற்றாலீஸ்வரன் என்ற நீச்சல் வீரர் இருந்தார், பல சாதனைகள் புரிந்த அவர் இப்போது இருக்குமிடம் பலருக்கு தெரியாது, ஒரு பத்திரிக்கை சமீபத்தில் அவரைப் பேட்டி கண்ட போது, நீச்சலை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாது அதனால் நீச்சலுக்கு குட்பை சொல்லிவிட்டேன், படிக்கின்றேன் என்கிறார். இங்கு விளையாட்டை விட படிப்பும், வேலை வாய்ப்பும் முக்கியமாக கருதப்படுகின்றது. அரசு விளையாட்டில் சாதனை புரிந்தவர்களை மதிப்பதே இல்லை. ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஸ்பான்ஸர்ஸ் மிகவும் முக்கியம், அப்படி இல்லாதபோது அரசு உதவலாம். ஆனால் இங்கு அப்படி நடப்பதே இல்லை.

இங்கு விளையாட்டிற்கு செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு. ஒவ்வொரு விளையாட்டிலும் அரசியல் கலக்கிறது. இன்று அரசியல் கலக்காத விளையாட்டே இல்லை. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் இரண்டாம் தர நிலையில் தான் உள்ளனர்.


தவறு எங்கே நிகழ்கிறது?


ஒரு சரியான விளையாட்டு உள்கட்டமைப்பு எந்தப் பள்ளிகளிலும் இல்லை. செம்மண் தரையில் தான் இங்கு பல கால்பந்தாட்ட பயிற்சிகளும், ஹாக்கி பயிற்சிகளும் நடைபெறுகின்றன, இயற்கையான புல்தரைகள் கால்பந்தாட்டத்திற்கும், செயற்கைப் புல்தரைகள் ஹாக்கிக்கும் வேண்டும், இங்கு உலகத்தரத்தில் எந்த மைதானமும் கிடையாது. விளையாட்டு அரங்கங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காகவும், கலை நிகழ்ச்சிகளுக்காகவும் ஒதுக்கப்படுகின்றன, விளையாட்டு மேம்பாட்டிற்க்காக ஒதுக்கப்படும் பணம் இடையில் இருக்கும் அதிகாரிகளுக்கு செலவு செய்யப்பட்டு, வீரர்களுக்கு சொற்பமே வந்து சேர்கிறது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்கும் வீரர்களுக்கு போதிய அளவு குண்டுகள் கிடைப்பதில்லை, ராணுவத்தில் இருக்கும் ராத்தோருக்கு தினமும் 250 குண்டுகள் தான் கிடைக்கின்றனவாம்.

பேஸ்பால், கூடைப்பந்து, சைக்லிங்(Cycling), பீச் வாலிபால்(Beach Volleyball), டைவிங்(Diving), பென்சிங்(Fencing), ஜிம்னாஸ்டிக்ஸ்(Gymnastics), டிராம்போலின்(Trampoline), ஹாண்ட்பால்(Handball), என இன்னும் பல விளையாட்டுக்களில் இந்தியா பங்கேற்பதே இல்லை, உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடம், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று, இந்தப் பிராந்தியத்தில் சீனாவிற்கு சவால் விடும் பொருளாதாரம், ஆனால் விளையாட்டில் மட்டும் பூஜ்ஜியம், செக்குடியரசு, ருமேனியா, துருக்கி போன்ற நாடுகள் தங்கம் வெல்லும்போது நாம் மட்டும் பதக்கப்பட்டியலில் பெயர் கிடைக்க போராடுவோம்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பல ஆண்டுகளாக சுரேஷ் கல்மாடி தான் தலைவர் ஆனால், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இது வரை இல்லை, சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் ஒலிம்பிக் நிலை பற்றி புத்தகம் எழுதிய ஆசிரியர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சென்ற முறை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பத்தகம் பெற்ற ராத்தோரின் நிழற்படம் கேட்டபோது தங்களிடம் இல்லை என்றார்களாம், அந்த லட்சணத்தில் இருக்கிறது ஒலிம்பிக் சங்கம்.

நம் வீரர்களிடம் சரியான பயிற்சி இல்லை என்பதே முழுமுதற் காரணம். தேர்வுக்கு சரியாக தயாராகவிட்டால் பதட்டம் ஏற்படும், அந்தப் பதட்டமே தோல்விக்கு காரணம். இறுதிச்சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து வெளியேறியது இந்திய அணி, குத்துச்சண்டை மற்றும் ஜீடோவில் முதல் சுற்றிலேயே தோல்வி. சரியான பயிற்சிக்களங்கள் தான் வீரர்களுக்கு முதல் தேவை. கூடவே அவர்களுக்கு பணமும் தேவை. வேலையோ அல்லது ஊக்கத்தொகையோ தான் அவர்கள் மேலும் உற்சாகத்துடன் உழைக்க உதவும்.

பள்ளிகளில் இருந்தே மாற்றம் தேவைப்படுகிறது. வெறும் கல்வி மட்டும் போதாது, விளையாட்டும் அவசியம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும், பெரிய நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸர் செய்ய முன்வரவேண்டும். அரசியல்வாதிகள் கையிலிருந்து முன்னாள் விளையாட்டு வீரர்களிடம் விளையாட்டு ஆணையங்கள் செல்ல வேண்டும் அப்போதுதான் கொஞ்சமாவது மாற்றத்தை எதிர்பார்க்கலாம், இல்லையெனில் ஏக்கத்துடன் பதக்கப்பட்டியலை பார்க்கவேண்டியது தான்.

Friday, July 11, 2008

அன்புத்தோழி 8ம் வரிசை

என்னை வேரோடு
பிடுங்கி சிலுவையில்
அறைகிறது
நம் சின்னச் சின்ன
சண்டைகளுக்குப் பின்
நீடிக்கும்
நீண்ட மௌனம்

Saturday, June 28, 2008

மதமில்லாத ஜீவன்

26 சூன் 2008 "தி இந்து" நாளிதளில் வந்த செய்தி.... உங்களுக்காக..... இது ஆங்கில வடிவத்தின் மொழியாக்கம்....


மதமில்லாத ஜீவன்



மதமில்லாத ஜீவன், இந்த 58 வார்த்தைகள் கொண்ட பாடம் தான் கேரளாவின் சமீபத்தைய சர்ச்சை.... அதனுடைய மொழியாக்கம் இங்கே......

"தங்கள் குழந்தையுடன் வந்த பெற்றோரை இருக்கையில் அமரச்சொன்ன பின், தலைமையாசிரியர் விண்ணப்பப்படிவத்தை நிரப்பத்தொடங்கினார்....

"மகனே உன்னுடைய பெயர் என்ன?"

"ஜீவன்"

"நல்ல பெயர், அப்பாவின் பெயர் என்ன?"

"அன்வர் ரஷீத்"

"அம்மாவின் பெயர்?"

"லட்சுமி தேவி"

தன்னுடைய தலையை உயர்த்தி தலைமைஆசிரியர் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டார்

"என்ன மதமென்று எழுத?"

" ஒன்றும் இல்லை, மதம் இல்லையென்று எழுதுங்கள்"

"சாதி?"

"அதற்க்கும் அப்படியே எழுதுங்கள்"

தலைமைஆசிரியர் நாற்காலியில் சாய்ந்து கொண்டு கேட்டார்:

"இவன் வளர்ந்தவுடன் இவனுக்கு மதம் தேவைபடுவதாக இவன் உணர்ந்தால் என்ன செய்வது?"

"அப்படி அவன் உணர்ந்தால் அவனுக்கு தேவையான மதத்தை அவனே தேர்ந்தெடுக்கட்டும்...."



இப்படி பெற்றோர்கள் இருந்தால் கண்டிப்பாக சாதிகள் இல்லாத, மதங்கள் இல்லாத இந்தியாவைப் பார்க்க முடியும்... ஆனால் கேரளாவில் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் குறிப்பாக பா.ஜ.கவினர் பாடங்களில் கம்யூனிசக் கருத்துகள் புகுத்தப்படுவதாகக் கூறி மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்....

Wednesday, February 13, 2008

நீ - 3





உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
பூக்களாக மாறி
என் மீது விழுகின்றன
தேவதை உனக்காக
காத்திருப்பதற்கு
ஆசிர்வதித்தபடி

*****

உன் பொண்டாட்டி
என்று முதல்முறை
கையொப்பமிட்ட
உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த
சிரிப்பை பார்க்கமுடியவில்லையே...

*****

உன்னைப் பற்றி
எழுதலாம் என்று
நினைத்து
வார்த்தைகள் தேடுகின்றேன்...
அனைத்துமே உன்னைச்
சிறுமைப் படுத்துகின்றன
புள்ளியோடு முடிந்து போகிறது
கவிதை...

Friday, February 01, 2008

நீ - 2



உனக்காக சேமிக்கப்பட்ட‌
முத்தங்கள் எல்லாம்
சண்டை பிடிக்கின்றன என்னிடம்
எப்போது உன்
காதலியிடம்
எங்களைச் சேர்த்து
முக்திபெறச்
செய்வாய் என்று

*******

உனக்காக எனது
முத்தங்கள் அளவுக்கதிகமாக‌
உற்பத்தி செய்யப்படுகின்றது
சேமிக்கவும் வழி இல்லாமல்
பிறருக்கு கொடுக்கவும் முடியாமல்
தேங்கிக் கிடக்கிறது என்னிடம்
சீக்கிரம் வந்து பெற்றுக்கொள்

******

இந்த முத்தங்களின்
இம்சை தாங்க முடியவில்லை
ம‌ட‌லில் அனுப்புவ‌தால்
என்னிட‌ம் கோப‌ம் கொள்கின்ற‌ன‌
தேவ‌தை உன்னைக் க‌ண்டு
நேரில் கொடுத்தால் தான்
அவை பிறவிப்பயனை
அடையுமாம்....

Saturday, January 26, 2008

சிறகைத் தேடி......

வெறுமையின் கைகளில்
சிக்கிய மனதின்
இறக்கைகள் அறுபடுகின்றது

அறுபட்ட மனதின்
குருதியில் தோய்ந்த
நினைவுகளால்
நீண்டு போகிறது இரவு

இருளின் நீண்ட
கருமையில் இறக்கைகள்
தேடி அலைந்து மீண்டும்
வெறுமையின் கைகளுக்கே
பலியானேன்

நினைவுகளின் சன்னலின்
வழியே தாவிக்குதித்து
பறக்க முற்படுகின்றேன்
எண்ணங்களின் வழியே
வளர்ந்து விரிகிறது
சிறகுகள்.....

Sunday, January 20, 2008

மயிலிறகாய் ஒரு காதல் - இது விமர்சனம் அல்ல

நண்பன் நிலவனிடமிருந்து குறுஞ்செய்தி அவருடைய இரண்டாவது புத்தகம் மயிலிறகாய் ஒரு காதல் இந்த புத்தகக் கண்காட்சியில் இருக்கும் என்று, அவருடைய முதல் புத்தகம் அருமையாக இருக்கும், அந்த எதிர்பார்ப்போடு, புத்தகக் கண்காட்சியில் நுழைந்தவுடன் அவருடைய புத்தகத்தை தான் முதலில் வாங்கினேன்... வீட்டிற்கு வந்ததும் முதலில் அவருடைய புத்தகத்தைப் படித்தேன்.... அருமை... கீழே வைக்கவே தோன்றவில்லை... முழுமூச்சாக புத்தகத்தைப் படித்துவிட்டு தான் நகர்ந்தேன். அதன் பாதிப்புகள் சில நாட்கள் இருந்தன... சில கவிதைகள் மனதை விட்டு அகலவே இல்லை.....

படிக்க ஆரம்பிக்கும் போதே ”உயிரிலே கலந்தவன்” னில் ஆரம்பித்தது நிலவனின் அரசாங்கம்....

“தேவதையை பார்க்க வேண்டும்
என்கிற என் சிறிய
வயது ஆசையை
பூர்த்தி செய்தவள் நீ.
ஆனாலும் உன்னிடம்
ஒன்று கேட்க வேண்டும்..
“நீ என்ன உயிர்
வாங்கும் தேவதையா?”

இதைப் படித்தவுடன் சட்டென்று என்னுடைய உயிர் வாங்கும் தேவதை தான் ஞாபகத்திற்கு வந்தாள்...

இந்தக் கவிதைத் தொகுப்பை நானும் என்னுடைய தோழியும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது... ஒவ்வொரு கவிதைக்கும் என்னுடைய தோழியின் முகத்தில் மலர்ந்த புன்னகையும், குறுநகையும் தான் இவனின் கவிதைக்கு அழகான பரிசுகள்... படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாழ்வோடு பிணைந்த கவிதைகள்...

மழைப்பெண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

பிரிவு -1 என்கிற கவிதையின் வலி பிரிவை சந்தித்தவ்ர்களுக்கு மட்டுமே புரியும்... நாம் அனைவரும் காதலை வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டோம், அதே போல் பிரிவையும்... நம் அனைவருக்கும் இது மிகவும் பிடிக்கும், படிக்கும் போது கொஞ்சம் மனதும் வலிக்கும்....


கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமாடா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?


இதைப் படித்தவுடன் முன்பொருமுறை முத்ததினால் நனைந்த என்னுடைய கன்னங்களைக் கொஞ்சம் தடவிப் பார்த்துக்கொண்டேன்...

காதலிக்கும் அனைவருக்கும் தவிப்பு சொந்தம்... தவிர்த்தலும், தவித்தலும் காதலின் இலக்கணம்... இவை இல்லையென்றால் காதல் இல்லை... இதை அழகாக உணர்த்தியுள்ளார் இந்தக் கவிதையில்....


தவிர்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்


நட்பும் காதலும் கவிதையின் சொல்லாடல் மிக அருமை.... நல்ல வேளை இந்த நிலைமை எனக்கு இன்னும் வரவில்லை... என்னுடைய தோழிகளுக்கு கிடைத்த கணவர்கள் நட்பை புரிந்துகொண்டவர்கள்... காதலையும் நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள்....

”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் கொடுத்து காதலை
சேர்த்து வைக்கத் துடிப்பவன்
நண்பன்.

நண்பனை கைகாட்டி
”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் பறிப்பவன்
காதலன்.


காதலை ரசித்து, சுவைத்து, சுவாசித்து வரும் நிலாரசிகனைக் கேட்டால் இன்னும் காதலி கிடைக்கவில்லை என்கிறார்.... விரைவில் அவருக்கு காதலி கிட்டட்டும்..... இன்னும் நிறைய அவரிடமிருந்து ஒரு தோழனாக எதிர்பார்க்கிறேன்... இன்னும் பல தொகுப்புகள் வர வேண்டும்.. எங்களின் நிலவனை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்....

Monday, January 14, 2008

காதல் பொங்கல்

கரும்பைக் கடித்து
மென்று ரசித்து
சுவைத்து துப்பினாய்
சக்கையாய் விழுந்தேன்
நான்

*****


சக்கரைப் பொங்கல்
வேண்டுமென்றேன்
கொண்டுவருகிறேன்
என்றாய்....
எப்போது புரியப் போகிறது
நான் கேட்பது
உன்னைத் தான்
பொங்கலை அல்ல என்று.....

*****


பொங்கலோ பொங்கல்
என்று உற்சாகமாக
கத்தினாய்
நீ வாழ்த்துவதைக்
கண்ட மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பொங்குகிது
பொங்கல்....

Monday, January 07, 2008

நீ - 1

யாரோ யாரிடமோ
பேசும் வார்தைக‌ள்
மீண்டும் கிள‌றிவிடுகின்ற‌ன‌
ம‌ற‌ந்துபோன
உன் நினைவுக‌ளை...

*****

கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது

புத்தகக் கண்காட்சி - 2008

ரொம்ப நாளாக் காத்துக்கிடந்து இந்த புத்தகக் கண்காட்சிக்குப் சனிக்கிழமை (5-1-08) போனோமுங்க.... ரொம்ப பெருசா இருந்துச்சு... போனமுறை இருந்ததைவிட இன்னும் அதிகமான கடைகள் 500க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குறதா நண்பர்கள் சொன்னாங்க... கண்காட்சிக்கு போறதுக்கு முன்னாடியே நம்முடைய அன்புத்தோழர் நிலாரசிகன் அங்க இருக்குறதா தகவல் வந்திடுச்சு, அவருடைய புத்தகம் "மயிலிறகாய் ஒரு காதல்" வெளியாகியிருக்கு, கடை எண் 5ல் கிடைக்குதுன்னு குறுஞ்செய்தி அனுப்பினார், சென்றவுடன் முதல் வேலையாக அவருடைய புத்தகம் வாங்கி அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கினேன். அவருக்கு என்னுடைய தோழிகளை அறிமுகம் செய்து வைத்தேன்.

பிறகு என்னுடைய தோழிகள் நேரமாகிறது என்று சொன்னவுடன், அவர்களை அனுப்பிவிட்டு நிலாவைத் தேடிச் சென்று அவருடன் இருந்தேன், அப்போ தான் சொன்னார் பெரிய தலைகள் எல்லாம் இங்கே தான் இருந்தன என்று. பிறகு தேடிக் கண்டுபிடித்து, ப்ரியன், பிரேம், அருட்பெருங்கோ, அனிதா, அகிலன், கென்(இன்னும் இருவரின் பெயர்கள் மறந்துவிட்டன) என பெரும் புள்ளிகளை சந்தித்துவிட்டு வந்தோம். மற்றவர்கள் நிலா உட்பட தங்களுடைய வேலையை முடித்து விட்டிருந்தனர்... நாம் தான் பாக்கி, இந்தமுறை புத்தகங்களை நமக்கு பரிந்துரை செய்தது நிலாரசிகன், செல்லமாக எங்களுக்கு நிலவன்.... நீண்ட நாட்களாக நான் தேடிய புத்தகங்களை எனக்கு வாங்கிக் கொடுத்து பெரும் புண்ணியம் தேடிக் கொண்டார், சில புத்தகங்களுக்கு அவர்தான் பணமும் கொடுத்தார், சரி வெளியில் சென்றவுடன் பணம் கொடுத்துவிடுவோம் என்று நினைத்தேன், ஆனால் வெளியில் வந்தபோது எந்தப் புத்தகத்திற்கு அவர் பணம் கொடுத்தார் என்று தெரியவில்லை, அதனால் அமைதியாக வந்துவிட்டேன்... (என்ன நிலா, உங்களுக்கு பணம் திருப்பித் தர வேண்டுமா என்ன?)... இந்த முறை அருமையான தொகுப்புகள்... சீக்கிரம் முடித்துவிட வேண்டும்....

நான் வித்யாவும், விடுதலைப் புலிகளும் பலமாக விற்றுத் தீர்ந்தன, கிழக்குப் பதிப்பகத்தில்.... பயங்கர கூட்டம்...

என்னுடைய தோழி ஒருத்தி இதுவரைச் சந்தித்ததில்லை... என்னுடைய நிழற்படம் அவளிடமும், அவளினுடையது, என்னிடம் இருக்கின்றன... நான் நிலாவுடன் ஒவ்வொரு கடையாக வேகமாக குற்றிக்கொண்டிருந்தோம், அவள் என்னைப் பார்த்துவிட்டு சென்றாளாம், முதல் முறை என்னை நேரில் பார்த்துவிட்டு பயங்கர மகிழ்ச்சியாம், ஆனால் என்னைக் கூப்பிடவே இல்லை... நானும் கவனிக்கவே இல்லை, அவள் விகடன் பதிப்பகத்தாரின் கடையில் பொறுப்பில் இருந்தாலாம், கடைசிவரை நானந்தக் கடைக்கு செல்லவே இல்லை... இதுதான் கொடுமை... என்னை ஞாயிறு அன்று அரட்டையில்( chat) கூப்பிட்டு சொல்கிறாள், பயங்கர கோபம் எனக்கு... என்ன பண்றது???? என்னோட தோழிய தவற விட்டுட்டேன்.... சீக்கிரம் பார்ப்பேன்... அடுத்த வாரமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன்... இந்தமுறை கொஞ்சம் பெரிய செலவு தான்.... அடுத்தவாரம் என்ன ஆகப் போகுதுன்னு தெரியல... கடைசியா, எனக்கு பல புத்தகங்களை பல கடைக்களுக்கு என்னுடன் அலைந்து எனக்கு வாங்கிக் கொடுத்து, பல புதிய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நிலாரசிகனுக்கு ஒரு பெரிய "ஓ"... நன்றி சொல்லுதல் நட்பைக் கொச்சைப் படுத்துதல் என்று நான் நம்புவதால் இந்த "ஓ"

இனம் புரியாத நினைவுகள்.....

தெருவில் குட்டிக்கரணம்
மிதிவண்டி டயரில் ஊர்வலம்
ஓணான் பிடித்து க‌ட்டி வைத்த‌ல்
மொட்டை வெயிலில் ஆட்ட‌ம்
அவ‌ளைப் பிடிக்க‌ மிதிவ‌ண்டித் துர‌த்தல்
விழுந்து எழுந்து கை கால் சிராய்த்தல்
பள்ளிக்கூட வாசலில் ம‌ணிக்க‌ணக்காய் த‌வ‌ம்
க‌டைசிவ‌ரை சொல்லாம‌லே
புதைந்து போன‌ காத‌ல்
ஆசிரிய‌ரிட‌ம் பிர‌ம்ப‌டி
ப‌ள்ளிக்கூட‌த்தின் க‌டைசித் தேர்வு
க‌ல்லூரியின் முத‌ல் நாள்
விடுதியின் உல்லாச‌ வாழ்க்கை
ஒரே த‌ட்டில் சாப்பாடு
விசில‌டித்துப் பார்த்த‌ முத‌ல் ப‌டம்
மீண்டும் பூத்த காதல் பூ
ந‌டுநிசி ந‌டைப்ப‌ய‌ண‌ம்
ம‌லைக்கோட்டைச் சாலையின் தாவ‌ணிக‌ள்
அழுது கொண்டே பிரிந்துசென்ற‌
க‌ல்லூரியின் க‌டைசி நாள்
வேலைக்குச் சேர்ந்த‌ முத‌ல் நாள்
முத‌ல் மாத‌ச்ச‌ம்ப‌ள‌ம்
அதிர‌டியாய் முடிந்த‌ காத‌ல் திரும‌ண‌ம்
காத‌ல் ப‌ரிசின் பிஞ்சுக் கால்க‌ள்
வாழ்க்கையின் வெற்றிப்ப‌டிக‌ள்
வேக‌மான‌ முன்னேற்ற‌ம்
சொகுசாய் வாழ்ந்த‌ வாழ்க்கை
முதுமையின் பிடியில் நுழைவு
ம‌னைவி பிரிந்த‌ த‌னிமை.....

எல்லாம் வேக‌மாய் நினைவுக்கு வ‌ருகிற‌து
ம‌ர‌ண‌த்தின் நேச‌க்க‌ர‌த்தில் சாய்ந்த‌ போது

Thursday, December 13, 2007

அன்புத்தோழி 7ம் வரிசை

நட்பில் மட்டும்
நியாயம் அநியாயம்
பார்க்க முடியாது தான்
உன்னால் உன்னிடம்
கோப‌ப்பட்டு
இப்போது த‌னியே
புலம்பிக் கொண்டிருப்பது
நான்......

********

ஒவ்வொரு காலை
விடியலின் போதும்
அழகாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்...

*******

தினமும் எழுந்தவுடன்
பல் தேய்க்கிறேனோ
இல்லையோ
என்னுடைய
மடிக்கணினியில்
உன் மடல் தேடுகிறேன்...

****

உனக்கு ஆயிரம்
நண்பர்கள் வந்தாலும்
எனக்கான உன்னுடைய
நேசமும் நட்பும்
எப்போதும் அப்படியே....

*****

நம் நட்பை
பரிகசிக்கும் இவர்களை
நினைத்து நான்
வருத்தப்படும் போதெல்லாம்
எனக்கு ஆறுதல் தருவது
உன் புன்னகை மட்டுமே

Monday, November 19, 2007

அன்புத் தோழி 6

வெள்ளிக்கிழமை மாலை
அலுவலகம் முடியும் போது
எல்லாவற்றையும் தாண்டி
மனதில் வந்து
உட்கார்ந்து கொள்கிறது
நாளை உன்னைச்
சந்திக்கப் போகும்
நினைவு......

*******

நீ நீயாகவும்
நான் நானாகவும்
சுயம் இழக்காமல்
இருக்கமுடிவது
நட்பில் மட்டும் தான்

*******

அந்த மாலைவேளை
சாலையோரமாய்
நடந்து கொண்டிருந்தபோது
என் கையைப்
பிடித்துக் கொண்டு
என் தோளில்
நீ சாய்ந்த‌
ஒவ்வொருமுறையும்
புதிதாய் பூக்கள்
பூத்துக்கொண்டே இருந்தன‌
நம் நட்பில்

*******

உனக்கான என்னுடைய
கவிதைகள்
என்னுடைய ஏட்டில்
பத்திரமாக உள்ளன‌
ஒரு முறையாவது
உன்னிடம் படிக்கக்
கொடுக்க வேண்டும்
உன் முகத்தில் மலரும்
சிறு புன்னகையைச்
சேமித்து வைக்க....

*******

Saturday, November 17, 2007

நீ

சிரிப்பிலும்
திமிரிலும்
துள்ள‌லிலும்
ந‌டையிலும்
எல்லாப் பெண்க‌ளும்
உன்னை ம‌ட்டுமே
நினைவு ப‌டுத்துகிறார்க‌ள்

----

உன்
அழகான‌
திமிரெல்லாம்
எங்கே போய்
ஒளிந்து கொள்கின்றன‌
என்னிடம் நீ
குழந்தையாக‌
மாறும் போது

Saturday, October 13, 2007

பிரிவு

கைகள் படபடக்க, கண்களில் நீர்த்துளி சுமந்து, கழுத்தில் புதிதாய் தொங்கும் மஞ்சள் கயிறோடு, மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்க்கிறாய். ஒரேயொரு கேள்வியை மட்டும் சுமந்து கொண்டிருந்தது அந்தப்பார்வை, அது "உன்னால் மட்டும் எப்படி இப்போது சிரிக்க முடிகிறது?"

நேற்று இரவு நடந்தது உனக்குத் தெரிந்தால் நீயும் சிரிப்பாய், உன்னைப்பற்றி எழுதப்பட்ட என்னுடையக் கவிதைகளை தற்செயலாய் என்னுடைய அறையில் பார்த்துவிட்டான் உன்னுடையக் கணவன், சிரித்துக்கொண்டே பார்த்த அவனிடம் நீ எனக்குத் தீட்டிய கடிதங்களையும் கொடுத்தேன். பொறுமையாக படித்து முடித்து விட்டு அர்த்தம் பொதிந்த புன்னகையோடு உடைந்து போயிருந்த என்னைப் பார்த்த அவன் " எத்தனை உயர்வானது உங்களுடைய நட்பு, எனக்கு இதுபோல் தோழி அமையவில்லையே... கவலைப்படாதீர்கள் உங்களுடைய நட்பிற்கு என்னால் எந்த பாதிப்பும் வராது" என்று சொன்னான்.

கழுத்தில் மஞ்சள் கயிறு, கையில் மாலை, கலங்கிய கண்களுடன் நீ என்னைப் பார்க்கிறாய், சிரிப்போடு நான். உன் கணவனே உன்னிடம் இன்று சொல்லிவிடுவான், குழந்தையின் குதூகலத்தோடு நீ நாளை என்னனப்பார்க்க அவனோடு வரப்போவதை நினைத்து இன்னும் அதிகமாக சிரிக்கிறேன் நான், இன்னும் அதிகமாக அழுகிறாய் நீ.....

Tuesday, October 09, 2007

சேகுவேரா நினைவுநாள்


இன்று தோழர் சேகுவேராவின் நினைவுநாள், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுதும் போராடிய மாபெரும் புரட்சியாளர். அவரை இன்று நினைவு கூர்வோம். வாழ்ந்தால் இவரைப் போல வாழவேண்டும்.

Monday, September 17, 2007

விடியல்

தலைமுறைகளைத் தாண்டியும்
வேர்களைத் தேடி
அலைகிறது மனம்

ஆண்டுகள் பல கடந்த பின்னும்
கண்திரைகளுக்குப் பின்னால்
இன்னும் இடிபாடுகளின் மிச்சங்கள்

நீண்ட இரவுகளில்
தூக்கம் கலைக்கிறது
நினைவுகளாய் எழும்
குண்டுகளின் சத்தம்

தொலைந்து போன உறவுகளின்
முகவரிகளைத் தேடி
தொடர்கிறது பயணம்

என்றாவது ஒருநாள்
சொந்த பூமியில்
என்னுடைய விடியல்
துவங்குமென்ற நம்பிக்கையில்
தொடர்கிறது பயணம்...

Tuesday, September 11, 2007

இணைய‌த‌ள‌ம்

பரபரப்பான வாழ்க்கையின்
நடுவே மறந்து போன‌
உன் முகத்தை
மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து
அரிதாய் வ‌ந்த
உன்னுடைய‌ மின்னஞ்ச‌ல்


தொலைந்து போன‌
ப‌ழைய‌ முக‌ங்க‌ளை
அரிதாய் க‌ண்டெடுக்கிறோம்
எப்போதாவ‌து ந‌ட‌க்கும்
சாட் அர‌ட்டைக‌ளிலும்
மின்ன‌ஞ்ச‌ல் உரையாட‌ல்க‌ளிலும்


அம்மா‌வின் க‌ண்ணீரையும்
த‌ங்கையின் குழ‌ந்தையையும்
ம‌னைவியின் காத‌லையும்
அப்பாவின் சிரிப்பையும்
த‌ம்பியின் அர‌ட்டையையும்
மின்ன‌ஞ்ச‌ல்க‌ளில் ம‌ட்டுமே
ர‌சிக்க‌ முடிகிற‌து
பிழைப்புக்காக‌ வ‌ந்த‌ தூர‌தேச‌த்தில்....

Saturday, September 01, 2007

அன்புத்தோழி 5

நெரிசலான கடைத்தெருவில்
யாருடைய கண்ணிலாவது
பட்டுவிடுவோமோ என்று
பயந்து கொண்டே
ஐந்தங்குல இடைவெளியில்
நடந்து செல்வார்கள் காதலர்கள்
நெருக்கமாக கைகளைக் கோர்த்தபடி
நடந்து செல்வார்கள் நண்பர்கள்...

-------


ஒவ்வொரு முறை

நாம் சந்திக்கும் போதும்
பேசிக்கொள்ள எவ்வளவு விஷயங்களைப்
பொத்திப் பொத்தி
சேகரித்து வைத்திருக்கிறோம் நாம்!

-------


நாம் பார்த்துப் பேசி

ப‌ல‌ நாள் ஆனாலும்
உன்னைச் ச‌ந்திக்க‌
இன்னொரு ம‌ழைக்கால‌
மாலை வேளைக்காக‌
காத்திருக்கிறேன்....

பால்யகாலம்

கைகளுக்குள் சிக்காத
காற்றை என் சட்டைப்பையில்
பிடித்து வைத்து

வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்களைக் கொண்டு
படங்கள் வரைந்து

குளத்துக்கரையில் தூண்டில்
போட்டு மீன் பிடித்து

மொட்டை வெயிலில்
சைக்கிள் டையரை வைத்து
ஊர் சுற்றி

கருவேலங்காட்டுக்குள்
ஓணான் பிடித்து

ஊரின் புழுதியெல்லாம்
நம் சட்டையில் இருக்க

இருட்டிய பிறகு
வீட்டிற்கு வந்து
அப்பாவிடம் அடி வாங்கி

கவலை மறந்து
உறங்கிய பொழுதுகள்

இன்றும் பசுமையாய்
நெஞ்சின் மூலையில்...

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தின‌
வாழ்த்து அனுப்ப
கைப்பேசியில்
வேகமாய்ச் சுழன்றது கை,
ம‌ணி ப‌ன்னிரெண்டைத் தொட்ட‌தும்
கைக‌ளில் த‌ய‌க்க‌ம்
ம‌ன‌தில் உறுத்த‌லாய்
குறுஞ்செய்திக் க‌ட்ட‌ண‌ம்
25 பைசா...

Wednesday, June 13, 2007

ஹெல்மெட் தலைகள்

நம்ம ஊருல எதையுமே சட்டமா கொண்டு வந்தாதான் செய்வேன்னு அடம்புடிக்கிறாய்ங்க... இன்னிக்கி(ஜீன்‍ 1) சென்னையில எங்க பாத்தாலும் வெறும் ஹெல்மெட் தல தான். இன்னிக்கு பல வேலை இருந்ததனால் அதிகாலையில 11 மணிக்கு எழுந்திருச்சி(என்ன மாதிரி பிபிஓ வில வேலை பாக்குறவங்களுக்கு அதுதான் அதிகாலை) செல்போன் பில் கட்ட கிளம்பி வெளியில போனா எல்லா பயலுவ தலையிலும் கறுப்பு கலர்ல என்னமோ இருக்குது, என்னடா இது அதிசயம்னு யோசிக்கிறப்ப கூட வந்த பயபுள்ள சொன்னான் மாப்பு இன்னிக்கி ஜூன் 1 அதுதான் எல்லாப் பயலுகளும் இப்படி திரியுறாங்கன்னு. சரிதான்னு பஸ்ஸ புடிச்சி அண்ணா சாலை வந்தா, எனக்கே ஆச்சர்யம் எல்லாரும் ஹெல்மெட்டும் தலையுமா வண்டியில போறாங்க... பலபேரு வண்டியில பின்னாடி இருக்குறவனும் தலையில கவசத்தோட போனாங்க... "என்னக் கொடுமை சரவணன் இது"ன்னு நானும் நம்ம நட்பும் உணர்ச்சிவசப்பட்டுட்டோம். நம்ம ஊருல சட்டத்த இப்படி மதிக்கிறாங்களே. இப்படி எல்லா விதிமுறைகளையும் கடைபிடிச்சா நம்ம எங்கேயோ போயிடுவோமேன்னு அப்படியே கனவுல மூழ்கிட்டேன்.

பஸ் ஸ்டாப்புல‌ இற‌ங்கி அப்ப‌டியே கொஞ்ச‌ம் ந‌ட‌க்கும் போது ஹெல்மெட் விக்குற‌ க‌டைய‌ பாத்தா, தீபாவ‌ளி நேர‌த்து ச‌ர‌வ‌ணா ஸ்டோர்ஸ் க‌ண‌க்கா கூட்ட‌ம் அள்ளுது, ச‌ரி ந‌ம்ம‌ ப‌ய‌லுவ‌ எப்ப‌வுமே க‌டைசி நேர‌த்துல‌தான் வேலை செய்வானுங்கனு விட்டுட்டோம். ச‌ரி இப்ப‌வாவ‌து திருந்துனாங்க‌ளேன்னு, இத‌ கொஞ்சா நாளைக்கி செஞ்சிப்புட்டு அப்புற‌ம் ம‌றந்துறாம‌ இருந்தா ச‌ரிதான்.

Wednesday, May 23, 2007

அன்புத்தோழி 4

நாம் சண்டைப்போட்டு
பேசாமலிருக்கும்
ஒவ்வொரு முறையும்
அர்த்தமற்று போய் விடுகிறது
நம் இத்தனை வருட‌
புரிதலும் நட்பும்

------

நான் தேடித் தேடி
பதில் தெரியாமல்
தொலைந்து போவது
உன்னுடைய அர்த்தம் பொதிந்த
அந்த "ஒண்ணுமில்லை"
என்ற வார்த்தையில் தான்

Wednesday, May 02, 2007

அன்புத்தோழி 3


ஒன்றாகச் சேர்ந்து
ஊர் சுற்றுவதும்
மடல் முடிக்கும்போது
"With Lots of Love" என்று முடிப்பதும்
சந்தித்துக் கொள்ளும் போது
கட்டிப்பிடிப்பதும்
நட்பிலும் நடக்கும் என்றால்
நம்ப மறுக்கிறார்களே ஏன்

நாங்கள் நம்புகிறோம்

விடியலின் வேர்கள்
முளைவிட்ட சமயத்தில்
இருட்டின் இரும்புக்கரங்கள்
நம்மைச் சிறைப்பிடித்தன‌


பழமைவாதிகளின்
புளித்துப்போன சித்தாந்தங்கள்
நம் இளமைவேகத்திற்கு
அணை போட்டுவிட்டன‌


அவர்களின் பழைய பல்லவிகள்
நம் தோழிகளின்
சிற‌குகளை ஒடித்துப்போட்டன‌


ஊழ‌லின் விழுதுக‌ள்
ந‌ம் எதிர்கால‌த்தின்
க‌ழுத்தை நெரிக்கின்ற‌ன‌


ல‌ஞ்ச‌த்தின் நாச‌க்க‌ர‌ங்க‌ள்
ந‌ம் க‌ன‌வுக‌ளை
க‌ல்ல‌றைக்கு அனுப்புகின்ற‌ன


இந்த‌ப்பிழைக‌ளுக்கு
நாம் திருத்த‌ங்க‌ளாவோம்


ப‌ழ‌மைவாதிக‌ளே கேளுங்க‌ள்

ஒடிக்க‌ப்ப‌ட்ட‌
எங்க‌ளின் சிற‌குக‌ளை
ஒட்ட‌வைக்கும் க‌லையை
நாங்க‌ள் க‌ற்றுக்கொண்டிருக்கிறோம்

தடுப்பணைகளை
தகர்த்தெரியும் வேக‌த்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்



எங்க‌ளுக்குத் தெரியும்
இந்த‌ப் ப‌ழ‌மைவாதிக‌ள்
த‌ங்க‌ள் அனுப‌வ‌த்தைச் சொல்லி
எங்க‌ளை ந‌சுக்கி விடுவார்க‌ள் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
ம‌ல‌ர்மாலைக‌ள் அல்ல‌
முள்கிரீட‌ம் தான்
எங்க‌ளுக்கு அணிவிக்க‌ப்ப‌டும் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
நாங்க‌ள் சாதியின் பெய‌ராலும்
ம‌த‌த்தின் பெய‌ராலும்
ஒடுக்க‌ப்ப‌டுவோம் என்று

ஆனால்
நாங்க‌ள் உண‌ர்ந்திருக்கிறோம்
இந்த‌ ச‌மூக‌ மாற்ற‌த்திற்கான‌
க‌ருவிக‌ள் நாங்க‌ள் தான் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்
இருட்டின் பிடியிலிருந்து
இந்த‌ச் ச‌முதாய‌த்திற்கு
வெளிச்ச‌த்தின் சிற‌குக‌ளை
கொடுக்க‌ முடியும் என்று

சாதிய‌ வேர்க‌ளை அறுத்தெரிந்து
ச‌ம‌த்துவ‌ம் ப‌டைக்க‌முடியும் என்று
ல‌ஞ்ச‌த்தின் செய‌ற்கை சுவாச‌த்தை
நிறுத்தி புத்துல‌கு காண‌முடியும் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்

Monday, April 23, 2007

அன்புத் தோழி 2

எங்கேயோ தூரமாய்

எங்கேயோ தூரமாய்
இருந்து கொண்டு
மின்னஞ்சல்களில்
ஹாய் சொல்லிப்
பழகி விட்டோம்

"ஹாய்"க்கும் "பை"க்கும்

நடுவில் சிக்கித்
திணருகிறது
நம் வாழ்வு

நாம் பேசிய பேச்சுக்கள்

மட்டுமே நம் நினைவுகளின்
எச்சமாய் என்
செவிப்பறைகளில் மோதுகிறது

அலுவலக சிற்றுண்டிச்சாலையும்,

வரவேற்பறையும், பழச்சாறுக்கடையும்
"காப்" பயணங்களும்,
ஸ்பென்சர் பிளாசாவும்
கவிதைகளும் அடிக்கடி
உன்னை நினைவுபடுத்துகின்றன‌

சீக்கிரம் வா உன்னைச் சந்திக்கவேண்டும்

காதலியின் பிரிவுகூட‌

என்னை இப்படி
வாட்டியதில்லையடி
என் தோழி...

Saturday, March 24, 2007

இந்தியா படுதோல்வி

இந்த உலகக்கோப்பை இந்தியாவுக்குத் தான் அப்படீன்னு எல்லோரும் சொன்னப்ப நானும் ரொம்ப சந்தோசப்பட்டேன்... ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனா இல்லாம கொஞ்சம் நம்ம அணியோட பலத்தையும், பலவீனத்தையும் அலசி பாத்தப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன், நம்ம அணி தேறுமான்னு சந்தேகம் வந்துச்சு... ஆனா குறைந்தபட்சம் அரையிறுத்திக்காவது வருவாங்கன்னு நினைத்தேன். ஆனா நம்ம பசங்க வழக்கம் போல கவுத்துட்டாங்க. முதல்ல பங்களாதேஷ் கிட்ட தோத்தப்ப சரி நம்ம ஆளுங்க கொஞ்சம் அதீத நம்பிக்கையோட ஆடி கவுந்துட்டாங்க பரவயில்லை அடுத்த ஆட்டங்களில் பட்டைய கிளப்புவாங்கண்ணு பாத்தேன் நினைச்ச மாதிரி பிர்முடாவை காலி பண்ணினாங்க ஆனா அந்த ஆட்டத்துலயும் நம்ம பந்துவீச்சு சொதப்பலாவே இருந்துச்சு... சரி அடுத்து இலங்கையையும் காலிப் பண்ணிட்டு அடுத்த சுற்றுக்கு போவாங்கன்னு பாத்தா நேத்து பெருசா நமக்கு நாமம் போட்டுட்டு போய்ட்டாங்க...

யாரிடம் தவறுள்ளது? கிரிக்கெட் வாரியத்தில் ஆரம்பித்து, பயிற்சியாளர், அணித்தலைவர், விளம்பரத்தில் மட்டுமே நன்றாக விளையாடும் வீரர்கள்ன்னு பட்டியுல் நீளுது... ஆனா முக்கியமான காரணம் என்ன? பணம்... அவர்களுக்கு கொட்டிக்கொடுக்கப்படும் பணம்... விளையாடினாலும், இல்லாவிட்டாலும், அவர்களுக்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் பணம்... 10 ஆட்ட‌ங்க‌ளில் ஒழுங்காக‌ விளையாடினால் அவ‌ரை ர‌சிக‌ர்க‌ள் த‌லையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்க‌ள். பிற‌கென்ன ப‌ண‌ம் கொட்டுகிற‌து....

விளையாடும் போது வெற்றி பெற‌வேண்டுமென்ற‌ வெறி இருக்க‌ வேண்டும்... ந‌ம் அணி வீர‌ர்க‌ளுக்கு அது சுத்த‌மாக‌ கிடையாது... ச‌ச்சின் போன்ற‌ வீர‌ர் க‌ள‌மிற‌ங்கின‌ல் எதிர‌ணி வீர‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் ஏற்ப‌ட‌ வேணும் அந்த‌ அள‌வுக்கு அவ‌ர் விளையாட‌ வேண்டும். ஆனால் அவ‌ர் அப்ப‌டி விளையாடி ப‌ல‌ மாத‌ங்க‌ளாகி விட்ட‌ன‌... யாரைக் குறை சொல்ல‌?

ஆனால் இது போன்ற‌ ஒரு தோல்வி தேவைதான்... இனிமேலாவ‌து ந‌ம்முடைய‌ க‌வ‌ன‌ம் ஹாக்கி, கால்ப‌ந்து போன்ற‌ விளையாட்டுக‌ளில் போனால் ப‌ர‌வாயில்லை...

Tuesday, January 16, 2007

புத்தகக் கண்காட்சி

இந்த வருடம் தான் முதல் முறையாக சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். மிக அருமை... எங்க ஊர்ல புத்தக கண்காட்சினு சொல்லிட்டு ஒரு சின்ன இடத்துல வச்சிருப்பாங்க... இங்க வந்து பார்த்தா.. அம்மாடியோவ்... எவ்வளோ பெருசு... எத்தனை புத்தகங்கள்... ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, நல்ல வேளை எப்போதும் காலியாகவே இருக்கும் இன்னுடைய பர்ஸிலும், பாக்கெட்டிலும் பணம் இருந்தது( இந்த புத்தக கண்காட்சிக்காகவே இந்த மாச சம்பளத்த செலவு பண்ணாம வச்சிருந்தோம்ல..), போய் நிறைய புத்தகங்கள் வாங்கினேன், சே குவேரா வரலாரு முதல், தபூ சங்கர் கவிதைகள் வரை நிறைய வாங்கினேன்... மனசுக்கு கொஞ்சம் திருப்தி...

புத்த‌க‌ க‌ண்காட்சி வாச‌லுக்குள் நுழையும் போது விழிய‌னை ச‌ன்திக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தோடு தான் சென்றேன்... ஆனால் அங்கிருந்த‌ புத்த‌க‌ங்க‌ளைப் பார்த்த‌வுட‌ன், என்னையும் ம‌றந்தேன், விழிய‌னையும் ம‌றந்தேன்.. வீட்டுக்கு வந்த‌வுட‌ன் தான் என‌க்கு விழிய‌ன் ஞாப‌க‌மே வ‌ந்த‌து...

அப்புறம் எழுத்தாளர் ஞாநி அவ‌ர்களைச் சந்தித்து உரையாடினேன், தபூ சங்கரை சந்தித்தேன், ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களையும் சந்தித்தேன்... மறக்க முடியாத நாள் அது... மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்...

Friday, January 05, 2007

காகம்


காகம்


மௌனம்
கலைக்கிறது காகம்
அதற்குத் தெரியுமா
நம் மௌன அஞ்சலியின்
அர்த்தம்